🌺
தை அமாவாசை...
நாளை சிறப்புகள் நிறைந்த தை அமாவாசை..
பித்ரு தோஷங்கள் நீங்க..
முன்னோர்களை வழிபட தவறாதீர்கள்..!!
அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கான நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நம் நன்றியை செலுத்த உகந்த நாட்கள் என கருதப்படும் மூன்று முக்கிய நாட்களில் (மகாளய, தை மற்றும் ஆடி) தை அமாவாசையும் ஒன்றாகும். வெள்ளிக்கிழமையில் வரும் அமாவாசை தினத்தன்று பித்ரு பூஜை முடித்த பின்னரே வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.
தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன், எண்ணற்ற நன்மைகளும் நமக்கு கிடைக்கும். அந்நாளில் தர்ப்பணம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்கும்போது செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் எவ்வாறு கொடுப்பது ?
நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.
பித்ரு தோஷங்கள் நீங்கவும், அவர்களின் ஆசி பெற்று சிறப்பாக வாழவும், நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்...!!
சூரிய உதயத்திற்கு பின்பு அமாவாசை திதி முடிவதற்குள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.
ஏன் முன்னோர்களை வணங்க வேண்டும்?
ஒருவன் தன் பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்காவிட்டால், மற்ற தெய்வங்களை வணங்கி பலனில்லை.
அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த நம் முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசை தினங்களில் மிக சிறப்பாக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இந்த அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
தை அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்?
தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவது வழக்கம்.
அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.
தானம் அளித்தல் :
இந்த தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவற்றை நாம் தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
அமாவாசை விரதம் இருப்பது எப்படி?
அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.
அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.
முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.
இந்த தவறை செய்து விடாதீர்கள்...!
அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவது, மணி அடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் நம் முன்னோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
தர்ப்பணம் கொடுக்கும்போது கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். மேலும் தர்ப்பணம் கொடுக்கும்போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.
அதேபோல் கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காகத்துக்கு முக்கியத்துவம் :
தை அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.
காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.
துளசி மாலை :
முன்னோர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம்.
எனவே தை அமாவாசையன்று வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். நமக்கு விஷ்ணு மற்றும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
பலன்கள் :
தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமல்லாமல்... நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
தை அமாவாசையில் முன்னோர்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்!!
----------------------------------------------
தை அம்மாவாசை நாளை காலை 8 மணிக்கு அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து அஸ்திரதேவர் புறப்பட்டு வேத நதிகடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறும்
🙏🪷🙏
🙏ஓம் நமசிவாய 🙏
🙏சிவாயநம🙏
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