ஹிந்து தர்மம் சொல்லும் யோகா முறை !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:19 | Best Blogger Tips
உலகிலுள்ள மற்ற மதங்கள் கடவுள் இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் அவரது அன்பை பெற இதை செய்ய வேண்டும் அதை செய்யக் கூடாது என்று தான் கூறுகின்றன. இந்து மதம் மட்டும் தான் புற செயல்களை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு கடவுளோடு இணையும் வழியை நமக்கு காட்டுகிறது. கடவுளைப் பற்றிய இந்து மதத்தின் கருத்து அவர் வானத்தில் இருக்கிறார், பாதாளத்தில் இருக்கிறார் என்று அல்ல. அவர் உனக்குள் இருக்கிறார். எனக்குள் இருக்கிறார். காணும் பொருள் ஒவ்வொன்றிலும் இருக்கிறார் என்பதாகும்.

இப்படி நமக்குள் இருக்கும் கடவுளை தேடி அடைவதற்கு அல்லது அவரோடு ஐக்கியமாவதற்கு சொல்லப்பட்ட வழியே குண்டலினி என்ற யோக பயிற்சியாகும்.
இந்த பயிற்சி முறை இன்ன இனத்தாருக்கு இன்ன மதத்தாருக்கு மட்டும் தான் சொந்தமென சொல்ல முடியாது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆண், பெண் என்று பேதமில்லாது சொந்தமுடையது ஆகும்.

குண்டலினி என்ற வார்த்தை சுருண்டு உறங்கி கொண்டிருக்கும் உயிர் சக்தியை தட்டியெழுப்புவது என பொருள் படும்.

பிறப்புறுப்பிற்கு சற்று மேலே மூலாதாரத்தில் குண்டலினி சக்தி உறங்குவதாக யோக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

அப்படி உறங்கும் சக்தியை அப்பியாசங்களால் தட்டி எழுப்பி பிரம்ம கபலாம் என்னும் உச்சந்தலைக்கு கொண்டு வருவதே குண்டலினியோக பயிற்சி முறை எனலாம்.

சக்தி எனும் கருத்து எல்லா யோக முறைகளுக்கும் நடுநாயகமாக விளங்குகிறது. முடிவான அகப்பொருளின் சக்தியே இந்த உலகை படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது. புற உலகை வெளிப்படுத்தும் சக்தியும், தனிப்பட்ட பொருளை படைக்கும் சக்தியும் ஒன்று தான்.

அகத்திலும், புறத்திலும் அது ஒன்றாகயிருக்கிறது. அதாவது அண்ட சாரசரத்தை ஒழுங்கு முறையோடு இயக்கும் சக்தியே ஜீவனுக்குள்ளும், ஜீவனின் சரீரத்திற்குள்ளும் இருக்கிறது.

உயிர் உள்ள பொருளின் ஜீவத் தன்மையை வெளிக்காட்டும் சுவாசிக்கும் முறை பிரபஞ்ச ஆற்றலில் ஒரு விளக்கமேயாகும்.

மனோமயம் என சொல்லப்படும் சூட்சம உடலுக்கும் கட மயம் என சொல்லப்படும் பௌதிக உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

ஜட உடலில் மேறு தண்டத்தின் அடி முனையில் குண்டலினி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தண்டத்தின் கீழ் பகுதியில் இருந்து மேல் பகுதிக்கு குண்டலினி சக்தி ஊடுருவி செல்லும் அறிவு மையங்களாக மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிப்புரகம், ஆனகதம், விசூத்தி, ஆஞ்ஜை என ஆறு ஆதாரங்கள் சொல்லப்படுகின்றன.

முதல் ஐந்து ஆதாரங்களும் பஞ்சபூத மையங்களாகும். ஆறாவது பகுதி மனம் சார்ந்த சூட்சம பகுதியாகும். இது தான் சகஸ்சரம் என்று அழைக்கப்படுகிறது.
குண்டலினி சக்தி சகஸ்சரத்தை தொடும் போது யோக பயிற்சியாளன் கடவுளை நேருக்கு நேராக தரிசனம் செய்கிறான். அல்லது அவரோடு இரண்டற கலந்து விடுகிறான்.

இந்த ஆதாரங்கள் சக்கரங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏன்னென்றால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான விளக்கப்படங்கள் உண்டு.

அவை பத்மங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்களை கொண்டது.

மூலாதாரத்தில் இருந்து துவங்கும் விளக்கப்படங்கள் சதுரம், பிறைச்சந்திரன் பெரிய வட்டம் என்று அடையாளம் காட்டப்படுகிறது.

