*மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:28 | Best Blogger Tips






ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் மணலில் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுதி விடு. அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.


நன்றி இணையம்