ஆடிப்பெருக்கு !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:08 | Best Blogger Tips

 

காவிரிக்கரை நண்பர்களுக்கு ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்
ஆடிப்பெருக்கு என்றால் ஆடிக்காற்றில் புது வெள்ளத்தை அள்ளிக்கொண்டு வரும் காவிரி தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். அதெல்லாம் அந்த காலம்.இப்பொழுது தர்மங்கள் தாழ்ந்து நிற்கும் கலியுகத்தில் காவிரியும் நம்முடைய தர்ம சிந்தனைகளை போலவே சுருங்கி கொண்டு வருகிறாள்.
என்ன இருந்தாலும் காவிரி நம்முடைய தாயல்லவா..அதனால் அவள் பாயும் இடங்களில் எல்லாம் இன்றுஒரே திருவிழா மயமாகத் தான் இருக்கும்.. சரி, ஆடிப்பெருக்கு என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்.
தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிக்கு ஆடிப்பெருக்கு எனும் பெயரில் விழா எடுத்து வழிபடுகிற பழக்கம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச் சிறப்பு.
பெண்ணைப் போற்றுகிற நம் பாரத நாட்டில், பெண்களைப் போல் தியாக குணமும் பாரபட்சமற்ற தயாள குணமும் கொண்டிருப்பதால் நதிகளுக்குக் காவிரி, கங்காதேவி, துங்கபத்ரா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை என பெண்களின் பெயரைச் சூட்டினார்கள் நம் முன்னோர்கள்.
வழக்கமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்கி றோம்.அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கிவிடும் அளவுக்கு மழை பெய்து புது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
அந்த புது வெள்ளத்தை வரவேற்று. ஆடிபட்டம் தேடி விதைத்து என்ற பல மொழியின் படி காவிரிக்கரையில் நெல்லினை பயிரிடத் தொடங்குவார்கள். தங்களுக்கு வாழ்வளிக்கும் காவிரித்தாயை போற்றி சீராட்டிஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே ஆடி மாதம் பதினெட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வரும்பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு விழாவாகும்..
காவிரி நதி உருவானது எப்படி என்பதற்கும் புராணக்கதை ஒன்று உள்ளது. அந்த கதை... சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள்.
அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார். அகத்தியர் தென்னகம் நோக்கி வரும்போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது. கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச்சென்று தான் வசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணி ஆனது என்கிறது புராணங்கள்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ``அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, `தட்சிண கங்கை' என்று பெயர்.அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்'' என்று கூறினார். அதன்படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் `ஆடிப்பெருக்கு' என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ஆடி மாதத்தை அசுப மாதம் என்பார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.
வாழை இலையை விரித்து, அதில் விளக்கேற்றி பூஜைக்குரிய பொருட்களை வைத்து புது மஞ்சள், கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுகிறார்கள்.
வயது முதிர்ந்த பெண் ஒருவர் சுமங்கலி பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண் தனது வீட்டு சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பர்.அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தாலிச்சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக்கொள்வார்கள்.
அப்படி செய்வதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். திருமணத்தன்று மணமக்கள் சூடிய பூமாலைகளை (பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள்) அந்த புதுமணத் தம்பதியரே ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களது இல்லறம் செழிக்கும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
மொத்தத்தில் ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரியும், பவானி ஆறும் சங்கமிக்கும் கூடுதுறை முதல் பூம்புகாரில் வங்கக்கடலுடன் காவிரி கலக்கும் இடம் வரையிலும் ஆடிப்பெருக்கு விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் புனித நீராடவும் செய்வார்கள்.
ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் அரங்கன்ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு அதிகாலை யிலேயேஎழுந்தருள்வார்.அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.
காவிரிக்கு அரங்கநாதர் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம்.

நன்றி-இணையம்