பீஷ்மாஷ்டமி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:15 | Best Blogger Tips
 



"கங்கையின் மைந்தன்' என்றும்; "பிதாமகன்' என்றும் போற்றப்படும் பீஷ்மரின் இயற்பெயர் காங்கேயன் என்பதாகும். இவர் கங்கையிடம் பிறந்தது எப்படி?
கங்கையைக் கண்டு அவள் அழகில் மயங்கிய சாந்தனு மன்னன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அதற்கு கங்கை ஓர் நிபந்தனை விதித்தாள்.
""திருமணத்திற்குப்பின் நமக்குப் பிறக்கும் குழந்தையை எடுத்துச் சென்று நதியில் வீசிவிடுவேன். ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்கக் கூடாது. இந்த நிபந்த னையை மீறிக் காரணம் கேட்டால் நான் உம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவேன்'' என்றாள். கங்கையின் நிபந்த னைக்குக் கட்டுப்பட்டு அவளுக்கு மாலை சூடினார் சாந்தனு. முதலில் ஒரு குழந்தை பிறந்தது. அதை எடுத்துச் சென்று நதியில் வீசினாள் கங்காதேவி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தனு மகாராஜாவின் மனம் கலங்கியது. ஆனால் நிபந்தனை அவரைத் மௌனியாக்கி விட்டது! இவ்வாறு ஏழு குழந்தைகளை நதியில் வீசிவிட்டாள் கங்கை. அடுத்து தான் பெற்ற எட்டாவது குழந்தையுடன் நதியை நோக்கிச் சென்றாள் கங்கை. இதனைப் பொறுக்க முடியாமல் சாந்தனு மகாராஜா, ""கங்கா, பெற்றெ டுத்த குழந்தையை ஏன் நதியில் வீசுகிறாய்?'' என்று கேட்டு விட்டார். உடனே கங்கையானவள், ""மகாராஜா! நீங்கள் நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி உங்களுக் கும் எனக்கும் எந்த சம்பந்த மும் இல்லை'' என்று குழந் தையை சாந்தனுவிடம் கொடுத்துவிட்டு, நதியில் சங்கமமாகி மறைந்தாள். அந்தக் குழந்தைதான் பிரபா சன் என்னும் காங்கேயன்.
காங்கேயன்தான் பின்னா ளில் "பீஷ்மர்' என்று பெயர் பெற்றார்.
ஒருசமயம் சாந்தனு மகாராஜா வேட்டை யாடச் சென்றார். அப்போது மீனவ குலப் பெண்ணைக் கண்டு, அவளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் கொண்டார். அப்பெண்ணின் தந்தை யான மீனவர் குலத் தலைவனி டம் சென்று சாந்தனு தன் விருப்பத்தைக் கூறிய போது, அவர் தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளுக்கே அரசுரிமை தருவதாக இருந்தால் சம்மதிப்பதாகக் கூறினார்.
அரசுரிமை பெற்ற மூத்த மகன் இருக்கும்போது இந்த நிபந்தனையை எவ்வாறு ஏற்பது என்று தவித்தார் சாந்தனு. அதேசமயம் அந்தப் பெண்ணை யும் அவரால் மறக்க முடியவில்லை. இதையறிந்த காங்கேயன் (பீஷ்மர்) மீனவர் குலத் தலைவனிடம் சென்று தன்னுடைய அரசுரிமையைத் துறப்பதாக வும், பின்னாளில் உரிமைப்போர் வராத வகையில் தான் திருமணமே செய்துகொள்ளாமல் சுத்த பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார். சாந்தனுவின் ஒரே வாரிசான காங்கேயன் தன் தந்தையின் பொருட்டு அரச பதவியையும் மணவாழ்க்கையையும் துறந்ததை அறிந்த அஸ்தினாபுரத்தின் மக்கள் மட்டுமல்ல; தேவர்களும் வியப்படைந்தார்கள். அப்போது வானுலகினர் பூமாரி பொழிந்து, "பீஷ்ம... பீஷ்ம...' என்று வாழ்த்தினார்கள். பீஷ்மரைப் பற்றிய இந்தக் கதை நாம் அறிந்த ஒன்றுதான்! "பீஷ்ம' என்ற சொல்லுக்கு கடுமையான விரதத்தை உடையவன் என்று பொருள்.
