பஞ்ச பூத ஸ்தலங்கள் ........ 3

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:49 | Best Blogger Tips

திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் - நெருப்பு - ஜோதி லிங்கம்
அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனுறை அண்ணாமலைநாதர்
நினைக்க முத்திகிடைக்கும் தலம். கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. சிறந்தவை சிவகங்கையும், பிரம தீர்த்தமும், மலைப்பகுதியிலுள்ள அக்னிதீர்த்தமும், இந்திர தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற தலமாகும்.
சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.
சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
திருமுறை- பதிகம் - 1-10-01
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.
பொழிப்புரை :
உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
நன்றி இணையம்