சோ என்கிற மனிதர் - மணா ****

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:35 | Best Blogger Tips
Image may contain: 1 person, smiling

திரு. சோ அவர்களின் மூன்றாவது நினைவுதினம் இன்று.

ஜெயலலிதா மறைந்த இரண்டு தினங்களில் அவருடைய மரணம்.

மருத்துவமனையில் கழிந்த சோ அவர்களுடைய இறுதிநாட்களில் அவரைச் சந்தித்த தருணங்கள் நினைவில்.
Image may contain: 1 person, smiling
அவர் மறைந்த மறுதினம்இந்து தமிழ்நாளிதழில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு:

சோ என்கிற முக்கியமான ஆளுமையை ஒரு நாடக இயக்குநராக, வசன கர்த்தாவாக, நடிகராக, இயக்குநராக, பத்திரிகையாளராக, அரசியல் விமர்சகராகப் பலவிதத்தில் பார்க்கலாம்.

இவற்றில் பல வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவை.
இதைவிட ஒரு மனிதராக சோ எப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொந்த அனுபவங்களின் பின்புலத்தோடு விவரிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
Image may contain: 2 people, people standing
#
எந்த ஒரு மனிதரையும் நான் பார்த்ததும் நம்பிவிட மாட்டேன். அவரைத் தொடர்ந்து கவனிப்பேன். எந்ததெந்த சமயங்களில் எப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்து அவரைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவேன்.

அப்படியொரு முடிவுக்கு நான் வர ஒரு வருஷமோ அல்லது இரண்டு வருஷங்களோ கூட ஆகலாம். ஆனால் அவரைப் பற்றி நானே சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்தபிறகு அதை மாற்றிக் கொள்ள மாட்டேன்.

யார் வந்து அவரைப் பற்றி என்ன சொன்னாலும், சட்டென்று என்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். பெரும்பாலும் என்னுடைய இந்தக் கணிப்பு பொய்த்ததில்லை.’’

-இது அவருடைய நண்பர்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது துக்ளக் ஆசிரியரான சோ சொன்னவை.

அவருடைய உலகத்தில் நண்பர்களுக்குத் தனியிடம் இருப்பதைப் பார்க்க முடியும்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது அவருக்குப் பழக்கமான நண்பர்கள் அவருடைய இறுதிக்காலம் வரை அதே நெருக்கம் மாறாமல் அவரைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
Image may contain: 1 person, text
நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் போதும் கேலி, கிண்டல் என்று ரகளை தான்!

துக்ளக் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அதில் பப்ளிஷராக இருந்தவர் சோ-வுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ரெங்காச்சாரி. ஒளிவு மறைவில்லாத அன்பான மனிதர்.

ஒருமுறை துக்ளக் ஆண்டுவிழா சென்னையில் நடந்தபோது அதன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவர் சோ-வுக்கு நெருக்கமானவரான பிரதமர் சந்திரசேகர்.

மேடையில் விழா முடிந்து தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு சந்திரசேகர் மேடையைவிட்டு இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ரெங்காச்சாரி.

டேய்.. சோஇங்கே பார்றா’’

அவர் கவனிக்காததால் திரும்பவும் கூடுதல் சத்தத்துடன் கத்தினார்.

அருகில் இருந்த நான் ரெங்காச்சாரியிடம் சொன்னேன். “என்ன தான் பழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில்வாடா..போடா’’ என்று கூப்பிடுவது நன்றாக இருக்கிறதா? அதிலும் சத்தம் போட்டு இப்படிக் கத்துகிறீர்களே?’’

கேட்டவுடன்சுருக்கென்று கோபம் வந்துவிட்டது ரெங்காச்சாரிக்கு.

மடமடவென்று என்னுடைய கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப் போனார் அதற்குள் மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றிருந்தார் பிரதமர் சந்திரசேகர்.

போனவுடன்நான் உன்னைவாடான்னு கூப்பிடுறதை, அதிலும் பொது இடத்தில் கூப்பிடுறதைஅப்ஜெக்ட்பண்றதை என்னால் தாங்க முடியலை.

உன்னை எந்த இடத்திலும் அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கா? இல்லையா? நீ சொல்லு’’ – என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு ரெங்காச்சாரி சொன்னதும் வழக்கமான குபீர்ச் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார் சோ.

இவன் கிட்டே போய் ஏன் அப்படிக் கேட்டீங்க? இவனால் தாங்கிக்க முடியுமா? இங்கே. மட்டுமில்லை, எந்த இடத்தில் எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரண்ட்ஸ்வாடாபோடான்னு கூப்பிடுறதுக்கு அவங்களுக்கு முழு உரிமை இருக்குஎன்னப்பாபோதுமா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?’’ – 

சொன்னபடி உதட்டைச் சுளித்ததும் ரெங்காச்சாரி முகத்தில் அப்படியொரு ஆனந்தம்!