தன் மகனின் தியாகத்தைப் போற்றிய சாந்தனு, ""எப்போது நீ மரணம் வேண்டும் என்று விரும்பு கிறாயோ அப்போதுதான் உனக்கு மரணம் சம்பவிக்கும்'' என்று வரம் கொடுத்து வாழ்த்தினார்.
பீஷ்மர் சகல கலைகளிலும் வல்லவர். பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாட்டனார் ஆவார்.
விதிவசத்தால் பீஷ்மர், துரியோதனன் கூட்டத்துடன் இருக்க நேர்ந்தது. சகுனியுடன் சூதாடி பாண்டவர்கள் நாட்டை இழந்தது, பாஞ்சாலி மானபங்கம், அவளை கண்ணன் காத்தது, பின் பாண்டவர் வனவாசம், இறுதியாக நடந்த பாரதப் போர் போன்றவற்றை நாம் அறிவோம்.
பாரதப்போர் தட்சிணாயன கால இறுதி மாதமான மார்கழியில் நடைபெற்றது. துரியோதனன் படைக்கு பீஷ்மர் தலைமை தாங்கினார். பாண்டவர் சார்பில் அவரை எதிர்க்க வந்த அர்ச்சுனன் சிகண்டி எனப்படும் அலியை முன்நிறுத்திக் கொண்டான். சுத்த வீரனுடன் போரிட்டு வெற்றி கண்ட பீஷ்மர் சிகண்டியைப் பார்த்ததும் அம்பு தொடுக்காமல் நின்றார். இதுதான் சமயம் என்று கண்ணபிரான் ஜாடை காட்ட, பீஷ்மர்மீது பானங்களை எய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனனின் பாணங்கள் பீஷ்மரின் உடலைத் துளைத்தன. பீஷ்மர் போர்க்களத்தில் விழுந்தார். ஆனால் அவரது உயிர் பிரியவில்லை.
தட்சிணாயன காலத்தில் உயிர் பிரிந்தால் மோட்சம் கிட்டாது என்பதால், உத்தராயண காலம் துவங்கும் வரை காத்திருக்க விரும்பி னார் பீஷ்மர். அதுவரை அம்புப் படுக்கை யில் படுத்துத் தவம் செய்தார்.
பீஷ்மரைக் காண்பதற்கு பாண்டவர்கள் வந்தனர். தலைப்பக்கத்தில் துரியோதனன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மரின் காலடிப் பக்கம் பாண்டவர்கள் நின்றிருந்தனர். அப்போது தாகத்திற்குத் தண்ணீர் கேட்டார் பீஷ்மர். துரியோதனன் பழரசம் கொண்டுவர ஓடினான். பீஷ்மர் அவனைத் தடுத்து நிறுத்திவிட்டு, அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் ஓர் அம்பினை மந்திரம் ஜெபித்து பூமியில் எய்தான். அம்பு துளைத்த இடத்திலிருந்து கங்கை ஊற்றெடுத்து மேலே பீறிட்டு வந்து பீஷ்மரின் தாகத்தைத் தணித்தாள். மகனுக்கு கங்கை அளித்த கடைசி நீர் இதுவாகும்.
உத்தராயணம் பிறக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மர் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துப் பிரார்த்தித்தார். அப்பொழுது பீஷ்மர் துதித்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.
பாரதப் போரினால் இந்த உலகிற்கு கீதையும் கிடைத்தது.
உத்தராயண காலம் ஆரம்பமானது. தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள், பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, "பீஷ்மாஷ்டமி' என்று போற்றப்படுகிறது.
பீஷ்மர் பிரம்மச்சாரி. அவர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால், அவர்மீது அன்பு கொண்டவர்கள், தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுத் தார்கள். அதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது. சாஸ்திரம் அறிந்தவர்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.
பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பர். பீஷ்மாஷ்டமி நாளில் யார் வேண்டுமானாலும் பீஷ்மருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்!