நம்மிடம் இருக்கும் குறை..........

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:56 | Best Blogger Tips
Image result for நம்மிடம் இருக்கும் குறைImage result for நம்மிடம் இருக்கும் குறை
ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட குட் டே பிஸ்கட்டும் வாங்கி வந்தார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் வந்து உட்கார்ந்தார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார்.
அந் பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
ச்சே, பிஸ்கட் வேண்டும் என்றால், கேட்டு வாங்கி சாப்பிடவேண்டியது தானே,கொஞ்சம் கூட நாகரிகம் தெரியாத ஆளாக உள்ளானே. இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லையா,அல்லது இவள் என்ன செய்துவிடுவாள் என்ற தைரியமா என நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.
அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார்.
விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன்.இவண் எல்லாம் விமானத்தில் வேறு பயணம் செய்கின்றானே,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார்.அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது.
அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா
நான் தான் அவர் பிஸ்கெட்டை சாப்பிட்டேனா,அவர் என்னைபற்றி என்ன நினைத்து இருப்பார்.நாம் அவரை நினைத்தது போல் நம்மை அவர் நினைத்திருப்பாரா?எவ்வளவு உயர்ந்த குணம் உள்ள மனிதராக இருந்தால் கடைசியாக இருந்த ஒரு பிஸ்கெட்டிலும் பாதியை சாப்பிட்டுவிட்டு பாதியை வைத்தாரே,அவசரப்பட்டு விட்டோமே,என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.
இந்தக் கதை நமக்கு உணர்த்துவது,”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.அவர் நல்லவராகவும் இருக்கலாம், மோசமானவராகவும் இருக்கலாம்.
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும்,உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் நமக்குத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!
படித்ததில் பிடித்தது.