பல்வேறு வகையான புற்றுநோய்களின் அறிகுறிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:16 | Best Blogger Tips


எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும்.

மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன. ஆனால் ஒரு குறிப்பிட்ட புற்றுநோயை கண்டறிய, ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளை தெரிந்திருப்பது அவசியம்.

இத்தகைய அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினம் தான். இருப்பினும், ஒருசில வித்தியாசமான அறிகுறிகளைக் கொண்டு, எந்த புற்றுநோய் உள்ளது என்பதை தெரிந்து பாதுகாக்கலாம்.

சரி. இப்போது எந்த அறிகுறிகள் இருந்தால், என்ன புற்றுநோய் உள்ளது என்பதை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா.

கட்டிகள்

மார்பக புற்றுநோய் உள்ளது என்பதை அறிய ஒரே வழியென்றால், அது மார்பகத்தில் கட்டிகள் இருப்பதைக் கொண்டு தான். எனவே மார்பகத்தில் ஏதேனும் கட்டிகள் இருப்பது போல் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது.

நச்சரிக்கும் காய்ச்சல்

அவ்வப்போது காய்ச்சலானது விட்டுவிட்டு வந்தால், அது இரத்த புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும். அதிலும் இந்த புற்றுநோய் இருந்தால், காய்ச்சலாக இருப்பது போல் இருக்கும். ஆனால் அதிகப்படியான காய்ச்சல் இருக்காது. ஆகவே இந்த சூழ்நிலையிலும் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

மலத்தில் இரத்தம்

குடல் புற்றுநோய் இருந்தால், மலம் கழிக்கும் போது, அத்துடன் இரத்தமும் வெளிவரும். எனவே இதனை சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரிடம் சொல்லி சிகிச்சை பெறுவது நல்லது.

முறையற்ற இரத்த போக்கு

பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி ஏற்படும். ஆனால் அவ்வாறு மாமம் ஒரு முறை ஏற்படாமல், சிலருக்கு முன்னரே இரத்தப் போக்கானது ஏற்படும். அதுமட்டுமல்லாமல், சிலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது அளவுக்கு அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படுமானால், அது கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்ச்சியான சுவாச தொற்றுநோய்கள்

நுரையீரல் புற்றுநோய இருந்தால், அடிக்கடி மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்றவை அடிக்கடி ஏற்படும். மேலும் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும். இத்தகைய பிரச்சனைகள் இருந்தால், அதனை சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

சரும நிறமாற்றம்

தோல் புற்றுநோய் இருந்தால், சருமத்தின் நிறமானது மாற்றமடையும். மேலும் மெலனின் அளவு குறைவாக இருப்பதால், சருமத்திற்கு அடியில் கட்டிகள் மற்றும் புண்கள் இருக்கும்.

செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல்

வயிற்று புற்றுநோய் இருந்தால், செரிமானப் பிரச்சனையுடன், வயிறு அதிகமாக எரிச்சலுடன் இருக்கும். பெரும்பாலானோர் இத்தகைய பிரச்சனையை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

வலிப்பு மற்றும் தெளிவற்ற பார்வை

வீரியமிக்க மூளைக்கட்டிகள் இருந்தால், அடிக்கடி வலிப்பு, குழப்பம், நினைவாற்றல் மற்றும் தெளிவற்ற பார்வை போன்றவை ஏற்படும். மேலும் சில நேரங்களில் தாங்க முடியாத அளவில் தலைவலியானது ஏற்படும்.

தளர்வான பற்கள்

வாய் புற்றுநோய் இருந்தால், அதனை வாய் அழற்சி மற்றும் வீக்கம் கொண்டு கண்டறியலாம். மேலும் எதை சாப்பிடும் போதும் விழுங்க முடியாமல் அவஸ்தைப்படுவதோடு, தொண்டை மற்றும் தோள்பட்டை வலியும் அடிக்கடி ஏற்படும்.
 

Via  ஆரோக்கியமான வாழ்வு