செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:28 | Best Blogger Tips

விழிப்புணர்வு கட்டுரை!
-------திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,
(
முன்னாள் காவல்துறை அதிகாரி)
தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையில் ஜூலை மாதத்தில் மட்டும் 37 இடங்களில் செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
இதில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதுக்கப்பட்ட இளைஞர்கள். அது மட்டுமல்ல அவர்களில் பலர் நன்றாக படித்த பட்டதாரி இளைஞர்கள்.
இந்த செயின் அறுப்பு குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம் என்ன? இதற்கு முக்கிய காரணம் மிக அதிகமாக ஏறி வரும் தங்கத்தின் விலைதான்.
தங்கத்தின் விலை ஒரு சவரன் 24,000/- ருபாய் உயர்ந்து விட்டதால், இந்த செயின் அறுப்பு திருடர்கள் அறுக்கும் செயினை உடனே அடகு வைத்தாலோ அல்லது விற்றோலோ மிக எளிதில் அவர்களுக்கு அதிகமான பணம் கிடைத்துவிடும்.
இளைஞர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுவது ஏன்?
1.பெரிய நகரங்களிலுள்ள படித்த இளைஞர்கள் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் "PUB " நிகழ்ச்சிக்கு அடிக்கடி செல்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. இந்த PUBகளில் சிறிய வயது ஆண்களும் பெண்களும் மது அருந்தி விட்டு நடமாடுவதுண்டு. ஒரு தடவை PUBற்கு செல்ல ஒருவருக்கு ரூபாய்.2000/- முதல் 3000/- வரை செலவாகும். செயின் அறுப்பு சம்பவங்களில் கைதான சில படித்த இளைஞர்கள் தாங்கள் " PUB ற்கு செலவழிக்கத் தேவைப்படும் பணத்திற்காக செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
2. மதுவிற்கும் போதை மருந்துக்கும் அடிமையான சில இளைஞர்கள் அதற்கு தேவைப்படும் பணத்திற்காகவும் இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
3.இந்த நவீன காலத்தில் இளைஞர்கள் நவீன மோட்டர் சைக்கிளையும் ஸ்மார்ட் செல்போனையும் மிக அதிகமாக விரும்புகிறார்கள். இந்த குற்றங்களில் கைதான சில இளைஞர்கள் நவீன மோட்டர் சைக்கிளையும் ஸ்மார்ட் செல்போனையும் வாங்குவதற்காக இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அடிக்கடி "PUB” ற்கு செல்கிறார்களா? மது மற்றும் போதை மருந்து அருந்துகிறார்களா? என்பதை உரிய முறையில் கண்காணித்து அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகள் இந்த பழக்கங்களுக்கு அடிமையாகாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கெட்ட பழக்கங்களுக்கு தேவைப்படும் பணத்திற்காக உங்கள் பிள்ளைகள் இது போன்ற செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபட வாய்ப்புண்டு.
2.இப்போதெல்லாம் நவீன மோட்டர் சைக்கிளும் ஸ்மார்ட் போனதும் உபயோகிப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே உங்கள் பிள்ளைகள் இது போன்ற பொருட்களை விரும்பினால் வசதியுள்ள பெற்றோர்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுங்கள். வசதியில்லாத பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணியுங்கள்.
இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை:
செயின் அறுப்புத் திருடர்கள் இரு சக்கர வாகனங்களைத் திருடி அதை உபயோகித்தே இந்தக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் எனவே உங்கள் இருசக்கர வாகனம் தொலைந்த அடுத்த நிமிடமே காவல் துறைக்கு புகார் கொடுங்கள் இல்லாவிட்டால் போலீசாரின் சந்தேகக் கணைகள் உங்கள் மீது பாய்ந்துவிடும்.
அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் "செயின் அறுப்பு பகுதி" ( Chain Snatching Zone ) என்று ஒன்று உண்டு. இதைக் கண்டு பிடித்து அந்த இடங்களைச் சுற்றி பாதுகாப்பு கேமராக்களை அரசாங்கம் உடனடியாகப் பொருத்த வேண்டும்.
