நோய்கள் தீர்க்கும் கார்த்திகை சோமவார விரதம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:46 | Best Blogger Tips

 







கார்த்திகை சோமவாரம்: நோய்கள் தீர்க்கும் கார்த்திகை சோமவார விரதம்

 திங்கட்கிழமை விரதம் இருப்பதனால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றுள்ளார். சோமவார விரதம் அனுஷ்டித்தால் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும்.

 

சந்திரன் மனோகாரகன், திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. சந்திரனுக்கு உரிய இந்த விரதத்தை சந்திரன் ஆட்சி பெற்று கடகம் ராசியில் அமர்ந்துள்ள இந்த நாளில் தொடங்குவது சிறப்பானது. இந்த விரதம் ஏன் தோன்றியது? இதை கடைபிடிப்பதால் என்ன நன்மை என்று யோசிப்பவர்களுக்கு புராண கதை ஒன்று உள்ளது.

 

 

குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும் நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

 

 

சிவன் பார்வதி விளையாட்டு

சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் போது அதில் பார்வதி தேவியே ஜெயித்தார். ஆனால் சிவன் தானே ஜெயித்ததாக கூறினார், உடனே பார்வதிக்கு கோபம் ஏற்பட்டது. சிவன் தனது திருவிளையாடலை ஆரம்பித்தார். ஒரு பிரமாணரை வரவழைத்தார் சிவன். சொக்கட்டானில் வென்றது யார் என்று நீங்களே கூறுங்கள் என்று கேட்டார். ஆனால் என் முன்பாக மீண்டும் விளையாடுங்கள் என்று கூறவே சிவனும் பார்வதியும் விளையாடினார்கள். அதில் பார்வதியே ஜெயித்தார். ஆனால் சிவனால் வரவழைக்கப்பட்ட பிரமாணர், சிவனே ஜெயித்தார் என்று பொய் சொன்னார்.

 

 

சாபம் கொடுத்த பார்வதி

பார்வதி தேவி துர்க்கையாக மாறி பிரமாணருக்கு சாபம் கொடுத்தார். ஒரு சின்ன விசயத்திற்காக பொய் சொன்ன பிராமணருக்கு குஷ்டநோய் தாக்கட்டும் என்றும் சாபம் கொடுத்தார். அந்த இடத்திலேயே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் சிவனிடம் விமோசனம் கேட்டார். அதற்கு சிவனோ, அம்பாள் இட்ட சாபம் இட்டது தான் அதை மாற்ற முடியாது என்று நழுவிக்கொண்டார்.

 

 

சோம வார விரத மகிமை

சிவனுக்காக பொய் சொல்லப்போய் இப்படி நோய் ஏற்பட்டு விட்டதே. அந்த சிவனே தன்னை காப்பாற்றவில்லையே என்று வேதனையோடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்யப்போனார். அப்போது அந்தப்பக்கமாக போன ஒரு பெண், அவரை தடுத்து நிறுத்தி காரணம் கேட்டாள். அதற்கு அவர் நடந்ததை கூறி அழுதார். அதற்கு அந்த பெண் சோமவார விரதத்தை பற்றி கூறினார். இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்த அந்த பெண், 16 சோமவார விரதம் இருந்து சிவனை வழிபடுங்கள், உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால் எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள்.

 

 

 

பெண்கள் சொன்ன விரத மகிமை

விதர்பநகர் சென்ற அந்த பிராமணர், கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்குத் கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள். இன்று தொடங்கி ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் இருந்து சிவ தரிசனம் செய்ய வேண்டும்.

சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு விட்டு ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் கூறினார்கள். அதன்படியே சோமவார விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரங்கள் கடைபிடித்தார். அந்த விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது.

 

 

எப்போது விரதம் தொடங்குவது

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

 

 

பார்வதி பரமேஸ்வரன்

கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னதானம் செய்து அந்த அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.

 

 

நோய்கள் நீக்கும் விரதம்

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் தீராத நோய்கள் தீரும் என்பது உறுதி.

 

கார்த்திகை சோமவாரம் விரதம் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்

நன்றி இணையம்