*ஊர்களின் பெயர் காரணங்களையும்,*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:07 | Best Blogger Tips



ஊர் பெயர்களின் விகுதியையும் அறிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்தது.

ஓர் ஊரின் விகுதியைக் கொண்டு அவ்வூர் எந்த நிலத்தைச் சார்ந்தது என அறிய முடியுமென்றும் அறிந்து கொள்ள வாய்ப்பாயிருந்தது.

காடு, பட்டி, காவு, பாடி, தோப்பு, பொழில், மந்தை போன்ற விகுதிகள் முல்லை நில ஊர்களையும்

மலை, கோடு, பாறை, கல்,குறிச்சி, குன்றம் போன்ற விகுதிகள் குறிஞ்சி நில ஊர்களையும்

ஆறு, துறை, அரங்கம், கூடல், ஓடை, மடை, ஏந்தல், தாங்கல், கழனி, குளம் போன்ற விகுதிகள் மருத நில ஊர்களையும்

கரை, துறை, பட்டினம், பாக்கம் போன்ற விகுதிகள் நெய்தல் நில ஊர்களையும் குறிக்கின்றன என அறிந்தேன்.

பாலை எனத் தனி நிலப்பகுதியின்மையால்

(அந்தந்த நிலப்பட்குதியின் தன்மை கெட்டால் பாலை)

தனி விகுதிகள் கிடைக்கப்படவில்லை.



இந்தத் தேடலுக்கான காரணம் சுவாரசியமானது.

பணிக்கு எடுப்பவர்களுக்கு ஒரு தேர்வு வைப்பது வழக்கம். அவ்வாறான தேர்வோன்றில் "நாகைப் பட்டினம்" எனக் குறிப்பிட்டிருந்தேன்.

அது தவறு, "நாகப்பட்டணம்" என்பது தான் சரி என்று மூத்த நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

நானறிந்தவரை கடற்கரை நகரங்கள் "பட்டினம்" என்ற விகுதியோடு அழைக்கப்பெறும் என்றிருந்தேன்.

அறிவிற் சிறந்த மூத்தவராதலால் அவரோடு விவாதம் செய்யவில்லை, தவறென்றால் திருத்திக் கொள்ளலாம் என்றேன்.

ஆயினும், இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எழுந்தது.

அதன் வெளிப்பாடே ஊர் பெயர்களின் விகுதிப் பட்டியல் மேற் கண்டவாறு.


இருப்பினும் பிரச்சனையும் சந்தேகமும் தீர்ந்துவிடவில்லை.

எனவே, கடற்கரப் பட்டினமான " நாகை" குறித்துக் குறிப்புகள் இருக்கிறதா என்று பார்த்த போது,

கீழ் கண்டவையும்,


கல்கியின் பொன்னியின் செல்வனும் துணைக்கு வந்தார்கள்.

அவ்வாறு கண்டவற்றில் சிலவற்றைத் தொகுத்து கீழே வழங்கியுள்ளேன்.

பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினம் கடலால் கொள்ளப்பட்ட பின்

சோழ நாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்து நாகைப்பட்டினத்திற்கு அமைந்தது.


வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர்.

பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்களைக் கொண்டு வந்து இறக்கி வாணிபத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் சிறந்த மணிமாட நகரமாயிருந்த நாகைப் பட்டினத்தை

"காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்

கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!"

என்று வர்ணித்தார்.

நாகைப்பட்டினத்தைப் பற்றிப் புராணம் வர்ணிப்பது ஒருபுறமிருக்க, சரித்திர பூர்வமான கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்

அந்நகரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன.

"பல கோவில்களும், சத்திரங்களும், நீர் நிலைகளும், சோலைகளும்,

மாட மாளிகைகளும் நிறைந்த வீதிகளையுடைய நாகைப்பட்டினம்" என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் அந்நகரை வர்ணிக்கின்றன.

அதே ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய

*சூடாமணி விஹாரம்* என்னும் *பௌத்த ஆலயத்தைப்* பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.

கடாரத்தைத் தலை நகராகக் கொண்டு ஸ்ரீ விஜய நாடு என்னும் பெயரால் ஒரு சாம்ராஜ்யம் பிரசித்தி பெற்றிருந்தது.

ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆண்டு வந்தவர்கள் சைலேந்திர வம்சத்தார்.

அந்த வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் என்னும் மன்னன் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கினான்.

அத்தகைய பேரரசனின் மகன் மாறவிஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக

"மேரு மலையை யொத்த

சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான்" என்று அச்செப்பேடுகள் கூறுகின்றன.

பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் நாகைப்பட்டினம்

சூடாமணி விஹாரத்துக்கு ஆனைமங்கலம் கிராமத்தையும் அதைச் சார்ந்த பல ஊர்களையும் முற்றூட்டாக அதாவது

எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத இறையிலி நிலமாகத் தானம் அளித்தான்;

இந்த நில தானத்தை இராஜராஜனுடைய குமாரன், சரித்திரப் புகழ் பெற்ற இராஜேந்திர சோழன் - செப்பேடுகளில் எழுதுவித்து உறுதிப்படுத்தினான்.

இவை தாம் ஆனைமங்கலச் செப்பேடுகள் என்று கூறப்படுகின்றன.

மொத்தம் இருபத்தொரு செப்பேட்டு இதழ்கள்.

ஒவ்வொன்றும் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் உள்ளனவாய் ஒரு பெரிய செப்பு வளையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.


*இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.*

ஆகையினால் இச்செப்பேடுகளை 'லெயிடன் சாஸனம்' என்றும் சில சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவதுண்டு.)

இவ்வாறே இருந்தாலும், பிற்காலங்களில்,

முகலாய,

ஆங்கிலேய ஆட்சிகாலங்களில் " நாகைப் பட்டினம்"

"நாகப்பட்டணம்" ஆக மாறியதா எனத் தெரியவில்லை.

இது குறித்து அறிந்தவர்கள் உதவலாம்.

அதே போல " நாகைப் பட்டினமா"? " நாகப்பட்டணமா?" என்றும் விளக்கம் கூறலாம்.

உங்கள் உதவிக்கு நன்றி....

நன்றி இணையம்