கண்களின் அழகைப் பராமரிக்க!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:53 | Best Blogger Tips
நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்…

• தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

• போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

• கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

• கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.