தர்ப்பை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:20 | Best Blogger Tips

 


இந்து மதத்தைப் பொறுத்த வரையில், இறைவனை பூஜிப்பது முதல் முன்னோர்களை பூஜிப்பது வரையில் அனைத்திலும் தர்ப்பைப் புல்லிற்குத்தான் முதல் இடம். இப்படி எல்லா சுப காரியங்களுக்கும் பயன்படும் தர்ப்பைப் புல்லின் பெருமையை காண்போமா! பகவத் கீதையில் தர்ப்பைகண்ணன் பகவத் கீதையில் ஆறாம் அத்தியாயத்தில், இறைவனை தியானிக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறான். இதற்கு ‘‘தியான யோகம்என்று பெயர். அந்த ஆறாம் அத்தியாயத்தில், பதினொன்றாம் ஸ்லோகத்தில், அவன் தியானம் பயிலும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறான்.


யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்ப்பை புல்லை பரப்பி, அதன் மேல் மான் தோலாலும், மென்மையான துணியாலும், மறைக்க வேண்டும். இந்த ஆசனம் உயரமாகவோ தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்து இருக்க வேண்டும். பின் நேராக அமர்ந்து, மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, இறைவனை தியானிக்க வேண்டும் என்று கண்ணன் சொல்கிறான். மொத்தத்தில் இறைவனை தியானிக்கும்போதும், தர்ப்பைக்கே முதல் இடம் என்று கண்ணனே சொல்கிறான்.



கண்ணன் சொல்வதை செய்து காட்டிய ஈசன்ஞானிகள் தியானம் செய்யும்போது, தர்ப்பை ஆசனத்தில் அமர வேண்டும் என்று கண்ணன் சொல்வதாக பார்த்தோம் இல்லையா? இந்த கண்ணனின் வாக்கை ஒரு எழுத்து கூட மாறாமல், ஈசன் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.


தட்சிணாமூர்த்தி சதா மோனநிலையில் இருப்பார் என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால், அவர் இந்தத் தலத்தில் கண்ணன் பகவத் கீதையில் சொன்னதுபோல தியானம் செய்வது ஆச்சரியமான ஒன்று. இந்த இறைவனை அருணகிரிநாதர் கூட பாடுகின்றார்.


‘‘மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர் தம்பிரானேஎன்பது அவர் வாக்கு.


‘‘சிறந்த விரதங்களோடும், தர்ப்பைப் புல்லுடனும், ஆசாரத்துடனும் உள்ள வேதநாயகனின் (தட்சிணாமூர்த்தியின்) நாயகனே முருகா!'' என்பது மேற்கண்ட வரிகளின் தேர்ந்த பொருளாகும்.


சீதா கல்யாணத்தில் தர்ப்பைசீதா கல்யாணத்தை வர்ணிக்க வந்த கம்பன், அழகாக ‘‘கடிமணப்படலம்என்று அதற்காக ஒரு தனி படலம் வைத்தார்.


அந்தப் படலத்தில், வசிட்ட முனிவர் செய்த திருமணச் சடங்குகளை வர்ணிக்கும் போது, வசிட்ட முனிவர், தர்ப்பை புல்லிற்கே முதலிடம் கொடுத்தார் என்று கம்பர் வர்ணிக்கிறார். இனி கம்பரின் அந்த சிங்கார வாக்கை கேட்போமா?


‘‘தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன்;

மண்டலம் விதிமுறை வகுத்து. மென் மலர்

கொண்டு நெய் சொரிந்து எரி குழும மூட்டினன்;

பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன்


அதாவது, வசிட்ட மாமுனிவர், அக்னி வளர்க்கும் இடத்தே பரப்ப வேண்டிய மணலைப் பரப்பினார். தருப்பைகளை உரிய இடங்களில் வைத்தார்.

அக்கினி வைப்பதற்குறிய வட்டமான இடத்தை, வேத விதிப்படி ஏற்படுத்தினார்.


மெல்லிய மலர்களைக் கொண்டு, நெய்யை ஆகுதியாகச் சொரிந்து, ஓம அக்கினி குவிந்தெழுமாறு செய்தார்.


தொன்று தொட்டு வந்த வேத நெறிப்படி மந்திரங்களால் தொழுது, மணச் சடங்கினைச் செய்தார், என்பது அந்தப் பாடலின் தேர்ந்தபொருள். ஆக ராமன் கல்யாணத்தில் கூட தர்ப்பைக்கே முதல் இடம் என்று தெரிகிறது இல்லையா?

தலமரமாக விளங்கும் தர்ப்பை

"விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்

துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்

வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி

நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே"

என்று திருஞான சம்பந்தர் திருநள்ளாறு திருத்தலத்தை பாடுகிறார்.


இந்தப் பாடலில் நள மகாராஜா இங்கு இறைவனை பூஜித்து, சனியின் தொல்லையில் இருந்து விடுபட்டதை, குறிப்பிடுவதை, கவனிக்க வேண்டும். மேலும் இறைவன்தியாக ராஜனாக காட்சி தரும் ஏழு சப்த விடங்கத் தலங்களில், திருநள்ளாறும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அநேக மகிமை உடைய திருநள்ளாறு தலத்தின் தல விருட்சமாக இருப்பது தர்ப்பை புல் தான்.

