கர்வம் தவிர் மனிதனை மனிதனாக பார் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:01 | Best Blogger Tips
கர்வம் தவிர் மனிதனை மனிதனாக பார் !!

'கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தமக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்' என்கிறார், கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து, மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை.மனிதனுடைய வளர்ச்சிப்படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இதுதான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும்போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும்.

கர்வம் மனிதனின் வேகக்கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதம்.கொஞ்சம் நடுநிலைமையோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால், கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.எனக்கு எல்லாம் தெரியும்' என்பது கர்வக் கிரீடத்தின் குரல்ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரியும்.

எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகிறது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகி விடுகிறது.

'நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்' என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும்.

பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கிவிடும்.'மரியாதையை எதிர்பார்க்கும் மனம், பிறரை மரியாதை செய்ய மறுத்தும் விடும்' என்பதுதான் நிதர்சனத்தின் இன்னோர் பக்கம்.

'நான் எல்லோரையும் விட பெரியவன்' என கர்வம் தனது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும்.தனது வெற்றுக் கொடியை வேற்றுக் கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும்.

அடுத்தவனை விட நான் பெரியவன் எனும் சிந்தனையே அவன் மனதிலிருந்து ஒட்டுமொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.இதோ என் சாதனைகளின் பட்டியல்' என வெற்றிப் பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமந்து திரியும். தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கப்பால் நாடு கடத்தும்.
தனது வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடிதுடிக்கும்.

'நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்' என கர்வம் முகமூடியை முகமாக்க முயலும். தவறுகள் செய்யாத மனிதன் இல்லை- என்னைத் தவிர, என்று கர்வம் கொக்கரித்துத் திரியும்.'என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனே' என கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால்தான் எல்லாமே நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும்.

'என்னைப் பாராட்டுங்கள், நான் அதற்குத் தகுதியானவன்' என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்.

கர்வத்தின் கணக்கற்ற முகங்களின் சில முகங்களே இவை. கர்வம் தனது அலமாரி முழுக்க பல்வேறு முகத்திரைகளை வரிசையாய் வைத்திருக்கிறது. தனது தேவைக்கேற்ப ஒன்றை அது அணிந்து திரிகிறது.

ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டால், அது நல்லபடியாய் முடிந்துவிட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனிதநேயத்தின் இயல்பே அரவணைத்தலில்தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது.

பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.

என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.

கர்வம் மனிதனை தவறுகளை நோக்கிச் செலுத்தும் சுக்கானாகி விடுகிறது. கர்வம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தருவதில்லை. பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் சுமத்தும் வழியையே தேடச் செய்யும். காரணம், கர்வத்தின் அஸ்திவாரத்தில் ஈகோ உறைந்து கிடக்கும்.

கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டுச் சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தனிமைகளின் கூட்டை உடைத்து இனிமைகளின் கூட்டணியை அமைக்கும். கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனிதகுலத்துக்கு அவசியம்.

தாழ்மை நம்மைப் பற்றிய ஆழமான அறிதலில் இருந்து புறப்படும். உண்மையில் நான் யார்? எனது மனம் மனிதநேயத்தின் தாழ்வாரங்களில்தான் நடக்கிறதா? பிறருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின்றன? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு இப்படிப்பட்ட ஒவ்வோர் புரிதலும் நமது தாழ்மையைக் கூர்தீட்டும்.

தாழ்மை என்பது பச்சாதாபமல்ல. அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே. அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும். தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம்.

ஒரு மன்னனைக் காண ஏழை மனிதன் ஒருவன் வந்தான். நெடுநேரக் காத்திருப்புக்குப் பின் அவனுக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன். மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் குனிந்து வணங்கினான்.

அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள், "அவன் ஓர் ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே?''

மன்னன் சொன்னான், "வந்தவன் செல்வத்தால் ஏழை. ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான். அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டு தாழ்மையை அணிவதே நல்லதெனப் பட்டது.''தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவதுதான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல.

பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு. தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடியில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.விலக்கிவிட மிகவும் கஷ்டமான விஷயம் கர்வம்தான். நான் கர்வத்தை விட்டு விலகி தாழ்மையாய் மாறிவிட்டேன் என்று சொல்லும்போது கூட, 'நான் தாழ்மையின் சின்னம்' என கர்வம் கொள்ள முயல்கிறது மனது' என்கிறார் பெஞ்சமின் பிராங்ளின்.
கர்வம் என்பது எந்த விஷயத்துக்காக வேண்டுமானாலும் எழலாம் என்பதையே அவருடைய வாசகங்கள் படம் பிடிக்கின்றன. 'நான் நல்லவன்', 'நான் பிறரை மதிப்பவன்', 'நான் எளிமையானவன்', 'நான் கடவுள் பக்தி நிறைந்தவன்', 'நான் ஏழைகளுக்கு உதவுபவன்' என எந்த முளையிலிருந்து வேண்டுமானாலும் கர்வத்தின் தரு தழைத்து வளரலாம்.

தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான, நேர்மையான அன்புறவு கொள்ள வைக்கும். கர்வம் பல வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்து விடும். விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம். உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அதுதான்.
தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட நான் பெரியவன் என நினைப்பதுதான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம். ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் ஆழமான ஆன்மிகவாதிகள் தங்களை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும். ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும்.பிறர் மீதான உண்மையான கரிசனை அவரையும் நம்மைப் போலவே நேசிப்பதில் துவங்குகிறது. அது நமது தாழ்மையின் பயணத்தில் நிகழ்கிறது.

கர்வப் பிழைகள் அழியட்டும்
தாழ்மை மழையாய் பொழியட்டும்!