திருவள்ளுவர் இந்துதான்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:08 | Best Blogger Tips

 





ரங்கராஜ் பாண்டே அவர்களின் பக்கத்தில் திருவள்ளுவர் இந்துதான் என்று அவர் பேசிய காணொளியை பதிந்திருந்தார். அதை பார்த்த சில மாற்றுமத நண்பர்கள் திருக்குறளில் இந்து என்ற வார்த்தை இருக்கா? குறைந்தபட்சம் திருக்குறளில் சொல்லப்படும் எதாவது ஒரு திருக்குறள் எதாவது இந்துமத நூலுடன் ஒத்துப்போகிறதா? என்பதுபோன்ற கேள்விகளை எழுப்பினார்கள்...!


திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் கண்ணன், இந்திரன், லட்சுமி, எமன், பிரம்மா போன்ற தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் இந்துதான் என்று கூறினாலும் இந்து என்ற சொல்லாடல் இருக்கா? என்ற கேள்வியை எழுப்புபவர்களிடம் தமிழ் என்ற சொல்லாடல் திருக்குறளில் இல்லை என்பதற்காக திருக்குறளை தமிழ்நூல் இல்லை என்று கூறினால் எவ்வாறு ஏற்க இயலாதோ அதுபோல்தான் இந்து மத கருத்துகள் நிறைந்த திருக்குறளை இந்து மத நூல் இல்லை என்று கூறுவதையும் ஏற்க இயலாது ...!

(இப்பதிவை இரு கேள்விகளை அடிப்படையாகக்கொண்டு தொடர்வோம்.)

1. திருக்குறளில் உள்ள எந்த குறள் இந்துமத நூல்களில் உள்ள கருத்துகளோடு ஒத்துப்போகிறது???

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறளைப்போல் அனைவரும் சமம்னு சொல்லும் நூல் இந்துமதத்தில் உண்டா??

முதலாவதாக திருவள்ளுவர் புலால் உண்பதை கண்டித்து ஒரு தனி அதிகாரமே எழுதியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. உதாரணமாக,

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று"

- திருக்குறள்.


பொருள் : மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய அவிகளைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. என்று வேள்வி செய்வதை விட ஊன் உண்ணாதிருப்பதே மேல் என்று கூறுகிறார். இங்கே திருவள்ளுவர் கூறிய அதே பொருளில் மனு தர்மமாமனது வள்ளுவர் கூறிய அதே பாணியில் புலால் உண்பதை கண்டிக்கிறது. உதாரணமாக,


"வர்ஷே வர்ஷேஶ்வமேதேந யோ யஜேத ஶதம் ஸமா: ।

மாம்ஸாநி ச ந கா²தே³த்³ யஸ்தயோ: புண்யப²லம் ஸமம்॥

பொருள் : ஒருவன் நூறாண்டுகாலத்திற்கு வருடத்திற்கு ஒரு அஸ்வமேத யாகம் புரிவதால் எந்த அளவு புண்ணியத்தை பெறுவானோ, அதே அளவு புண்ணியத்தை ஒருவன் புலால் உண்ணாமலிருப்பதால் பெறுகின்றான்.

- மனு தர்மம்.

அதாவது திருக்குறளைப்போன்றே மனுஸ்ம்ருதியும் வேள்விகள் செய்வதை விட புலால் உண்ணாமலிருப்பது மேல் என்று கூறுகிறது. ஏனெனில் சிரமப்பட்டு, பெரும் பொருளை செலவழித்து, நியம நிஷ்டையோடு நூறாண்டுகாலம் நூறு அஸ்வமேதம் செய்யும் பலனை சுலபமாக புலால் மறுப்பதால் பெறலாம் என்கின்றது. அதோடு,

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்"

பொருள் : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்? இதை மனுவின் வழியே பார்த்தோமேயானால்,

"ஸ்வமாம்ஸம் பரமாம்ஸேந யோ வர்தயிதுமிச்ச²தி । அநப்யர்ச்ய பித்ரூʼந் தே³வாம்ஸ்ததோந்யோ நாஸ்த்யபுண்யக்ருʼத் ॥

பொருள் : பித்ரு மற்றும் தேவகார்யங்கள் தவிர்த்து, எவனொருவன் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காக மற்றோர் உயிரின் உடம்பை புசிக்கிறானோ,

அவனை காட்டிலும் பெரிய பாபி இருக்க முடியாது.

-மனு தர்மம்.

இவ்வாறு திருக்குறளில் உள்ள ஒரே கருத்துகள் மனுஸ்மிருதியிலும் உள்ளது என்பதை மறுக்க இயலாது. அடுத்ததாக,

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில்_வேற்றுமை யான்"

பொருள் : எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதே கருத்து பகவத்கீதை மற்றும் இராமாயணத்திலும் உள்ளது. உதாரணமாக,

நல்லது எது தீயது எது என்று பிரித்துப் பார்க்கும் நல்லறிவு இல்லாத வாழ்க்கை விலங்கியல் வாழ்க்கையாகும். நீ எல்லாம் அறிந்தவன் ஆகையால் நீ அறியாத நெறி எதுவுமில்லை என்றும் வாலியிடம் இராமன் இவ்வாறு கூறுகிறான்.

தக்கது இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே; மனுவின் நெறி புக்கவேல், அவ்விலங்கும் புத்தேளிரே

என்றும் வாலியிடம் இராமன் எடுத்துக் கூறுகிறார். எக்குலத்தில் பிறந்தாலும் அவரவர் ஆற்றும் செய்கையால் வருவதே மேன்மையும் கீழ்மையும் அல்லாமல் பிறப்பால் அல்ல என்பதை நீ அறிவாய். அதைத் தெளிவாக நீ அறிந்திருந்தும் மனையின் மாட்சியை அழித்தாய் என்பதை வாலி வதை படலத்தில் அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

"சினையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அனைய தன்மை அறிந்தும் அழித்தனை மனையின் மாட்சியை என்றான் மனு நீதியான்''

- இராமாயணம்.

இதையேத்தான் பகவத் கீதையில் கண்ணபிரானும் சொல்கிறார். அதாவது,

"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்"

- பகவத்கீதை.

பொருள் : குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர். அடுத்ததாக இரண்டாவது கேள்வியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிக்கு ஏற்றார்போல் அனைத்து உயர்களும் சமமானது என்ற தொனில் பகவத்கீதையின் அதிகாரம் 9, சுலோகம் 29 சொல்கிறது,

"ஸமோஹம் சர்வபூசேஷு நமே த்வேஷ்யோ அஸ்திநப்ரிய: |

யே பஜந்தி துமாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ||"

பொருள் : பலவகையாக உள்ள எல்லா உயிரினங்களிலும் நான் சமமாக இருக்கிறவன். எனக்கு யாரிடமும் வெறுப்பு இல்லை யாரிடமும் விருப்பமும் இல்லை. ஆகவே என்னை சேரத்தக்கவன் சேரதகாதவன் என்று எவருமில்லை. என்னிடம் பக்தி கொண்டு பிரியம் வைப்பவர் எவரோ என்னிடத்தில் அவரும் அவரிடத்தில் நானும் வாழ்கிறோம்...!


- பா இந்துவன்

நன்றி : பா இந்துவன்