|| பரந்தாமனை பார்ப்பதாலும் நாமஸ்மரணை செய்வதாலும் ஏற்படும் பலன்கள் ||

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:54 | Best Blogger Tips

 



ஒரு முறை வேதவ்யாசர், தமது சீடர்களைப் பார்த்து,

அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா

பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ

என்ற ஸ்லோகத்தைச் சொன்னார்.

பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, த்ரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

சீடர்களே! அகல்யா, த்ரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள்.

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர், தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார்.


அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் த்ரொளபதி.

ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா தேவியைக் கண்டெடுத்தார்.

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள்.

பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!என்று கூறினார் வேத வியாசர்.

இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேதவ்யாசர், “இந்த ஐவருமே தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள்.

தன் கணவர் கௌதமர் தந்த சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ஸ்ரீராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய பெண்ணாய் ஆக்கினான்.

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து, பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ஸ்ரீராமன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள்.

ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள்

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத் தக்கவர்கள்!என்று கூறினார்.

அப்போது சீடர்கள், “ஸ்வாமி! இந்த ஐவருள் மகாலஷ்மியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா?

இந்திரனின் ஆசைக்கு இணங்கினாள் அகல்யா.

ஐந்து ஆண்களை மணந்தாள் த்ரௌபதி.

வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை.

மண்டோதரி நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள்.

இந்த நால்வரும் எப்படி பரம பவித்ரமான சீதைக்குச் சமமானவர்களாக ஆக முடியும்?” என்று வேதவ்யாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், “அதற்குத் திருமாலின் திருவருளே காரணம்.

ஸ்ரீராமனின் பாதுகையில் உள்ள மண் அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள்.

த்ரௌபதி எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள்.

ஸ்ரீராம தரிசனத்தால் தாரையும் மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள்.

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, த்ரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும் மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!என்றார்.

அகல்யா, த்ரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த மனிதர்களை சிஷ்ட:என்று சொல்வார்கள். க்ருத்என்றால் உருவாக்குபவர் என்று பொருள்.

சிஷ்டக்ருத்என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது திருநாமம்.

அகல்யா, த்ரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் சுசி:என்றழைக்கப்படுகிறார்.

சுசி:என்றால் தூய்மை என்று பொருள்.

தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் சுசி:எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்

சிஷ்டக்ருதே நம:என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.

சுசயே நமஹ:என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ.....!!!

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த யஜ்ஞமூர்த்தி என்ற பண்டிதர், ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். எப்படியாவது வாதம் செய்து ராமாநுஜரை வீழ்த்த வேண்டும் என்று அவர் எண்ணினார்.

காசியிலுள்ள நூலகத்தில் இருந்து பற்பல புத்தகங்களை வண்டியில் கட்டி எடுத்துக் கொண்டு ராமாநுஜர் எழுந்தருளியிருந்த திருவரங்கத்துக்கு வந்தார்.

ராமாநுஜரைச் சந்தித்து, “நான் உங்களோடு வாதம் செய்ய விரும்புகிறேன்.

நான் தோற்றால் என் சித்தாந்தத்தை விட்டு விட்டு உங்கள் சித்தாந்தத்தைத் தழுவி, உங்களுக்குச் சீடராகி, உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!என்றார் யஜ்ஞமூர்த்தி.

ராமாநுஜரோ, “எனக்கு வாதம் செய்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் நீங்கள் ஆர்வத்தோடு வாதம் செய்ய அழைப்பதால் வாதத்துக்கு வருகிறேன்!என்றார்.

நீங்கள் தோற்றால் எனது சித்தாந்தத்துக்கு வந்து விடுவீர்களா?” என்று ராமாநுஜரிடம் கேட்டார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ, “நான் ஒருவன் தோற்றதால் என் சித்தாந்தம் பொய் என்று ஆகாது.

எங்கள் குருமார்கள் சொன்னது என்றுமே சரியாகத் தான் இருக்கும்.

நான் தோற்றால் நான் அவற்றைச் சரியாகப் படிக்கவில்லை என்று பொருள்.

