குடை: எப்படி வந்தேன் தெரியுமா ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:47 | Best Blogger Tips
குடை: எப்படி வந்தேன் தெரியுமா ?

- இரா.நடராசன்

வணக்கம் நண்பர்களே... நான்தான் குடை பேசுறேன். மழை பெய்யும்போது கவனமாக எடுத்து பையில் வெச்சுக்கிட்டு, அப்புறம் எங்கேயாவது வெச்சுட்டு மறந்துறீங்களே... அந்தக் குடைதான். நான் எப்படி எல்லாம் உருவாகி உருமாறி வருகிறேன்னு தெரிஞ்சா, இப்படி அலட்சியமாகத் தொலைக்க மாட்டீங்க.

ஆரம்பக் காலத்தில் என்னை பருத்தி, பட்டு, கம்பளினு பலவகையான துணிகளால் செய்தாங்க. அப்புறம், எனக்காகவே என்று வந்த குடைத் துணியான, 'குளோரியா' அறிமுகம் ஆச்சு. பிறகு, ரேயான் வகைத் துணி மேற்புறமும், உட்புறம் அசடேட் பளபளப்பு ஏற்றியும்... மேற்கூரை செய்தாங்க. நைலான் துணியும் அக்ரிலிக் எனப்படும் லேசான மெழுகுக் கோட்டிங்கும்கூட கொடுப்பது உண்டு. சமீப காலமாக நானோ தொழில்நுட்பம் வழியே நுண் ஃபைபர் முறையில் தண்ணீரை உறிஞ்சாத புதிய வகைத் தயாரிப்பு முறை வந்து இருக்கு.

முதலில் என்னுடைய பாகங்களைப் பார்க்கலாம். மேற்கூரை (கனோபி என்பார்கள்), ஷாஃப்ட் மற்றும் ரிப் எனப்படும் 'ஹி' வடிவ அமைப்பு. அடுத்து, ஸ்ட்ரெட்சர், ரன்னர் மற்றும் கைப்பிடி. இவை உலோகம், பிளாஸ்டிக், ஃபைபர், மரம் என வகைக்கு ஏற்ற பொருட்களால் ஆனதாக இருக்கும்.

இனி, நான் தயாராகும் தொழிற்சாலைக்குள் நுழைவோம்... ஒன்றிரண்டு பாகங்கள் இயந்திரங்களால் தயாராகும். அவை, ரிப் அமைப்பின் கம்பிகள், பிரதான மையக் குழாய்க்கு ஷாஃப்ட் என்று பெயர். இவை, தனித்தனிப் பிரிவுகளில் தயாராகி வருகின்றன.

முதலில் கூரைப் பகுதி தயாராகும் இடம். தலையில் ஒரே ஒரு பிட் வைத்து நான் உருவாவது இல்லை. என் அளவுக்கு ஏற்ப, 6 கம்பிகள், 8 கம்பிகள், சில சமயம் பெரிய கல்யாணக் குடையாக நான் உருவாகும்போது... 10 கம்பிகள், அந்தக் கால ஆசிரியர்கள் கையில் இருந்தபோது... 12 கம்பிகள் எனத் தரத்திற்கு ஏற்ப நான் உருவாகிறேன். எத்தனை கம்பிகளோ... அத்தனை துண்டுகளாகத் துணியை இயந்திரம் வெட்டித் தள்ளுகிறது. இது கட்டிங் செக்ஷன்.

அங்கே இருந்து பார்த்தால், கம்பி பற்றவைக்கும் பட்டறை தெரியும். பயங்கர இரைச்சல் வருகிறது அல்லவா? அங்கேதான் எனது 'எலும்புக்கூடு' தயாராகிறது. மேல் பட்டன் மற்றும் இணைப்பு ரிப் கம்பிகளுடனான பிரதான அமைப்பு. ஷாஃப்ட், அதில் மேலும் கீழும் திறந்து மூடும் ரன்னர் எனப்படும் சின்ன பிளாஸ்டிக் குழலை இணைக்கிறார்கள்.

பிறகு, கட்டிங் செக்ஷனில் இருந்து எலும்புக்கூடாக வருபவன், மேல்தோல் போல் துணி தைக்கப்படும் இடம் அசெம்பிள் செக்ஷன். மேல் பட்டனை அமைப்பதுதான் பெரிய சவால். ஒழுகாமல் இருப்பதற்காக பல வகை மெழுகு, பசைகளைப் பயன்படுத்துகிறார்கள். பட்டனை அழுத்தினால், தானாகவே திறக்கும் குடைகளில்... இரண்டு ரன்னர் குழல்கள் இருக்கும். அப்புறம், கைப்பிடி. உங்கள் கைக்குத் தோதாகப் பிடித்துக்கொண்டால், வலிக்காத விதமாய் வழவழப்பாக உருவாக்குகிறார்கள். அந்தக் காலத்தில் குடையை விரிக்காத சமயங்களில் கைத்தடியாக ஊன்றி நடந்ததால்... கைப்பிடி, தாத்தாவின் தடி போலவே வளைந்து இருந்தது. இப்போது எல்லாம் இரு சக்கர வாகனத்தின் ஹேண்ட் பார் கைப்பிடி போல என்னைச் செய்கிறார்கள். பெரிய குடையை வைத்து ஸ்டால்கள் பார்த்திருக்கிறாயா? விதவிதமான வண்ணத்தில் இருக்குமே... அதற்கு 'ப்ராசல்' என்று பெயர். அவற்றைப் பெரும்பாலும் சாதாரணமான துணியில் மரத்தாலான ரிப்களால் செய்கிறார்கள். அது மழைக்கு உதவாது.

இப்படியாக உருவாகி, உங்கள் கைகளில் பல வண்ணங்களில் அழகாக ஜொலிக்கிறேன். மழை, வெயில் இரண்டில் இருந்துமே காப்பாற்றும் என்னைத் தொலைக்காமல் பத்திரமாக வெச்சுக்கிட்டு அம்மாகிட்டேயும் நல்ல பெயர் வாங்குங்க!

- சுட்டி விகடன்