நீதான் எனக்கு எல்லாம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:36 | Best Blogger Tips

 


திருச்சியில் ஒரு பக்தர் புகைப்படக்காரர் சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார். வீட்டில் மகா பெரியவா படம் பிரதானமாக இருக்கும்.!

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மகா பெரியவா படத்துக்கு நெய்வேத்தியம் படைத்துவிட்டுதான் எந்த வேலையையும் தொடங்குவார். உதடுகள் எப்பொழுதும் மகாபெரியவா நாமாவை உச்சரித்துக்கொண்டே இருக்கும்

ஒரு தடவை பெரியவா ஆந்திரமாநிலத்திலுள்ள கர்னுலுக்கு விஜயம் செய்திருந்தார்

அதுவோ உஷ்ணப்ரதேசம் வெயில் கடுமையாக கொளுத்திக் கொண்டிருந்தது

திருச்சியில் இருந்த இந்த புகைப்பட கலைஞருக்கு பெரியவாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும் முன் ஒரு டம்பளரில் சூடான பாலை பெரியவா படத்தின் முன்வைத்துவிட்டு கிளம்பிவிட்டார் .

கர்னுலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம் , எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம், புகைப்பட கலைஞரால் உள்ளே செல்ல முடியவில்லை. சற்று மணல் மேடாக இருந்த ஒரு இடத்தில் ஏறி நின்று மகானை தரிசிக்க முயற்சித்தார் , வெய்யிலின் தாக்கம் காலை சுடவே கீழே இறங்கிவிட்டார்.

சரி சற்று கூட்டம் குறைந்ததும் மாலை வந்து மகானை தரிசிக்கலாம் என்று நினைத்து கிளம்பிவிட்டார்

இவ்வளவு தூரம் வந்தும் மகானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனசில் இருந்தது

சற்று தூரம் போனதும் தன்னை யாரோ அழைப்பது போல் உணர்ந்து திரும்பி பார்க்க, ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார் , நீங்க திருச்சிலேந்து தானே வந்திருக்கீங்க

ஆமாம் "

பெரியவா உங்களை அழைச்சிண்டு வர சொன்னார்

என்னையா..?

நீங்க போடோக்ராபர் தானே..?

"ஆமாம்"

அப்படியென்றால் வாருங்கள்

விடாப்பிடியாக அவரை அழைத்துக்கொண்டு பெரியவர் முன் நிறுத்தினார். அந்த சிஷ்யர் கைகளை கூப்பியவாறு கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.

அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்த மகான் "என்னை பார்க்கணும்னு இவ்வளவு தூரம் வந்திருக்க பார்க்கம போனா என்னப்பா அர்த்தம் " என்றார்

கும்பல் நிறைய இருந்தது அதான் கொஞ்சம் குறைஞ்சவுடன் வரலாம்னு என்று இழுத்தார் புகைப்படக்காரர்

சரி சரி சாப்பிட்டயோ

சாப்பிட்டேன்

சில வினாடிகள் தாமதத்திற்கு பின் மகான் பேசினார் " என் வாயை பார்த்தியோ"?

நாக்கை வெளியே நீட்டுகிறார் சூடு பட்டது போல் சிவந்து இருந்தது உதடெல்லாம் கூட புன்னாயிடுத்து ஏன் தெரியுமா..?

புகைப்பட நிபுணருக்கு புரியவில்லை..!

" நீ பாலை சூடா வச்சுட்டு அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா அதான் என்றார்.

திருசிக்காரருக்கு தான் புறப்படும் போது தான் வைத்த படையல் அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

சாஷ்டாங்கமாக மகானின் காலில் விழுந்து பிரபோ என்னை மன்னியுங்கள் என்று கதறினார்.

எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால் மகான் அந்த பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப்பாருங்கள் அது சாத்வீகமான பக்தி.

ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி ..!

ஜெய ஜெய ஷங்கர..

ஹர ஹர ஷங்கர..

 

நன்றி இணையம்