தியானம் செய்பவர்கள் எதைக்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:12 | Best Blogger Tips

கேள்வி - கொள்ள வேண்டியவை, தள்ள வேண்டியவை என்று சொல்லியிருக்கிறிர்கள். தியானம் செய்பவர்கள் எதைக் கொள்வது, எதைத் தள்ளுவது என்று சொன்னால் நன்றாக இருக்கும் !!?!
இராம் மனோகர் - இதைத்தானே ஆயிரக் கணக்கான பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். ஒழுக்கத்தை கொள்ள வேண்டும், தீயவற்றைத் தள்ள வேண்டும் என்று ஒரே வரியில் சுருக்கமாக பதில் சொல்லி விடலாம். ஆனால், நண்பர் இன்னும் அதிகமான விளக்கங்களை எதிர்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. சரி சற்று விரிவாகப் பார்த்து விடுவோம். பொதுவாக காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்றும்தான் அறவாழ்வுக்குத் தடை என்று சொல்வதுண்டு. உண்மையும் அதுதான். நாம் எவ்வளவுதான் விரிவாக விளக்கினாலும், மற்ற குற்றங்கள் அனைத்திற்கும் இந்த மூன்றும்தான் அடிப்படையாக இருக்கின்றது. கொலை, களவு, பொய், பிறன் மனை விழைதல், கடுஞ் சொல், புறங் கூறுதல், பயனற்ற பேச்சு, ஆசை, குரோதம், வஞ்சம், பகைமை பாராட்டுதல், எதிர் மறை சிந்தனை, கவலை, ஏற்ற தாழ்வு மனப்பான்மை இவையாவுமே நம் அற வாழ்வுக்குத் தடைகள்தான். இந்தத் தடைகள்தான் நம் மன அமைதியைச் குலைத்து, வாழ்வை நிர்மூலமாக்கி விடுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் தியானம் என்பது கடும் பிரயத்தனமாகிப் போய் விடுகின்றது.
எனவே இவற்றை அறவே நம் வாழ்விலிருந்து தள்ளி விட வேண்டும். அதுதான் அற வாழ்வு. இவற்றை ஒருவன் தள்ளி விடுவானேயாகின், பிறகு அவன் கொள்ள வேண்டியது என்னதான் இருக்கிறது ? ஒன்றுமே இல்லை. நான் வெறும் வார்த்தைகளில் உபதேசமாகச் சொல்லி விட்டேன். ஆனால், நடைமுறை வாழ்வில் அவ்வளவு எளிதில் இவற்றையெல்லாம் தள்ளி விட முடிவதில்லையே என்கிற போதுதான் கேள்வி வருகிறது. அதற்குத்தான் கொள்வனவற்றைக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். தீமையை அடக்க, அதன் வெம்மையை குளிர்விக்க, அதை வலுவிழந்து போகும்படிச் செய்ய நன்மைகளைக் கையில் எடுக்க வேண்டும் என்கிறார்கள். இனி நாம் அத்தகைய நன்மைகள் என்னவெல்லாம் என்று பார்ப்போம். ''தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே'' என்பார் ஔவை. தானம் எல்லோரும் செய்து வாடலாம். எளியவர், வறியவர்கள் கூட தம்மிடம் உள்ளதில் ஒரு பங்கை பிறருக்கு தானம் செய்து விட முடியும். ஆனால் தவம் அப்படியல்ல. ஒருவர் தவம் செய்ய வேண்டுமென்றால், அவருக்கு அடிப்படை ஒழுக்கங்கள் அமையப் பெற்றிருத்தல் மிக மிக அவசியமாகும். ஒழுக்கமில்லாதவிடத்து மன அமைதி என்பது இருக்காது.