தர்ப்பை புல்லில் சயனித்து இருக்கும் திருமால்சீதையை கவர்ந்து சென்ற ராவணனிடமிருந்து அவளை மீட்க, ராமபிரான் தனது வானரப் படைகளுடன் தென்னகம் வந்தார். இங்கிருந்து இலங்கை சென்று அவளை மீட்க குறுக்கே கடல் தடையாக இருந்தது. ஆகவே, கடலைக் கடக்க உபாயம் சொல்லவேண்டும் என்று கடலரசனை ராமபிரான் பிரார்த்தித்தார்.


ஏழு நாட்கள் தர்ப்பைபுல்லில் செய்த படுக்கையில் கிடந்தபடி தவம் புரிந்தார், ராமபிரான்.

அவ்வாறு ராமன் தர்ப்பை புல்லில் தவமிருந்ததால் அந்த இடத்திற்கு திருப்புல்லாணி (புல் + அணை என்பதே இப்படி மருவி விட்டது என்று சொல்வார்கள்) என்ற நாமம் ஏற்பட்டது.


இன்றும் இந்தத் தலத்தில் தர்ப்பைப் புல்லில் கிடந்த ரூபத்தில் இருக்கும் ராமபிரானை தரிசிக்கலாம்.

இந்த இறைவனை திருமங்கை ஆழ்வார் 21 பாசுரங்களால் பாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்ப்பை புல் கொண்டு ஈமக் கடன்கள் செய்த திருமால் கும்பகோணத்தில் திருக்குடந்தை என்னும் திவ்ய தேசத்தில், திருமால் சார்ங்கபாணியாக காட்சி தருகிறான். இந்த இறைவனை, ஆழ்வார்கள் ஆராவமுதன் என்று கொண்டாடுகிறார்கள்.


108 வைணவத் திருப்பதிகளில், இந்தத் திருத்தலம் ஒன்றே உபயப் பிரதான திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது மூலவர் பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து மரியாதைகளும் உற்சவ பெருமாளுக்கும் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட திருக்குடந்தையில், வாழ்ந்த லட்சுமி நாராயணசுவாமி என்னும் பக்தர் இப்பெருமானின் கைங்கர்யத்தில் பெரிதும் ஈடுபட்டு, தகப்பன், தன் மகனுக்கு ஆற்றும் கடமைகள் போல் வாழ்நாளெல்லாம் இப்பெருமானுக்குப் பணிவிடை செய்வதிலேயே காலங்கழித்தார்.


உறவினர் ஒருவரும் இல்லாத அவர் பரமபதம் அடைந்ததும் அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை ஊரார் செய்து வைத்தனர். மறுநாள் காலையில் கோயிலைத் திறந்து பார்க்க, இப்பெருமாள் ஈர வேட்டியுடனும், மாற்றியுள்ள பூணூலுடனும், தர்ப்பை புல்லுடனும், இறுதிக்கடன் செய்யும் கோலத்தில் காட்சியளித்தார். எத்துனை மெய்சிலிர்க்கச் செய்யும் நிகழ்ச்சி! இறைவனே இறுதிக் கடன் செய்யும்போதும், தர்ப்பை புல்லே முதலிடம் வகிக்கிறது இல்லையா?

நவகிரக வழிபாட்டில் தர்ப்பைப் புல்நவகிரகங்களில் ஒன்றான கேதுவுக்கு உரிய சமித்து தர்ப்பை புல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, நவகிரக வழிபாட்டிலும் தர்ப்பைக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தர்ப்பையின் வகைகள்

தர்ப்பையின் நுனி பெருத்து இருந்தால் அது பெண் தர்ப்பை ஆகும். அடிப்பகுதி பெரிதாக இருந்தால் அது நபும்சக தர்ப்பை எனப்படும். அடிமுதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் அது, ஆண் தர்ப்பை ஆகும். தர்ப்பை, நாணல், யாவைப் புல், அறுகு, நெற்புல், விழல்மற்ற தானியங்களின் புல், மருள்பட்டை, சவட்டை கோரைப்புல், கோதுமைப்புல் ஆகியன பத்து விதமான தர்ப்பைகள் ஆகும்.

தர்ப்பையை கொய்யும் முறை

தர்ப்பையை அமாவாசையில் கொய்தால் ஒருமாதம் பயன்படுத்தலாம். பௌர்ணமியில் கொய்தால் ஒரு பட்சம் உபயோகிக்கலாம். பாத்திரபத மாதத்தில் (புரட்டாசி) கொய்தால் ஆறு மாதங்கள் பயன்படுத்தலாம். சிராவண மாதத்தில் (ஆவணி) கொய்தால் ஒரு வருடம் உபயோகிக்கலாம். ஆனால் சிரார்த்த காலத்தில் கொய்தால் அன்றே உபயோகிக்க வேண்டும்.

மும்மூர்த்திகளும் தர்ப்பையுள் அடக்கம்.

தர்ப்பையின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், முனையில் ஈசனும் இருப்பதாக புராணங்கள் சொல்கிறது.

அநேக மகிமைகள் உள்ள இந்த தர்ப்பை புல்லிற்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருக்கிறது. இதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது.

ஆகவே, நாமும் தர்ப்பை புல்லை முறையாகப் பயன்படுத்தி பெரும் சௌபாக்கியங்ளை பெறுவோம்

 

நன்றி இணையம்