#இந்தியா_என்றொரு_தேசம்_இருந்ததா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:13 | Best Blogger Tips

 




வழக்கம்போல #இந்து என்றொரு வார்த்தையே இல்லை. இந்து என்றொரு மதமே இல்லை என்பதைப்போல #இந்தியா என்றொரு நாடே இல்லை என்றும் அது ஆங்கிலேய ஆட்சிக்கு பின்தான் இந்தியா என்ற ஒரு நாடாக உருவானது என்பது இங்கு நிலவும் பெரும்பான்மை வாதமாகும்.....!

இதன் அடிப்படையில் இந்தியா என்றொரு தேசம் இருந்ததா? இன்றைய பாரத நிலப்பரப்பை நமது பழமையான இலக்கியங்கள் எப்படி குறிக்கின்றன என்பதை இப்பதிவில் காணலாம்...!

இதற்கு ஊர் உலகம் சுற்றி வளைக்காமல் ஓரிரு சங்க இலக்கிய பாடல்கள் மூலம் விளக்கலாம் என்றுள்ளேன். அவ்வகையில் காலத்தால் மூத்த சங்க இலக்கியங்களுள் ஒன்றான #புறநானூற்றில் புலவர் குறுங்கோழியூர் கிழார் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மீது பாடப்பட்ட பாடலில் அவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தேசத்தை எல்லைகளாக வகுக்கிறார்....!

பாடல் :

"#தென்_குமரி, வட பெருங்கல்,

குண குட கடலா வெல்லை,

குன்று, மலை, காடு, நாடு

ஒன்று பட்டு வழி மொழியக்,

கொடிது கடிந்து, கோல் திருத்திப்,

படுவது உண்டு, பகல் ஆற்றி,

இனிது உருண்ட சுடர் நேமி

முழுது ஆண்டோர் வழி காவல"

பொருள்:

தென் திசையில் #குமரியும், வட திசையில் #இமயமும், கிழக்கு மேற்கில் கடல் எல்லையாகவும், நடுப்பட்ட நிலத்தில் உள்ள குன்றம், மலை, காடு, நாடு என்பனவற்றை உடையோர் ஒன்றாக வழிபட்டு ஆமோதிக்க, தீமைகளைப் போக்கி அரசு செம்மையாகச் செய்து, அரசர்க்குரிய இலக்கணத்துடன் ஆட்சி செய்து நடுவு நிலைமை யுடன் நல்லபடியாக சுழற்சியும் ஒளியுமுடைய சக்கரத்தால் நாடு முழுவதையும் ஆண்டோரது மரபின் காவலனே என்று சேரமானை புகழ்கிறார்...!

இங்கு சேரமான் ஆண்ட நிலப்பகுதியாக இன்று இருக்கும் #பாரத_நாட்டை முழுமையாக அடக்கிவிட்டார் புலவர். வடக்கே இமயமும் தெற்கே குமரியும் என்று வெளிப்படையாக இன்றைய இந்திய தேசத்தின் எல்லைகளை குறித்து விட்டார்...!

அடுத்ததாக அதே புறநானூற்றில் #காரிகிழார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மீது பாடிய பாடலில் #பாண்டியனின் புகழ் எங்கெங்கு பரவ வேண்டும் என்று கூறுகையில் வடக்கே இமயத்தையும் தெற்கே குமரியையும் குறிப்பிடுகிறார்....!

பாடல் :

"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின்

நீர்நிலை நிவப்பின் கீழு மேல

தானிலை யுலகத் தானு மானா

துருவும் புகழு மாகி விரிசீர்த்

தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்

பற்ற லிலியரோ நிற்றிறஞ்சிறக்க"

பொருள் :

வடக்கில் பனி மிகுந்த உயரமான இமயமலைக்கு வடக்கும், தெற்கில் குமரி மலையினின்று ஊற்றெடுத்துப் பாயும் குமரி ஆற்றிற்குத் தெற்கும், கிழக்கில் கரையை மோதுகின்ற, சகரரால் தோண்டப்பட்ட சமுத்திரத்திற்கு கிழக்கும், மேற்கில் மிகப் பழமையான ஆழமான கடலுக்கு மேற்கும், கீழே நிலம், ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் இணைந்து அடுக்கிய அமைப்பின் முதற்கட்டாகிய நீர்நிலை நிறைந்த நிலத்தின் கீழும், மேலே அமைந்துள்ள கோ லோகத்திலும் மட்டுமல்லாது உனது படை, குடி முதலிய திறங்கள் பெற்று பேரும் புகழுடன் சிறக்கட்டும் என்று போற்றி புகழ்கிறார்....!

இங்கும் இன்றைய இந்திய தேசத்தின் நிலப்பகுதியையே பாண்டியனுக்கும் உவமையாக்குகிறார் புலவர் என்பது கவனிக்கவேண்டியதே....!

இது தவிர்த்து #பதிற்றுப்பத்து மற்றும் #சிலப்பதிகாரத்திலும் இதே எல்லை வரையறை உண்டு என்பதை கூறிக்கொண்டு இந்தியா என்றொரு தேசமே இல்லை என்போருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்....!

ஜெய் ஹிந்த் ..

 


நன்றி இணையம்