அப்படியானால் ஔவைப் பிராட்டி தானத்தை ஏன் முதலில் சொல்கிறார் ? அது ஏன் என்றால், தானம் செய்து பழகியவர்களுக்கு பொருட்கள் மேல் உள்ள பற்று அறுந்து விடும். மேலும், பிறர் பொருள் மீது ஆசையும், அதைக் கவர வேண்டும் என்ற எண்ணமும் எழாது. இந்த ஆசைதான் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால்தான் அதை தள்ளுவதற்கேற்ற உபாயமாக தானத்தை முன் வைக்கிறார் ஔவை. அதனால் பயனாக காமம்(பற்று), சினம், மயக்கம் இந்த மூன்றுமே அறுபட்டு விடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி தவம் என்று வருகிற பொழுது ஒழுக்கம் அடிப்படையாக அமைகிறது. பொதுவாக ஒழுக்கம் என்றால் தனக்கோ, பிறர்க்கோ உடலாலோ, மனதாலோ எப்பொழுதும் தீங்கு செய்யாமலிருப்பதுதான் ஒழுக்கம் என்பார் என் ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அத்தகைய ஒழுக்கத்தை நாம் நம்முடைய இயல்பாக அடையப் பெறுவதற்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.
முதலில் தியானத்தை நம் அன்றாடக் கடமையாகக் கொண்டு அதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதனால் மனதில் நன்மையின் மீது நாட்டம் அதிகரிக்கும். நம் மீது நமக்குள்ள தாழ்வு மனப்பான்மைகள் அகலும். தன்னம்பிக்கை வளரும். அது போலவே பகிர்ந்து கொள்ளக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய தேவைக்கு அதிகமாச் சேரும் பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதால் சமூக நல்லுணர்வு வளர்வதோடு, கடும் பற்று ஒழிகிறது. மற்றவர்கள் செய்யும் நற்செயல்களைக் கண்டு மகிழ்வதோடு, அவர்களைப் பாராட்டும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நம்மைச் சுற்றிலும் நற்செயல்கள் பரிணமிப்பதோடு, அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு செயலாகவும் அது விளங்குகிறது. நமது இந்த உலகாய வாழ்க்கை என்பது ஒரு சார்பு வாழ்க்கையாகும். இங்கு எதையும் சாராமல் எதுவும் இயங்க முடியாது. ஆகையினால் பிற மனிதர்களுக்கு அல்லது பிற உயிரினங்களுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் இணக்கமும், நல்ல பண்புகளும் வளரும்.
முதியவர்களுக்கு மட்டுமின்றி மரியாதைக்குரிய பண்புகளைப் பெற்றோர் நம்மை விட வயது குறைவானவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கும் தயக்கமேதுமின்றி வணக்கமும், மரியாதையும் செலுத்த வேண்டும். இதனால் நல்லுறவு மேலோங்கும். தியானத்தின் மதிப்பு சமூகத்தில் உயரும். அது மட்டுமல்ல நல்ல கோட்பாடுகளை கேட்டு அல்லது படித்து, ஊன்றிக் கவனித்து, உள் வாங்கிக் கொள்ள வேண்டும். இதன் பயனாக நாம் ஒழுக்கத்தில் நிலைத்து நிற்பது என்பது எளிதாக அமையும். இனி நாம் உள் வாங்கிக் கொண்ட கோட்பாடுகளை நம் வாழ்வில் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது மிக முக்கியமான கட்டமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கற்றதை, கேட்டதை, உள் வாங்கி உணர்ந்து கொண்ட நல்ல விஷயங்களை மற்றவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் படிக்கு எடுத்துச் சொல்லும் திறமையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேற் குறிப்பிட்ட நல்ல விஷயங்களைக் கொள்ளும் பொழுது தீமை என்பது வேரோடு சாய்க்கப்படும்.
இனி எதை முதலில் கடைபிடிப்பது ? தள்ளுவதையா ? கொள்ளுவதையா ? என்ற கேள்வி எழுகிறது. இரண்டையுமே கடை பிடக்க வேண்டும். தள்ளுவதால் கொள்ளுதல் எளிதாகும். கொள்ளுதலால் தள்ளுதல் எளிதாகும். எனவே இது போன்ற குதர்க்கமான கேள்விகளுக்கு மனதில் இடங்கொடாமல், அறிவில் தெளிவைப் பெற்று, ஞானத்தில் மேலோங்கி நிற்பதற்கே முயற்சி செய்ய வேண்டும்.

 நன்றி இணையம்