பொங்குசனி திருத்தலம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:32 | Best Blogger Tips

 


சனீஸ்வரர் பரிகாரத் தலங்கள்இன்று ஒரு பட்டியல் 27/2/2021 சனிக்கிழமை பதிவு செய்து வணங்குகின்றோம்

திருக்கொள்ளிக்காடு -பொங்குசனி திருத்தலம்


சனீஸ்வரனுக்கு
முற்பிறவிகளில் பாவச் செயல்களில் ஈடுபட்ட ஜீவன்களுக்கு அவற்றின் மறுபிறவிகளில் தயங்காது தண்டனை அளிக்கும் கடமை தரப்பட்டிருந்தது. இதனால் மக்கள் தன்னை ஏசுவதை நினைத்து அதிக மனவேதனை ஏற்பட்டு சிவபெருமானை வணங்கி, பாவத்திற்குத் தண்டனையளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க மனமுருக வேண்டினார்.தவறு செய்பவர்களைத் தண்டிப்பதன் மூலம் தர்மத்தை நிலைநாட்டுவதால் அஞ்சற்க என்று சிவபெருமான் ஆறுதல் கூறி அருள்புரிந்தார். சனி பகவான் சமாதானம் அடையாமல் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி அக்னீவனம் என்னும் திருத்தலத்திற்கு வந்து பல்லாயிரம் ஆண்டுகாலம் கடும் தவமியற்றியபோது, இறைவன் அக்னி உருவில் தரிசனம் அளித்து சனி பகவானை பொங்கு சனியாகத் தன் இரண்டாவது அவதாரம் எடுக்கச் செய்து அவரைத் தரிசிப்பவருக்கு, எத்தகைய கொடிய பாவத்தைச் செய்திருந்தாலும் அவர்களது பாவங்களை அடியோடு நிவர்த்தி செய்து தண்டனை இல்லாமல் தவிர்த்துவிடும் சக்தி அளித்து அனுக்கிரக சனியாக அருள் புரியச் செய்தார்.சனி பகவானின் சோகத்தை தீர்த்த சக்தி வாய்ந்த திருத்தலம் அக்னீஸ்வரம். அக்னிபுரி, அக்னிவனம் எனும் சீரளத்தூர். இத்தலம் திருக்கொள்ளிக்காடு எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சனி பகவான் சதூர் புஜத்துடன் வலதுகரம் அபயஹஸ்தமாகவும், ஒரு கரத்தில் கலப்பை ஏந்தியும், தனிச்சன்னிதியில் எதிரில் மகாலெட்சுமி சன்னிதி அமையப் பெற்று விளங்குவதால் பொங்குசனி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனை தரிசித்து பொங்குசனி பகவானை பூஜிப்பவர்களின் பாவங்கள் அந்த விநாடியே அக்னீஸ்வரரால் எரிக்கப்பட்டு நீண்ட ஆயுளையும், தொழில் முன்னேற்றத்தையும் அடைவதாக கூறுகிறது புராதனமான தல வரலாறு.

இங்கு நவக்கிரஹங்களுக்குத் தண்டனை அளிக்கும் பொறுப்பு இல்லாததால் தங்கள் மாறுபட்ட குணங்களை விட்டு ஒரே வரிசையில்வடிவில் நின்று தரிசனம் அளிப்பது சிறப்பாகும். இறைவன்-அக்னீஸ்வரன். இறைவி-மிருதபாதநாயகி. இத்தலத்தில் 3 தலவிருட்சங்கள் உள்ளன. வன்னிமரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலையைப் போக்குகிறது. சரக்கொன்றை மரம், கொன்றைப்பூ கொத்துக் கொத்தாதப் பூப்பது போல் குடும்பத்தில் மனவேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையை அளிக்கிறது. இத்தலம் மன்னார்குடியிலிருந்து கிழக்கே 22கி.மீ. திருவாரூரிலிருந்து தென்மேற்கே 25 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து வடமேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. இது சுமார் 2,300 ஆண்டு பழமையானது என்பது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கணிப்பாகும்.

திருநாரையூர் ஸ்ரீ இராமநாத சுவாமி திருக்கோயில் மங்கள சனீஸ்வரர்

கும்பகோணம்-திருவாரூர் வழித்தடத்தில் திருநாரையூர் எனும் சித்தீஸ்வரம் என்கிற சேத்திரத்திற்கு எதிரில் அரசாங்க மருத்துமனைக்கு அருகில் இராமநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.இத்தலத்தில் கஷ்டங்கள் ஏற்பட்டு இறைவனை வணங்கினார். அவரது வேண்டுதலை ஏற்று சித்தர்கள் வாழ்ந்த இத்தலத்தில் இராமநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து மங்களம் அளிக்கும் சனீஸ்வரர் சன்னிதியையும் ஏற்படுத்தி சனிதோஷம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சனீஸ்வரர் தனிசன்னிதியில் தனது இரண்டு தேவியர்-மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடன் தனது இரண்டு குமாரர்கள்-மாந்தி, குளிகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக மங்களம் அளிக்கிறார். தசரதர் வழிபட்டதற்கு ஆதாரமாக மங்கள சனீஸ்வரர் சன்னிதியில் தசரத மகாராஜா வணங்கி பூஜிக்கும் நிலையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு கோஷ்டத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது சிறப்பாகும்.

புதுக்கோட்டை ஆலங்குடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடாரம் கொண்ட சோழபுரம் பேரூர் ஆண்டான் என்று அழைக்கப்பட்டு தற்சமயம் ஆலங்குடி என்று வழங்கப்படுகிற திருத்தலத்தில் ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் சைவ, வைணவ ஒருமைப்பாட்டினை உணர்த்தி அருள்புரிவது சிறப்பாகும். காசி வில்வம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். புதன்கிழமைகளில் வரும் பிரதோஷம் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விஷ்ணுவையும், பிரம்மாவையும் தரிசிக்கலாம். புதனுக்கும், சனீஸ்வரனுக்கு அதிதேவதையாக மகாவிஷ்ணு விளங்குகிறார்.இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கினால் சனி மற்றும் புதன் கிரஹ தோஷங்கள் நீங்குகின்றன.இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு நெற்றியில் திருநாமம் இடப்பட்டிருப்பது காரணமாக இந்த கோயில் பெருமான் நாம புரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள காலபைரவர், சூரியன் மற்றும் குழந்தை வடிவாகத் திகழும் பால சனீஸ்வரர் தனிச்சன்னிதிகளில் அருள் புரிவதால் இம்மூவரையும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். புதன் கிரஹத்திற்குரிய பரிகாரத்தலமும் ஆகும்.

 

நன்றி இணையம்