கேப்டன் விக்ரம் பத்ரா.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 May be an image of 4 people

நான் இந்திய கொடியை ஏற்றிவிட்டு வருவேன் அல்லது அதே கொடியால் சுற்றப்பட்டு வருவேன்", "என் மனம் இன்னும் அதிக வெற்றிகளை கேட்கிறது" இவையெல்லாம் மறைந்த இந்திய இராணுவ வீரர் கேப்டன் விக்ரம் பத்ரா தனது குடும்பத்தினரிடமும், நாட்டு மக்களிடமும் விட்டுச் சென்ற பொன்மொழிகள்.
 
யார் இந்த விக்ரம் பத்ரா! ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் நிஜ ஹீரோவின் உன்மை வரலாறு தெரியுமா? 
 
கேப்டன் விக்ரம் பத்ரா 09 செப்டம்பர் 1979-ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பிறந்தார். இரட்டையரான இவர்களில் விக்ரம் மூத்தவர் ஆவார். விக்ரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான கிர்தாரி லால் பாத்ரா, பள்ளி ஆசிரியையான கமல் காந்திற்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். விக்ரமுக்கு சீமா மற்றும் நூதன் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
 
விக்ரம் தனது ஆரம்ப கால கல்வி முழுவதையும் ஆசிரியையான தனது தாயிடமிருந்தே கற்றார். பின் மேற்படிப்பிற்காக பாலம்பூரில் உள்ள டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, பாலம்பூரில் உள்ள மத்திய பள்ளியில் தனது இடைநிலை கல்வியை முடித்தார். சிறுவயது முதலே பல்வேறு திறன்களைக் கொண்டிருந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கராத்தே, டேபிள் டென்னிஸ் மற்றும் பல விளையாட்டுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
 
சிறு வயதிலிருந்தே விக்ரம் பத்ராவிற்கு தேசபக்தி அதிகமாக இருந்தது. தனது 12-ஆம் வகுப்பில் 82 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற இவர் அதன் பிறகு சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் பி.எஸ்.சி மருத்துவ அறிவியல் படிப்பை முடித்தார்.
தேச பக்திமிக்க கேப்டன்
அவர் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே என்.சி.சி (நேஷனல் கேடட் கார்பஸ்) ஏர் விங்கில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விக்ரம் என்.சி,சியின் கேப்டனாக உருவெடுத்தார். என்.சி,சியின் சி சான்றிதழுக்குத் தகுதி பெற்ற இவர் என்.சி.சியில் மூத்த அதிகாரிக்குக் கீழ் இயங்கும் பதவியையும் பெற்றார். தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க விக்ரம், அந்த நிகழ்விற்கு பிறகு தான் இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதாகத் தனது பெற்றோரிடம் கூறினார்.
 
விக்ரம் இந்திய இராணுவத்தில் சேர தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த நேரம் 1995 ஆம் ஆண்டு பட்ட படிப்பை முடித்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (சி.டி.எஸ்) தேர்வுக்கு தயாரானார். அதே சமயம் அவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் எம்.ஏ ஆங்கிலம் படிப்பிற்காகச் சேர்ந்திருந்தார். 
 
மேலும், பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க விரும்பாத அவர் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே பல்கலைக்கழகத்தில் மாலை வகுப்புகளில் பயின்று வந்தார்.
.
​விக்ரம் பத்ராவின் இராணுவ வாழ்க்கை
விக்ரம் பத்ரா 1996-ஆம் ஆண்டு டேராடூனில் மனேகஷா பட்டாலியனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து அங்கு இராணுவ பயிற்சியை முடித்தார். அதில் அவரது திறமையைக் கண்ட அதிகாரிகள் 13-வது லெப்டினென்டாக ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸில் நியமித்தனர். அவரது முதல் வேலையே ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சபூர் நகரில் இருந்தது.
 
இந்திய கொடியை உயர்த்தி வருவேன்
ஒவ்வொரு முறை விக்ரமிற்கு விடுப்பு கிடைக்கும் போதும் அவரது சொந்த ஊரான பாலம்பூருக்கு வருவார். அவ்வாறு அவர் 1999 ஆம் ஆண்டு ஹோலி விழாவின் போது தனது வீட்டிற்கு வந்திருந்த போது அவரது காதலியான டிம்பிள் சீமாவையும் சந்தித்தார். அப்போது 'நான் இந்திய கொடியை வெற்றிகரமாக உயர்த்திய பின் வீட்டிற்கு திரும்ப வருவேன்' என்று கூறிச் சென்றார்.
 
கார்கில் போர் வெடிப்பு
அந்த சிறிய விடுப்பிற்கு பிறகு விக்ரம் தனது இராணுவ குழுவோடு இணைந்தார். ஜூன் 5 ஆம் தேதி கார்கில் போரும் வெடித்தது. அதன் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் என அந்த தேசங்கள் பெயர் மாற்றப்பட்டன. போர் சமயங்களில் வாரம் ஒரு முறை தனது பெற்றோரிடம் விக்ரம் பேசி வந்தார். அவ்வாறு 29 ஜூன் 1999 அன்று அவர் பெற்றோருடன் பேசியதே கடையாகும்.
 
கேப்டன் பதவி பெற்ற விக்ரம்
1999 ஜூன் 19ம் தேதியன்று கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது லெப்டினெண்ட் விக்ரம் பத்ராவின் தலைமையிலான குழு 5140 புள்ளிகளை பெற்றது. இதனால் அவர் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின், ஜூன் 30 அன்று அவரது குழு முஷ்கோ பள்ளத்தாக்கிற்கு சென்றது. தொடர்ந்து, ஜூலை 7 அன்று அதிகாலையில் இந்திய இராணுவம் எதிரிகளோடு தாக்குதல் நடத்தியது.
 
விக்ரமின் மார்பைத் துளைத்த குண்டு
எதிரிகளோடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயம் காயமடைந்த அதிகாரியை மீட்க விக்ரம் அங்கு சென்றார். அப்போது, காயமடைந்த அதிகாரியிடம் உங்களுக்கு குடும்பம் உள்ளது, குழந்தைகளும் உள்ளன. நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்றார். தொடர்ந்து யதிகளைத் தாக்க முயன்ற போது எதிரி ஒருவனின் துப்பாக்கி குண்டுகள் விக்ரமின் மார்பைத் துளைத்தது. விக்ரம் கொல்லப்பட்டார்.
 
கேப்டன் விக்ரம் பத்ராவின் வீர மரணத்திற்கு பிறகு இராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது நினைவாக இந்திய இராணுவம் பல்வேறு இராணுவக் கட்டிடங்களுக்கும் கேப்டன் பத்ரா என்ற பெயரை சூட்டியது. அவரது நினைவாக அவர் சென்ற மலைக்கும் கூட பத்ரா டாப் என பெயரிடப்பட்டது.