2.அடகு நகை வியாபாரிகளும், நகைக்கடை ஷோரூம்களும் தங்களிடம் தங்க நகை விற்கவோ, மாற்றிக்கொள்ளவோ வருபவர்களிடம் உரிய அடையாள ஆவணங்களை வாங்கி கொண்டு அந்த நபர்களின் புகைப்படத்தை பதிவு செய்த பின்பே அவர்களிடம் அந்த நகையை வாங்க வேண்டுமென்று அறிவுறுத்தவேண்டும்.
காவல் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.பெரும்பாலான காவல் நிலையங்களில் திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. இதன் காரணமாகவே இது போன்ற செயின் அறுப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகமாக நடக்கின்றன. எனவே திருட்டு நகைகளை வாங்கும் நகைக்கடைகள் மீது 3 வருடம் "சிறைத் தண்டனை கிடைக்கக்கூடிய இந்திய தண்டனைச் சட்டம் 411 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
2. நமது போலீசார் செயின் அறுப்பு திருடர்கள் மீது 3 வருடம் தண்டனை கிடைக்கக்கூடிய 379 IPCலேயே வழக்குப் பதிவு செய்கிறார்கள். ஆனால் செயின் அறுப்பு குற்றம் robbery என்பதால் 10 வருடம் தண்டனை கிடைக்கக்கூடிய 392 IPC ல் இந்த குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பெண்கள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவைடிகைகள்:
1.செயின் அறுப்பு சம்பவங்கள், பள்ளிகள், கோவில்கள், பூங்கா மற்றும் நடைப்பயிற்சி ஆகிய இடங்களுக்கு அருகிலேயே நடப்பதால் இந்த இடங்களிலெல்லாம் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2. பொதுவாக செயின் அறுப்பு குற்றங்கள் இருசக்கர வாகனங்களை உபயோகித்தே நடக்கின்றன எனவே எந்த இருசக்கர வாகனமும், உங்களுக்கு அருகே நெருங்கி வந்தால் எச்சரிக்கை தேவை.
3,இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளிலும் உங்களுக்கு அருகே வந்து ஏதாவது விசாரித்தால் அவர்களுக்கு பதிவளிக்காமல் அவர்களை விட்டு உடனே விலகி செல்லுங்கள்.
4. ரோட்டில் நடந்து செல்லும் போது செல்போனில் பேசிக் கொண்டு செல்லாதீர்கள்..
5.இருட்டு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத தெருக்களில் தனியாக நடந்து செல்லாதீர்கள்.
6.யாராவது உங்களை பின் தொடர்ந்து வருவதாக நீங்கள் உணரும் பட்சத்தில் உடனடியாக ஆட்கள் அதிக நடமாட்டமுள்ள மெயின் ரோடுக்கு ஓடி வந்து விடுங்கள்.
7.செயின் அறுப்பு சம்பவம் நடக்கும் போது சத்தத்தை 
எழுப்பி மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். ஆனால் அந்த குற்றவாளியுடன் எதிர்த்து போராடாதீர்கள். காரணம் நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராடினால் இப்படிப்பட்ட குற்றவாளிகள் தங்களிடம் இருக்கும் கத்தியினால் உங்களை காயப்படுத்திவிடுவார்கள்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
இது போன்ற சமுதாய சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து படிக்க விரும்பினால் கீழ்க்கண்ட link Click செய்து
https://www.facebook.com/varadarajpublicfigure/?fref=ts
எனது பக்கத்திலுள்ள Like பட்டனை அழுத்துங்கள்.
இது போன்ற சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுக்கும் எங்கள் இயக்கத்தில் சேர விரும்பினால் www.nptmk.com சென்று எங்கள் இயக்கத்தில் நீங்கள் சேரலாம்.
நன்றி
-
திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,
(
முன்னாள் காவல்துறை அதிகாரி)
தலைவர் 
நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)
தமிழ்நாட்டு ஊழல் அரசியலுக்கு 
எதிரான இயக்கம்