*ஊழலை ஒழிக்க என்ன செய்யவேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:38 | Best Blogger Tips


-10 யோசனைகள்#EndCorruption
Image result for *ஊழலை ஒழிக்க என்ன செய்யவேண்டும்"
லஞ்சம், ஊழல்... எங்கு, யாரால், எப்போது தொடங்கியது என்பவை விடைதேட முடியாத கேள்விகள்தான். ஆனால், அவை புற்றுநோயைப்போல பரவி, இன்றைக்கு சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. சாமான்யன் தொடங்கி நாடு வரை வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக மாறிவிட்டன. ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கும் ஊழல், சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிக் கிடக்கிறது.

*அறிவிப்புப் பலகைகள் அவசியம்*

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அந்த அலுவலகத்தின் பணி, ஒவ்வொரு சேவைக்கும் எத்தனை நாள்கள் ஆகும் என்பது பற்றிய அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும். ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் லஞ்சம் தொடர்பான புகார் எண், முகவரி இடம் பெற வேண்டும் என்ற அரசாணையே இருக்கிறது. இன்றைக்கு பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகள் இருப்பதில்லை. அவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல சாலைகள், பாலங்கள், தூர் வாருதல் என அரசுப் பணிகள் நடைபெறும் இடங்களில் அதுதொடர்பான அறிவிப்புகள் பலகையில் இடம்பெற வேண்டும்

அதாவது, எந்த வகையான பணி, ஒதுக்கப்பட்டுள்ள தொகை, முடிவடையும் காலம் என அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்

உதாரணத்துக்கு, சாலை அமைக்கிறார்கள் என்றால் அது தார்ச் சாலையா, சிமென்ட் சாலையா, எத்தனை அடி தடிமனில் அமைக்கப்படுகிறது, எத்தனை கிலோமீட்டர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும்.

*ஆன்லைன் சேவை உதவும்*

எந்தவொரு அரசு சேவை பெறுவதற்குமே நேரிசலில்செல்ல வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ஆன்லைன் மூலம் நாம் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பதைக் கொண்டுவர வேண்டும். அரசு திட்டங்களுக்கான டெண்டர் அறிவிப்பு போன்றவற்றையும் ஆன்லைனில் நடத்த வேண்டும். ஆன்லைனில் அனைத்து சேவைகளும் கொண்டுவருவது, லஞ்சம், ஊழல் முறைகேடுகள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோக வழிவகுக்கும்.

*கடுமையான சட்டம் தேவை*

பல வலுவான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. அதோடு, புதிய சட்டங்களையும் இயற்ற வேண்டும். ஓர் அதிகாரி லஞ்சம் பெற்றதாக நிரூபிக்கப்பட்டால், அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். சட்டங்கள் கடுமையாக இல்லாததால், ஏற்கெனவே லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவர்கள்கூட மீண்டும் மீண்டும் வாங்கும் நிலையே இருக்கிறது.

*தினசரி விசாரணை வேண்டும்*

ஒருவர்மீது லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டால்கூட, அதற்கான தீர்ப்பு வருவதற்கு நீண்டகாலம் ஆகிறது. எனவே, ஊழல் வழக்குகளைத் தினசரி விசாரிக்க வழிவகை செய்ய வேண்டும். உடனடி விசாரணையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் உடனடி நடவடிக்கையும் ஊழல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

*லோக் ஆயுக்தா' நடைமுறைப்படுத்துதல்*

லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. அந்தத் துறையே முதல்வரின்கீழ் வருகிறது. அமைச்சர்கள் உள்பட முதல்வர்மீதே ஊழல் புகார்கள் வந்திருக்கின்றன. பலரும் தண்டனை பெற்றிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, அவரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறை எப்படி அவர்மீதே நடவடிக்கை எடுக்கும். எனவே, முதல்வரின்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்த 'லோக் ஆயுக்தா' அமைப்பை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
*பொதுமக்களுக்கான பொறுப்பு‍♂

ஒவ்வொருவரும், தங்களுக்கு எந்தச் சான்றிதழ் வாங்கினாலும் அதை அவசரகதியில் அணுகாமல், உரியகாலத்துக்கு முன்னரே தொடங்க வேண்டும். உதாரணத்துக்கு, பள்ளியில் சேர்க்க பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால், முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நேரத்தில் போய் சான்றிதழ் வாங்க நின்றால், நம் அவசரத்தைப் பயன்படுத்தி, லஞ்சம் கேட்பது அதிகாரிகளுக்கு சுலபமாகிவிடும். அதோடு, பிறப்புச் சான்றிதழ் தொடங்கி, மின் இணைப்புவரை ஒவ்வொரு சேவைக்கும் எவ்வளவு கட்டணம், எவ்வளவு நாள்களில் கிடைக்கும் என்பதைப் பற்றி தகவல்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது, கூடுதல் கட்டணங்கள் கொடுப்பதையும், இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் உதவும்.

*தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்*

மக்களின் பயம்தான் ஊழல்வாதிகளின் பலம். லஞ்சம் கேட்பவர்கள்மீது தைரியமாகப் புகார் செய்ய முன்வர வேண்டும். லஞ்சப் புகார் கொடுப்பவர்களை ஊக்குவிக்கும் பணியை அரசே செய்ய வேண்டும்

உதாரணத்துக்கு, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் செய்பவர்களுக்கு, முறைகேடுகளில் ஈடுபடுபவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூல் செய்யப்படுகிறதோ, அதில் 20 சதவிகிதம் பரிசுத் தொகையாக வழங்கலாம். பரிசுபெற விரும்பாதவர்கள், தங்களைப் பற்றிய தகவல்களைத் தரத் தேவையில்லை என்று அறிவிக்கலாம்.

*ஆர்.டி. சட்டம் பயன்பாடு*

2005-
க்கு முன்பு எம்.எல்., எம்.பி-க்கள்தான் அரசு ஆவணங்களையும் தகவல்களையும் பார்க்க முடியும், பெற முடியும் என்று இருந்தது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தபிறகு, சாதாரண குடிமக்களும் தகவல்களைப் பெற முடியும்

இதன்மூலம், அரசுத்துறையில் நிலவும் ஊழல்களைச் சாதாரண மக்களாலும் வெளிக்கொண்டு வரமுடியும். இதைப் பயன்படுத்தும் முறையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

*அரசின் கடமை என்ன?*

மக்கள் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்குரிய காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்த வேண்டும். ஊழல்வாதிகளில்மீது உரிய நடவடிக்கை எடுத்தல், நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருத்தல் என அரசு, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலே 80 சதவிகித ஊழல் கட்டுக்குள் வந்துவிடும்.

*தனி நபரின் பொறுப்பு*

அதிகாரத்தால் மட்டும் ஊழல் நடப்பதில்லை. ஊழலற்ற தேசமாக மாற வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாற வேண்டும். அதுதான் அடிப்படை. எந்தவொரு பணிக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டோம். வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் கட்டுப்படுத்தும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டளிக்க மாட்டோம் என்றும் உறுதியுடன் நாம் செயல்பட்டால் லஞ்சம், ஊழலை ஒழிக்கலாம்"

*படிப்போம் பகிர்வோம்*

*தகவல் அறியும் உரிமை குழு*



நன்றி இணையம்