#கொள்ளை_போவதற்கா_கோவில்_சொத்துக்கள்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:15 | Best Blogger Tips

கோவில்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவற்றை முறையாகப் பராமரிக்காமலும், சொத்துக்களைச் சரிவர நிர்வகிக்காமலும் மெத்தனமாக இருக்கின்ற அரசாங்கம் இன்று நதிநீர் இணைப்புக்கு நம் மடாதிபதிகளிடம் கையேந்தி நிற்கின்ற நிலைமைக்கு யார் காரணம்?
இன்றளவில் தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஹிந்துக் கோவில் சொத்தாக இருந்தாலும் சரி, வக்ஃப் வாரியச் சொத்தாக இருந்தாலும் சரி வாடகைக்கு விடப்பட்டால் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தான் அமைய வேண்டும் என்கிறது சட்டம். ஹிந்துக் கோவில்களின் சொத்தை யாருக்கும் விற்க முடியாது என்பதும் சட்டம் சொல்கின்ற சேதி.
ஆனால் இந்த அரசாங்கங்கள் தமது தாலுகா அலுவலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை எந்த அரசுக் கட்டுமானத்திற்கும் ஹிந்துக் கோவில்களின் நிலத்தை அதற்குரிய எந்த விதமான இழப்பீட்டையும் வழங்காமல் எடுத்துக் கொள்கின்றன.
திக காரர்கள், கம்யூனிஸ்ட்கள் போன்ற ஹிந்து விரோதிகள் அரசு அலுவலகங்களில் இருக்கும் ஹிந்துக் கோவிலை அகற்றனும்னு அறிக்கை கொடுப்பார்கள். எப்படிப் பார்த்தாலும் அகற்றப்பட வேண்டியது அந்த அரசு அலுவலகமாகத் தான் இருக்குமே தவிர ஹிந்துக் கோவில் அல்ல.
இதற்கு உதாரணமாகத் திருப்பூரைச் சொல்லலாம். ஏனென்று சொன்னால் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், தாலுகா அலுவலகமும் அமைந்துள்ள 40 ஏக்கர் நிலம் ஹிந்துக் கோவிலுக்குச் சொந்தமானது.
இடங்களை மடக்கிப் போடுவது மட்டுமல்ல ஹிந்துக் கோவில் உண்டியல்களில் வசூலாகும் மொத்தப் பணத்தில் 12.5 சதவீதத்தை நிர்வாகச் செலவு என்று கணக்குக் காட்டி மாநில அரசு தன் கஜானாவிற்குக் கடத்தி வருகிறது. அத்தோடு கூட தணிக்கைச் செலவுகளுக்கு என 4.5 சதவீதம் பணத்தையும் கபளீகரம் செய்கிறது அரசு.
ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹிந்துக் கோவில்களின் சொத்துக்களையும் தனியார் தணிக்கை அதிகாரிகளை வைத்துக் கணக்கெடுக்க வேண்டும் என ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் வழக்குத் தொடுத்தாரே. அதற்கு ஏன் இவர்கள் செவிமடுக்கவில்லை?
ஹிந்துக் கோவில் சொத்துக்களைத் தங்கள் இஷ்டத்திற்கு, அரசியல்வாதிகளுக்கு, அடுத்த மதத்தினருக்கு என யார் யாருக்கெல்லாமோ விட்டுக் கொடுத்து விட்டு அதற்கு மிகக் கேவலமான சொற்பத் தொகையை வாடகை என்ற பெயரிலே வசூலிக்கிறார்கள்.
உதாரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக 350 கிரவுண்ட் நிலம் சென்னையின் மையப் பகுதியான சேமியர்ஸ் சாலையில் இருக்கிறது. இன்றைய சந்தை மதிப்பில் கிரவுண்ட் ஒன்றுக்கு 6 கோடி முதல் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்கள் அவை.
அதே போல வேதாரண்யத்தில் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு 17,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. உப்பளங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் இவர்கள் வசூலிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?