இவற்றின் இதழ்கள் நான்கு, ஆறு, பத்து, பன்னிரெண்டு, பதினாறு, இரண்டு என்பதாகும். ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனி வடிவங்கள் கொடுக்கபட்டுள்ளதை போல தனித்தனி ஒலி அமைப்புகளும் கொடுக்கபட்டுள்ளன

இதன் அர்த்தம் என்னவென்றால் உருவமாக இருக்கும் சக்தியே உருவமில்லாத ஒலியாக இருக்கிறது என்பதாகும்.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் உரிய விளக்கப்படங்களுக்குள் பீஜாச்சரம் என்ற இந்த மந்திர ஒலிகள் கொடுக்கபட்டுள்ளது.

மூலாதாரத்திலிருந்து துவங்கி முதல் சக்கரங்களில் லம், வம், ரம், யம், ஹம் என ஐந்து ஒலிகள் சுட்டிக் காட்டப்படுகிறது.

இவை முறையே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை குறிப்பதாகும்.

ஆஞ்சா சக்கரத்தில் அதாவது ஆறாவது ஆதாரத்தின் மூல மந்திரம் ஓம் என்பதாகும்.

சமஸ்கிருத மொழியிலுள்ள ஒலி அதிர்வுகள் ஐம்பது இதழ்களாக பிரித்து காட்டப்பட்டுள்ளது.

சகஸ்ரம் என்பது ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாகும். ஆயிரம் இதழ்களுக்கும் இருபது முறை ஐம்பது ஒலி அதிர்வுகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த இதழ்களில் யோக நாடிகள் ஒன்று கூடுகின்றன. இந்த நாடிகளே குண்டலினி சக்தி என்னும் அமிர்த பாம்பு ஊர்ந்து செல்லும் வாய்க்காலாகும்.

தாந்திரிக நூல்களில் இத்தகைய ஆயிரம் நாடிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான இடகலை, பின்கலை, சூழமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கயமானதாக கருதப்படுகிறது.

இடகலை, பின்கலை ஆகிய இரண்டு நாடிகளை விட சூழமுனை நாடி சிறந்ததாகும்.

மேரு தண்டத்தில் இடப்பாக மூலாதாரத்தில் இடகலை நாடி அமைந்துள்ளது. இது சந்திர கலையை அல்லது பெண் தன்மையை கொண்ட நாடியாகும்.

வலப்பக்கம் பின்கலை நாடி அமைந்துள்ளது. இது சூரிய அம்சம் அல்லது ஆண் தன்மை கொண்டதாகும்.

இந்த இரண்டு நாடிகளும் இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாறி மாறி எல்லா பத்மங்களையும் சுற்றி சுற்றி சென்று ஆஞ்சா சக்கரத்தை தொட்டு நாசி துவாரங்களை நோக்கி ஓடி வருகின்றன.

இந்த நாடிகளின் வழியாக தான் உயிர் ஆற்றல் என்ற பிராண சக்தி உள்ளே செல்வதும் வெளி வருவதுமாக இருக்கிறது.

இந்த இரண்டு நாடிகளுக்கு மத்தியில் மூளை தண்டு வட அச்சியன் உட்புறம் சுழுமுனை நாடி அமைந்துள்ளது.

இந்த அச்சிக்குள் அமைந்த உள் நாடிகளில் புறம்பாக அமைந்தது இதுவே ஆகும். இந்த நாடியில் தமஸ் குணம் மேலோங்கி நிற்கும். நெருப்பு ஜீவாலை போன்ற நிறம் இதன் குறியீடாக காட்டப்பட்டுள்ளது.

இதன் உள்ளே மிக பிரகாசமானதும் ராஜச குணம் மேலோங்கி நிற்பதுமான வஜ்னி நாடி அமைந்துள்ளது.

இந்த நாடியின் உள் இயற்கையாகவே சாத்வீக குணம் நிலை நிற்கிறது. இங்கு தான் அமிர்தம் சுரக்கும், சித்தினி நாடியும் உள்ளது.

மிக நுட்பமாக சித்தினி நாடிக்குள்ளே பிரம்மதுவாரம் என வழங்கப்படும் கீழ்கோடி மூலையிலிருந்து தொடங்கி சகஸ்ரம் வரையில் வியாபித்துள்ள பிரம்ம நாடி இருக்கிறது.

பிரம்ம நாடி வழியாகத்தான் குண்டலினி சக்தி சகஸ்ரத்தை அடைகிறது. இந்த பாதையை குல மார்க்கம் என யோக சாஸ்திர நூல்கள் சிற்பித்து கூறுகிறது.

அஷ்டாங்க முறையானது இயமத்தில் தொடங்கி சமாதியில் முடியும் போது குண்டலினி சக்தி சகஸ்ரத்தில் கரைந்து இறைகாட்சியை தந்து என்றும் எப்போதும் அழியாத பேரின்பத்தில் ஆத்மாவை நிலை கொள்ள வைக்கிறது. இதுவே கடவுளை நேருக்கு நேராக பார்க்க கூறப்பட்ட வழிமுறை விளக்கம் ஆகும் இந்தப் பயிற்சியை நல்ல குருவின் துணையில்லாது செய்ய இயலாது