ஓம் ! ஓம் ! ஓம்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:56 | Best Blogger Tips

‘ஓம்’: ‘ஓம்’ என்பது அ, உ, ம என்ற மூன்று எழுத்துகள் இணைந்து உருவானது. இந்த மந்திரத்திற்குப் பல விளக்கங்கள் உள்ளன. மூன்று எழுத்துகள் மூன்று வேதங்களைக் குறிப்பிடுவதாகவும், அ,உ,ம என்ற மூன்றெழுத்துகள் முறையே (அக்னி) நெருப்பு, (உதகம்) நீர், (மருத்) காற்று என்ற பூதங்களைக் குறிப்பிடுவதாகவும், பிறப்பு, வாழ்வு, இறப்பு என்ற வாழ்க்கையின் மூன்று நிலைகளைக் குறிப்பிடுவதாகவும், இந்து தர்மத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரிவதாகக் கூறப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும் இது குறிப்பிடுவதாகவும், ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் குறிப்பிடுவதாகம்.

அனைத்து உபநிஷத்துகளிலும் இந்த மந்திரம் வருணிக்கப்பட்டுள்ளது.
மாண்டூக்ய உபநிஷத் ‘ஓம்’ என்ற மந்திரத்தின் பொருளை விளக்குவதற்காகவே அளிக்கப்பட்டது.

‘ஓம்’ என்ற இந்தச் சொல் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதற்கான விளக்கமாகும். முக்காலங்களைக் கடந்திருப்பதும் ஓங்காரமே. அதாவது ‘ஓம்’ என்ற சொல், படைப்பிற்கு முன்பே இருந்தது. பிரளயத்திற்குப் பின்பும் இருக்கும்.

புனிதமான மந்திரமாகிய ‘ஓம்’ என்ற வில்லை வளைத்து நாணேற்றி, ஆன்மாவாகிற அம்பைத் தொடுத்து, மனத்தை ஒருமுகப்படுத்தி பிரஹ்மமாகிய இலக்கை நோக்கிச் செலுத்த வேண்டும். இதனால் இலக்கைத் துளைக்கும் அம்பு இலக்கோடு ஒன்றிவிடுவதுபோல் ஆன்மா பிரஹ்மத்துடன் ஒன்றிவிடும்.

இந்த ஓர் எழுத்துதான் ப்ரஹ்மம். இந்த ஓர் எழுத்துதான் உயர்வானது. இந்த ஓர் எழுத்தைப் புரிந்துகொள்பவர் எதை விரும்புகின்றனரோ அதைப் பெறுகிறார்கள்.

இதுதான் சிறந்ததும், உயர்ந்ததுமான ஆதாரம். இந்த ஆதாரத்தைப் புரிந்து கொள்பவன் ப்ரஹ்மலோகத்தை அலங்கரிப்பான்.

‘ஓம்’ எனும் மந்திரத்தை, இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், ஜைனர்களும், புத்தமதத்தவர்களும், அனைத்து மந்திரங்களைவிட புனிதமானது என்று ஒருசேர நம்புகின்றனர். பாரதத்திற்கு வெளியிலுள்ள சீனாவிலும், திபெத்திலும்கூட இது பரவியுள்ளது.
தேவநாகரி எழுத்து, தமிழ் எழுத்து, ஜெயின் எழுத்து, குருமுகி எழுத்து, திபெத்திய எழுத்து, சைன எழுத்து ஆகியவற்றில் ‘ஓம்’ எவ்வாறு எழுதப்படுகிறது என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மந்திரம் சிறப்பாக சொல்வடிவு, குறிப்புவடிவு, உணர்ச்சிவடிவு என மூன்று வகைப்படும். சொல்வடிவில் வெளிப்படுத்தும் மந்திரங்களின் பொருள் தெளிவாக இருக்கும். குறிப்பால் வெளிப்படுத்தும் மந்திரங்களின் சொற்களுக்கு நேரடியான பொருள் இல்லாமல் வேறு பொருள் இருக்கும். உணர்ச்சி வடிவிலான மந்திரங்களுக்கு மொழியிலிருந்து வேறுபட்டு ஒலிக்கும் பொருள் இருக்கும். ‘ஓம்’ என்பது உணர்ச்சி வடிவிலான மந்திரமாகும்.

‘ஓம்’ என்று உச்சரிக்கும்பொழுது ‘அ’ ஒலி தொண்டையிலிருந்தும், ‘உ’ ஒலி நாவிலிருந்தும் புறப்பட்டு ‘ம்’ என்று உதட்டில் வந்து முடிகிறது. ‘அ’ விலிருந்து எழுச்சி, ‘உ’ விலிருந்து கனவு, ‘ம்’ லிருந்து உறக்கத்தின் தாக்கம் கிடைக்கிறது. இது மனிதனுடைய தொண்டையிலிருந்து வெளிப்படும் அனைத்து ஒலியையும் நிரூபிக்கிறது. ஆகையால் இதை பிரஹ்மநாதம் என்று கூறுகிறார்கள். உடல், ஒலி, மனது ஆகியவற்றை ஒன்றிணைப்பது ‘ஓம்’ எனும் மந்திரம்.

ஆயுர்வேதம் முதலான சாஸ்திரங்களில் ‘ஓம்’ என்ற மந்திர ஜபத்தால் உண்டாகும் வியத்தகு பலன்கள் வருணிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தைய புது அறிவியலாளர்களும் ஆராய்ச்சியின் மூலமாக இதன் வியத்தகு தாக்கங்களை நிரூபித்துள்ளனர். ‘ஓம்’ என்பதை வெவ்வேறு ஒலிகளில், வெவ்வேறு எண்ணிக்கையில் ஜபிப்பதால் மனநோயாளிகள் மிகவும் பயனடைகின்றனர்.

‘ஓம்’ என்பதை ஜபிக்கத் தொடங்கும்பொழுது அந்த ஒலி நாவிலிருந்து புறப்படாமல் வயிற்றிலிருந்து புறப்படுகிறது. அதுமட்டுமன்றி ‘ஓம்’ என்ற ஒலியின் உச்சாரணம் வயிறு, நெஞ்சு, மூளை ஆகியற்றில் ஒலி அதிர்வை உண்டாக்குகிறது. இந்த அதிர்வு உடலில் உள்ள இறந்த உயிரணுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கிறது. புது உயிரணுக்களை உருவாக்கவும் செய்கிறது.

‘ஓம்’ என்பது இந்து தர்மத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. இந்து மரபின் மிகப்புனிதமான ஒரு சொல்லாகும். தினந்தோறும், ‘ஓம்’ என்று உச்சரிப்பதால் ஆற்றல் அதிகமாவதோடு மட்டுமல்லாது நோயைத் தடுக்கும் ஆற்றலை அதிகமாக்கி தீர்க்க முடியாத நோய்களை வெகு தொலைவுக்கு விரட்டுவதற்கும் உதவுகிறது.
Via  Gnanayohi Yohi