உங்க குருன்னு யாரையாவது சொல்வீங்களா?’’

இருக்கான். அவன் பெயர் நானி. பெங்களூர்லே இருக்கான். அவனோட முழுப்பெயர் நாராயணசாமி’’

-இப்படிசோவால் குருபக்தியுடன் வர்ணிக்கப்பட்ட நானியை பெங்களூரிலிருந்து குமுதம் இதழில் நான் தொகுத்து எழுதி வந்தஒசாமஅசாதொடருக்காகச் சென்னைக்கு வரவழைத்திருந்தார் சோ.

நானியைப் பார்த்ததும் ஏக சந்தோஷம் அவருக்கு. மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையிலும் குஷியாகத் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சோ. பின் ஸீட்டில் நானியும், நானும். கடலோரத்தில் இருக்கிற வீட்டிற்கு நகர்ந்தது கார்.

டேய்.. நிஜமாவா சொல்றே.. உன்னைப் பற்றி என் மனசில் இருக்கிறதெல்லாம் சொல்லிறவா? அப்படின்னா எதைச் சொல்றது? எதை விடுறது? இவர் வேற டேப் ரிக்கார்டைக் கையில் வைச்சிருக்கார்.

அப்புறம் எல்லாம் ரெக்கார்டு ஆயிடும். சொல்லிறவா? என்று சொன்ன நானி சில பீடிகைகளையும் போட ஆரம்பித்தார்.

இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்த சில குறியீட்டுச் சொற்களைச் சொல்லிஎல்லாத்தையும் சொல்லிறவா?” என்று சஸ்பென்ஸை உருவாக்கிப் புன்னகைத்தார் நானி.

நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் சொல்லிட்டு வா. இவர் ரிக்கார்டு பண்ணிப்பார். அப்புறம் அதை எடிட் பண்ணிக்கலாம். சரி.. ஆரம்பிப்பா’’ – என்று சிரிப்புப்பொங்க காரை ஓட்டியபடி சொன்னார் சோ.

அடுத்த மூன்று மணி நேரம் வரை செமையான ரகளை தான்.

நானி பயங்கர முகபாவத்துடன் சில சம்பவங்களை விவரிக்க ஜாலியாக அதற்கு சோரீயாக்ட்செய்ய அந்தத் தருணத்தை லேசில் மறக்க முடியாது.

அவருடைய குசும்புகள், சேட்டைகள் 
எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டுஇவன் அப்படி.. இப்படி’’ என்று அமர்க்களமாகப் போட்டுக் காய்ச்ச, காதில் தேன் பாய்ந்த அனுபவத்துடன் ஏகானந்தமாக அதை ரசித்துக் கொண்டே வந்தார் சோ.

அப்புறம் அதை ஒருவழியாகஎடிட்பண்ணி அந்த அனுபவங்கள் இரண்டு வாரங்களாக வெளியானது.
இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது அவருக்கு பெரும் பாக்கியம்!

கிண்டலும், குத்தலும் அவருக்கு இயல்பின் ஒரு பகுதியைப் போலவே மாறிவிட்டிருந்தன.

அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களிடமும் அது அடிக்கடி பீறிட்ட படி இருக்கும்.

ஒரு சமயம் துக்ளக் ஆபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் ஒரு வாரத் தாடியுடன் சோகமான தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தார்.

மதிய நேரத்தில் அவருக்குச் சின்ன பேப்பர் தரப்பட்டது.
அனுப்பியிருந்தவர் சோஅதனுடன் ஓர் இலவச இணைப்பு.

இணைப்பைப் பிரித்துப் பார்த்தால்பாதியாக ஒடிக்கப்பட்ட துண்டு பிளேடு.

அந்த ஊழியர் பரபரப்புடன் பேப்பரைப் பிரித்தபோது சிறு கோடுகள் ஒடிந்த மாதிரியான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தார் சோ.

முகம் பார்க்கச் சகிக்கவில்லை. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பிளேடால் நாளைக்கு மழுங்கச் சிரைத்துக் கொண்டு வரவும்’’

துக்ளக் ஆபிஸில் ஒரு சமயம் பத்திரிகை வேலைகளில் சோ மும்முரமாக இருந்த சமயம் பார்த்து யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.
எழுதிக்கொண்டிருந்த சோ நிமிர்ந்து பார்த்திருக்கிறார். உட்காரச் சொல்லியிருக்கிறார்.

