வெல்லம்... ரத்த சோகையை வெல்லும்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:40 | Best Blogger Tips


பழங்குடி மக்களின் உடல்நலம் கருதி இனி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்கத் திட்டமிட்டு இருக்கிறது அரசு. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஓர் இனிப்புச் செய்தி. ரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. வெல்லத்தின் துணையுடன் ரத்தசோகையை எப்படி வெல்வது? ஈரோடு அரசு சித்த மருத்துவர் ஆர்.கண்ணன், உணவியல் நிபுணர் குந்தலா ரவி சொல்லும் வழிகள் உங்களுக்காக!


ரத்தசோகை?

இரும்புச் சத்துக் குறைவுதான் ரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும். முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள்.

இரும்பு வெல்லம்!

பனைவெல்லத்தைவிடவும் கரும்பி-ல் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும் 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரும்புச் சத்தும் கால்சியமும் சேரும்போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.

நீடித்த பலன்!

சீனியை உட்கொள்ளும்போது சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேரும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கிவைத்துத் தேவைப்படும்போது தரும்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது சோர்வாகவும், படபடப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வாதம், பித்தம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தைத் துணை மருந்தாகத் தரலாம். வெல்லத்தைச் சமையலில் பயன்படுத்தும்போது சுவை அதிகரிக்கும்.
ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால், வயிற்றுக் கடுப்பு கழிச்சல் தீரும். குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தைச் சிறிது அளவு உட்கொள்ளலாம்.