பிறவி_மருந்தீஸ்வரர் திருத்துறைப்பூண்டி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:16 | Best Blogger Tips

 




இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் மிகவும் பழமையான பாடல் பெற்ற தலம் இது அருள்மிகு #பிறவி_மருந்தீஸ்வரர் திருக்கோவில். #திருத்துறைப்பூண்டி.

திருத்தருவாகிய வில்வ மரங்கள்

நிறைந்த காடாக விளங்கியதால் வட மொழியில் விஸ்வாரணியம் என்றும், தமிழில் திருத்தருப்பூண்டி என்றும் பெயர் பெற்ற திருத்தலப்பூண்டி தற்போது திருத்துறைப்பூண்டி என மருவி விளங்குகிறது. இங்குள்ள பிறவி மருந்தீசர் கோயிலில் விளங்கும் லிங்கமானது பாதாளலிங்கம் என அழைக்கப்படுகிறது. இச்சிவலிங்கம் தம்மை தரிசிப்பவர்களின் பிறவிப்பிணியை நீக்குவதால் பிறவி மருந்தீசர் என்றும், வடமொழியில் #ஸ்ரீபவஔஷதீஸ்வரர் என்றும் அழைக்கப் படுகிறது. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு வீற்றிருந்தருள் புரியும் அம்பாளின் பெயர் #பெரியநாயகி.



#தல_வரலாறு: ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான்.





ஜல்லிகை திருத்துறைப் பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர் களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான்.

அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான்.

அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.

#தலபெருமை: அஸ்வினி நட்சத்திரத்தலம்:

அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத் தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும். இத்தலபெருமானை வழிபட்டு பேறு பெற்றோர் பிரம்மதேவர் முதல் நாதமுனிவர்வரை அநேகர் எனலாம். இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் ஒன்பது தீர்த்தங்கள் சிறந்து விளங்குவதால் நவதீர்த்தம் என்பர். இங்குள்ள நடராஜ பெருமான் சந்திர சூடாமணித் தாண்டவர் என்று அழைக்கப் பெறுகிறார். நடராஜர் கோயில் வெளிப்பிரகாரத்தில் கோபுரவாயிலுக்கு அருகே உள்ளது.


சுவாமி சந்நிதியின் தென்புறத்தில் உள்ள தியாகராஜர் கோயிலில் உள்ள மகாலிங்கம்(விடங்கர்) விலை மதிப்பற்றது. வழிபடுவோருக்கு வேண்டிய நலன்களை அளிக்கவல்லது. முசுகுந்த பேரரசருக்காக இத்தலத்தில் தோன்றியருளி வீற்றிருந்தருளி அருள்பாலிக்கிறார் மரகலிங்க பெருமாள். இக்கோயிலுள் இருக்கும் பஞ்சமுகவாத்தியம்மிகவும் அபூர்வமானது.

இவ்வாத்தியம் தியாகராஜர் உத்ஸவகாலங்களில் வாசிக்க பெறுகிறது. இத்தகைய வாத்தியம் திருவாருர் கோயிலில் தான் உள்ளது. வேறு எங்கும் இவ்வாத்தியம் இல்லை.






முதற்பிரகாரத்தில் வடக்கேகஜம் #கஜசம்ஹாரமூர்த்தி தனிக்கோயில் உள்ளது. இப்பெருமான் மிகவும் அழகாகவும், மூர்த்திகரமாகவும் அருள்பாலிக்கிறார்.

2ம் குலோத்துங்கன் இக்கோயிலை திருப்பணி செய்திருக்கலாம் என தெரிகிறது. கஜசம்ஹாரமூர்த்தியை வழிபட்டால் தீப்பிணிகள் அணுகாது என்பது மக்களின் நம்பிக்கை. தனிக்கோயிலில் அருள்பாலிக்கும் பெரியநாயகி அன்னையின் உத்சவமூர்த்தி மங்களநாயகி என்று போற்றப்படும் பெரியநாயகி அம்மன் அருளால் ஜல்லியெனும் அசுரப்பெண்ணின் இறந்துபோன கணவன் உயிர்பெற்றெழுந்ததன் காரணமாக இக்கோயிலின் முகப்பிலுள்ள தீர்த்தம் மாங்கல்ய தீர்த்தம் என அழைக்கப் பெறுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.

 

நன்றி இணையம்