என்ன விஷயம்?’’

மெட்ராஸூக்கு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.’’ என்று இழுத்ததும் சோ-விடமிருந்து சுள்ளென்று பதில் வந்திருக்கிறது.

மெட்ராஸூக்கு வந்து என்னைப் பார்க்கிறதை விட இங்கே உள்ள ஜூவுக்குப் போனீங்கன்னா விதவிதமாகப் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லாப் பொழுது போகும். சரிநான் என் வேலையைப் பார்க்கட்டுமா?’’

வந்தவருக்கு முகம் எந்தக் கோணத்தில் போயிருக்கும்?

துக்ளக்கில் வெளியான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட நான் முடிவெடுத்ததும் சோ-விடம் சொன்னேன்.

அதுக்கென்று தனியாக விழா நடத்திச் செலவழிக்காதீங்க. பேசாம துக்ளக் ஆண்டு விழாவிலேயே அதை வெளியிட்டிறலாம்.

நம்ம நாராயணன் சார் (பரந்தாமன் என்கிற பெயரில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிற இவர் கலைவாணருக்கு உதவியாளராகவும் இருந்தவர்) முதல் காப்பியை வாங்கிக்கட்டும்.’’

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் புத்தகத்திற்கு ஒரு முன்னுரையையும் கைப்பட எழுதித் தந்தார்.

முன்னுரையில் கட்டுரைகளுக்குப் பின்னிருக்கிற உழைப்பைப் பாராட்டியிருந்தவர் அந்தக் காகிதத்தை மடித்து மேலே சிறு பேப்பரை பேஸ்ட் பண்ணியிருந்தார்.

அதில் இப்படி எழுதியிருந்தார். “உள்ளே எழுதியிருப்பதெல்லாம் ஒரே கப்சா’’

சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும் அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

துக்ளக்கிற்கு ஒருமுறை ஒரு கட்டுரையை மதுரையிலிருந்து கூரியரில் அனுப்பியிருந்தேன். அது கிடைக்கச் சற்றுத் தாமதமாயிருக்கிறது.

போனில் அழைத்தவர் வழக்கத்தை விட உரத்த குரலில் கத்திய போது மனதுக்கு நெருடலாக இருந்தது.

மறுநாள் காலை நேரம். வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் கர்நாடக இசையில் ஒரு பாடல். சோ சார் தான் பாடிக்கொண்டிருந்தார்.
கொஞ்சம் கேட்டதும் பாடல் நின்றது.

நேத்து கூரியர் லேட்டா கிடைச்சது. ஆனா அதுக்கு முன்னாடி உங்களைக் கூப்பிட்டு டோஸ் விட்டுட்டேன். மனசிலே வைச்சுக்காதீங்க.. என்ன?’’

திரும்பவும் அந்தப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடி முடித்தபோது காது குறுகுறுத்தது.

கட்டுரைகளுக்காக வேறுவேறு ஊர்களுக்குப் போய் அதற்கான பில் தொகையை அனுப்பியபோது ஒருசமயம் பார்த்தவர் போனில் கூப்பிட்டார்.

என்னஇப்படிப் பில் அனுப்பியிருக்கீங்க?’’

ஏன்.. என்ன சார்?’’

ஊருக்குப் போறப்போ நீங்க தங்கின ஹோட்டல் பில்லைப் பார்த்தேன். இவ்வளவு கம்மியான ரேட்டில் இருக்கிற ஹோட்டல்களில் இனித் தங்காதீங்க.

நல்ல ஹோட்டல்களில் தங்குங்க. அது தான் உங்களுக்கும் நல்லது. நம்ம நிறுவனத்துக்கும் நல்லது. பணத்தை நான் தாங்க கொடுக்கப் போறேன்’’ – போனை வைத்துவிட்டார்.

ராஜீவ்காந்தி கொலை நடந்த சமயம்..

மதுரையிலிருந்து சென்னை வந்திருந்த நான் ஸ்ரீபெரும்புதூருக்கு துக்ளக் கவரேஜூக்காகப் போனேன்.

சென்னை துவங்கி தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரச்சூழல், கார்லே போனாலும் பார்த்துப் போங்கன்னு சொல்லி அனுப்பினார் சோ.

ராஜீவ் கொலையில் அதன் பிறகு கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்தின் அலுவலகத்திலிருந்து ஒரு போட்டோகிராபர் என்னுடன் காரில் வந்தார்.

நாங்கள் சென்ற காரில் சுபா சுந்தரம்பிரஸ்ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி வைத்தார்.