எனவே நான் தோல்வி

அடைந்தால், இனி சமய நூல்களைப் படிப்பதையும் போதிப்பதையும் நிறுத்திக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்!என்று விடையளித்தார்.

வாதம் தொடங்கியது.

மகாபாரதப் போர் போல் நடைபெற்ற அந்தக் கடுமையான வாதம் பதினேழு நாட்களுக்குச் சென்று கொண்டே இருந்தது.

யார் வெல்வார் என்றே சொல்ல முடியாத அளவுக்கு யஜ்ஞமூர்த்தியும் ராமாநுஜரும் போட்டி போட்டுக் கொண்டு வாதிட்டனர்.

பதினேழாம் நாள் வாதம் முடியும் சமயத்தில், யஜ்ஞமூர்த்தி ராமாநுஜரிடம் ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு ராமாநுஜரால் உடனே பதிலளிக்க முடியவில்லை. நாளை பார்க்கலாம்!என்று சொல்லிவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.

தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணி, கர்வத்தோடு தனது இருப்பிடம் திரும்பினார் யஜ்ஞமூர்த்தி.

ராமாநுஜரோ மனமுடைந்த நிலையில் தமது மடத்தை அடைந்தார்.

மறுநாள் காலை வாதம் நடைபெறும் சபைக்கு ராமாநுஜர் வந்தார்.

அவர் வரும் தோரணையைப் பார்த்தவாறே, யஜ்ஞமூர்த்தி நேராக ராமாநுஜரின் திருவடிகளில் போய் விழுந்தார். ஸ்வாமி! அடியேன் தோற்று விட்டேன்! நீங்கள் தான் வென்றீர்! உங்கள் முகத்தைப் பார்த்தவாறே எனது கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்து விட்டது! இனி நான் உங்கள் சீடன்! உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!என்றார்.

அப்போது ராமாநுஜர், “உம்மை என் சீடராக ஏற்கிறேன்.

ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டி உள்ளது.

நேற்று மாலை மடத்துக்குச் சென்ற அடியேன், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.

என் கனவில் தோன்றிய வரதராஜர், “உமக்கு நல்ல சீடர் ஒருவர் கிடைக்கவே இந்த யஜ்ஞமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளேன்.

ஆளவந்தார் அருளிய சித்தி திரயம், நாதமுனிகளின் மாயாவாதக் கண்டனம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நாளை வாதாடி அவரை வென்று வாரும்!என்று கூறினார்.

அந்தப் பெருமாள் கொடுத்த தைரியத்தால் தான், நேற்று மனமுடைந்து போன அடியேன், இன்று கம்பீரமாகச் சபைக்கு வந்தேன்.

அந்தக் கோலத்தைப் பார்த்து நீங்களும் எனக்குச் சீடராகி விட்டீர்.

இந்த வெற்றிக்கு அடியேன் காரணம் அல்லன்.

காஞ்சி வரதராஜப் பெருமாளே காரணம். எனவே உங்கள் பெயரோடு என் பெயரைச் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம்.

ஆனால் நிச்சயமாக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தைச் சேர்த்துக் கொள்க!என்று கூறினார்.

தான் திருந்தி ராமாநுஜரின் சீடராக ஆனதற்கு வரதராஜனின் அருளே காரணம் என உணர்ந்த யஜ்ஞமூர்த்தி, அருளாளப் பெருமாள் என்ற வரதராஜப் பெருமாளின் திருப்பெயரையும்,

எம்பெருமானார் என்ற ராமாநுஜரின் திருப்பெயரையும் இணைத்து, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்என்ற பெயருடன் ராமாநுஜரின் சீடராக ஆனார்.

அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால்.

ராமாநுஜர் வாதில் வென்றதற்கும் அவரே காரணம்.

ராமாநுஜரின் சீடராக ஆகும் பாக்கியம் யஜ்ஞமூர்த்திக்குக் கிடைத்ததற்கும் அவரே காரணம்.

அதனால் தான் திருமால் ஹேது:என்று அழைக்கப்படுகிறார். ஹேது:என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.ஹேதவே நமஹஎன்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும் குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள்புரிவார்.

ஜெய் ஸ்ரீராம்

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

 

நன்றி இணையம்