துயர வரலாறு - வெண்மணி கிராமம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:36 | Best Blogger Tips
அன்று,
இந்த தமிழ்நாட்டில்,
தஞ்சை மாவட்ட, கீழ்வெண்மணி கிராமத்தில்,
கூலியை உயர்த்தி கேட்டதற்காக,
பெரும் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடு,தலைமையில் அடியாட்கள் புகுந்து,
கூலி உயர்த்தி கேட்ட தொழிலார்களை உயிரோடு எரித்து கொன்றனர்..

அதை விட,
அந்த கொடும் செயலை,
செய்தவர்களுக்கு,
விடுதலை தீர்ப்பு வழங்கி,
நேர்மையான மக்களுக்கு,
அதிர்ச்சி கொடுத்தது நீதி மன்றம்..

1968, டிசம்பர் 25 ஆம் தேதியை யாரும் எளிதில் மறந்துவிடமுடியாது. கீழ்வெண்மணியில் கூடுதலாக கூலி கேட்ட குற்றத்திற்காக தலித் மக்களுக்குக் கிடைத்த தண்டனை மிகக் கொடுமையானது..

திருவாரூரிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடுகிறது கீழ் வெண்மணி கிராமம். சம்பா அறுவடை முடிந்த வயல்களில் பசுமையான பயறுச் செடிகள் காலை வெயிலில் மின்னுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெருந்துயரின் சாட்சியாக அக்கிராமத்தின் நடுவில் நினைவு ஸ்தூபி உள்ளது. கூலி உயர்வுக்காகப் போராடிய தலித் விவசாயத் தொழி லாளர்களை அடக்கி ஒடுக்குவதற்காக தஞ்சாவூர் மிராசுதார்கள் கையாண்ட கொடுமைகளின் உச்சமாக கீழ்வெண்மணி சம்பவம் இருக்கிறது. இது அம்மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்த காலகட்டத்தின் பதிவாகவும் இருக்கிறது.

இங்குள்ள நினைவு ஸ்தூபியில் இறந்த 44 பேரின் பெயர்கள் வயதுடன் பொறிக்கப்பட்டுள்ளன. 5,3 வயதுகளையுடைய குழந்தைகளின் பெயர்களும் அப்பட்டியலில் இருக்கின்றன. அவர்கள் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து அஸ்தியை சேகரித்து வைத்திருந்து கொடுத்திருக்கிறார் விடுதலை வீரர் ஐ.மாயாண்டி பாரதி. அந்த அஸ்தியும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் உள்ளே வாழைப்பூவின் வடிவத்தில் ஒரு சிற்பம் இருக்கிறது. அங்கு தானமாக கொண்டுவந்து மக்கள் கொட்டிய நெல்மணிகள் குவிந்துகிடக்கின்றன. இந்த நெல்மணிகளுக்காகத்தானே போராடினார்கள்?

இச்சம்பவத்தை நேரில் பார்த்தபோது பெரியவர் ராமலிங்கத்துக்கு வயது 22. இப்போது 62 வயதாகும் அவர்: “நாங்கள் ஒரு மூட்டை நெல் அறுப்பதற்கு கூடுதலாக அரைப்படி நெல் கூலி கேட்டுக்கொண்டிருந்தோம். கொடுக்கமுடியாது என்று சொல்லி விட்டார்கள். இந்தப் பின்னணியில் தான் டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஊரில் குடிசைகளுக்கு வரிசையாக தீவைத்தார்கள். எங்கே போவது என்று தெரியாத நிலையில் பயந்து கொண்டுபோய் எல்லோரும் ராமய்யாவின் குடிசைக்குள் புகுந்துகொண்டார்கள். நாயுடு ஆட்கள் அந்தக் குடிசைக்குத் தீவைத்து விட்டார்கள்” என்கிறார்.
 

Thanks to FB Aravind Ramaswamy