நான் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று திரும்பியவுடன் கட்டுரை எழுதிவிட்டு மதுரைக்குச் சென்ற இரண்டு நாட்களில் சுபா சுந்தரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

துக்ளக் இதழில் நான் எழுதிய கட்டுரை வெளியானதும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி துக்ளக் அலுவலகம் வந்திருக்கிறார்.

துக்ளக் இதழில் வெளியான என்னுடைய கட்டுரையில்படங்கள்: சுபாஎன்று வெளியானது .

அது குறித்த விசாரணைக்கு அந்தக் கட்டுரையை எழுதியவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டபோது அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார் சோ.

நான் தான் அவரைக் கட்டுரைக்காக அனுப்பினேன். முடித்துக் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். தேவையில்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து பீதி ஏற்படுத்துவது சரியில்லை.

அவரை அனுப்பியவன் என்கிற முறையில் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ, அதை என்னிடம் கேளுங்கள். நானே பதில் சொல்கிறேன்.’’ –

என்று ஆசிரியரான சோ பதில் அளித்திருப்பதை துக்ளக் அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் சொன்னபோது அவருடைய நம்பிக்கையின் மீது பெருமிதம் ஏற்பட்டது.

மிகவும் தயங்கித் தயங்கித் தொடர்ந்து முயற்சித்து அவருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து குமுதம் இதழில் வெளியானஒசாமஅசாதொடரைத் துவக்குவதற்கு சோ ஒப்புக் கொண்டதும் அவர் போட்ட கண்டிஷன்.

நான் சொல்றேன். நீங்க எழுதுங்க. ஆனால்எழுத்தும், தொகுப்பும்என்று உங்க பெயர் தான் வரணும்.’’

அதன்படியே 76 வாரங்கள் வரை குமுதத்தில் வெளியான தொடருக்குப் பெரும் வரவேற்பு.
அதற்காகவே அவரை நூறு தடவைக்கு மேல் சந்தித்தேன்.

துக்ளக்கில் ஏற்கனவே பதினான்கு ஆண்டுகள் நான் பணியாற்றி இருந்தாலும் அவருடைய அந்திமக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தின.

கேலியும், கிண்டலுமாக பல்வேறு இடங்களில் நகர்ந்த அந்தச் சந்திப்புகள் அவருடைய மனதில் உறைந்திருந்த பல நினைவுகளை அந்தரங்க சுத்தியுடன் வெளிப்படுத்தின.

இது தான் கடைசியாகக் கொடுக்கிற தொடர்ன்னு வைச்சுக்குங்க. நான் எல்லாத்தையும் கொட்டிடுறேன். எது தேவையோ அதைப் பிறகு எடிட் பண்ணிக்கலாம்.
சில சென்ஸிட்டிவ்வான விஷயங்களை நான் பேசி நீங்க டேப் பண்ணியிருந்தாலும், அவை இந்தச் சமயத்தில் வெளியாவதை நான் விரும்பலை

ஒருவேளை நான் இல்லாமல் போன பிறகு அதை நீங்க வெளியிடணும்னு நினைச்சா வெளியிடலாம்’’ – என்று மிகுந்த உரிமையுடனும், நம்பிக்கையுடனும் அவர் குரல் பிசிறச் சொன்னார்.

மிகுந்த நெகிழ்வுடன் நான் மென்மையாக அவர் காதோரம் பதில் சொன்னபோது என்னுடைய குரலும் தாழ்ந்திருந்தது.

ரொம்பவும் நம்பிக்கையோடு என்கிட்டே பகிர்ந்திருக்கீங்க.. நீங்க விரும்பாத எதையும் நான் எப்போதும் வெளியிட மாட்டேன் சார்..’’

சொன்னதும் சாய்வான படுக்கைக்கு அருகில் அழைத்து, மிகவும் மெலிந்து போயிருந்த உறைந்த மெழுகைப் போன்ற கை விரல்களால் என்னுடைய கையை அழுத்திய போது, அவருடைய கண்களிலும் உதட்டோரத்திலும் சிறு புன்னகை ஒட்டியிருந்தது.

அந்த அழுத்தமான நம்பிக்கை வெளிப்பட்ட தொடுதல் என்றைக்கும் உயிர்ப்புடன் உடனிருக்கும்.!
(2016-ல் இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரையின் மீள்பதிவு)

இன்னும் அரசியல், சமூகம், திரைப்படம், இலக்கியம், பண்பாடு என்று தமிழ் மக்களுக்கான பார்வையோடு நம்மைச் சுற்றி நிகழும் பதிவுகளைக் காண,
கீழுள்ள இணைய வாசலைச் சொடுக்குங்கள்

நன்றி மற்றும்  Copy from
http://www.thaaii.com/
தாய் உலகத் தமிழர் மனதின் குரல்.