நம்புவது சற்றே கடினம் தான். சென்னையில் 'ஒரு கிரவுண்டுக்கு மூன்று ரூபாய்' வீதமும், வேதாரண்யத்தில் 'ஏக்கருக்கு ரெண்டரை ரூபா' வீதமும் வாடகை வசூலிக்கின்றது இந்தத் தமிழக அரசு. மொத்தத்தில் 6 கோடி ரூபாய் வசூலாகிறது.
இவைகளுக்குச் சந்தை விலையை நிர்ணயம் செய்யாதது ஏன்?
இப்படியாக இந்த திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் நம்முடைய ஹிந்துக் கோவில்களின் சொத்துக்களைச் சரியாகப் பராமரிக்காத காரணத்தால் ஹிந்துக் கோவில்களுக்கும், ஹிந்து பக்தர்களுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை... இன்னும் சரியாகச் சொன்னால் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் நஷ்டத்தை இந்த இரு கழகங்களின் ஆட்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஹிந்துக் கோவில் நிலச் சொத்துக்களை வைத்திருப்போரிடம் சந்தை நிலவரப்படி வாடகையை வசூலித்திருந்தோமென்றால் நம் கோவில்களுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் கிட்டியிருக்கும்.
இதில் வேதனை என்னவென்றால் 60 கோடி வசூல் செய்யும் திராவிட அரசுகள் நிர்வாகம், தணிக்கை எனக் காரணம் காட்டி ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் பணத்தை கோவில்களிடம் இருந்துக் கொள்ளை அடிக்கிறது.
தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகளின் மோசமான நடத்தை
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஹிந்துக் கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தின் அளவு 5,25,000 ஏக்கர் என ஹிந்து சமய அறநிலையத் துறையின் கொள்கைக் குறிப்பிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவர்களது சமீபத்தியக் கொள்கைக் குறிப்பின் படி தறொழுது அது 4,75,000 ஏக்கர் என்ற அளவில் சுருங்கி விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 50,000 ஏக்கர் நிலத்தைத் திருடியது யார்? கோவில் சொத்துக்களைக் களவாடுவது யார்?
இப்படிப்பட்டக் கயவர்களைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுத்த காரணத்தால் இவற்றுக்கெல்லாம் நாமும் ஒரு காரணம் என்பதை யோசித்துப் பார்த்தோமானால் உங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்படும். சிவன் சொத்து குல நாசம் என்பது அவர்களுக்கும் (ஆட்சியாளர்களுக்கு) தெரியும். அந்த பாவம் அவர்களை மட்டுமன்றி குடிமக்களையும் தண்டிக்கிறது.
ஹிந்துக்கள் தமது வழிபாட்டுத் தலங்களைத் தாமே பராமரிக்க விடாமல் தடுத்து, ஹிந்துக் கோவில்களையும் நிலங்களையும் சரிவரப் பராமரிக்காமல், ஹிந்துக்களை அவர்களது சொந்த மண்ணிலேயே இரண்டாதரக் குடிமக்களாக நடத்துகின்ற திராவிடக் கட்சிகள் இன்று ஹிந்து மடாதிபதிகள் முன்பும், ஆதினகர்த்தர்கள் முன்பும் கையேந்தி நிற்கிறார்கள்.
கோவில் சொத்துக்களைத் தானும் கொள்ளையடித்து, பிறரையும் கொள்ளையடிக்க அனுமதிக்கும் அரசாங்கம் இருக்கின்ற தேசத்தில் மக்களை ரட்சிக்க மடாதிபதிகள் தான் முன் வரவேண்டும் என ஆள்பவர்களே தீர்மானித்து விட்டார்கள். திக்கற்ற திராவிடத்தின், அரை வேக்காட்டுப் பகுத்தறிவின் தோல்வி இது.
முந்தைய பதிவிலே குறிப்பிட்டது போல இனியேனும் இந்த ஆட்சியாளர்கள் திருந்தட்டும். தமது ஹிந்து விரோதப் போக்கை கைவிடட்டும். ஹிந்து மடாதிபதிகள், ஆதினகர்த்தர்களது ஆசியினாலே ஹிந்துக் கோவில்களுக்கு மட்டுமல்லதமிழக மக்களுக்கும் விடிவு காலம் பிறக்கட்டும்!

 Thanks to Mr.H Raja