பேசப் பழகுவோம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips



ஓரிடத்துக்கு செல்லுகிறபோது நம்மை புதிதாக பார்ப்பவர்கள், நாம் பேச ஆரம்பிப்ப தற்கு முன்பே நம்மை எடை போட தயாராகிவிடுகிறார்கள்.

நம் நடை, உடை, தோற்றம், பொலிவு, தூய்மை ஆகியவற்றை கொண்டு அவர்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களின் அடிப்படையில்தான் அவர்கள் நம்மிடம் பழகும் விதம் அமைகிறது. கம்பீரமான, அதேநேரத்தில் திமிராக தோன்றாத நடை அழகு, கச்சிதமான, தூக்கலாக இல்லாத உடை போன்றவை நம் ஆளுமையை அதிகரிக்க செய்கிறது. செருப்பு பூமியை தேய்க்க அலட்சியமாக நடப்பவர்கள் பிறரிடம் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறார்கள். இரண்டு பொத்தான்களை திறந்துவிட்டு கொண்டு, நிலா வெளிச்சத்தில் நடப்பதை போல் கருதுபவர்கள் மற்றவர்களின் மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவது இல்லை.அளவான முடி, எண்ணெய் தேய்த்து கலையாமல் காப்பாற்றப்படும்போது தலைக்கு சிறப்பை சேர்க்கிறது. கலைந்த முடியும் அக்கறையற்ற தோற்றமும் சினிமாவில் மட்டுமே எடுபடும்.
...

துலங்கும் முகம், தூய உடை, சுத்திகரிக்கப்பட்ட நகங்கள் என நம் வெளித்தோற்றங்கள்தான் முதலில் நம்மை பற்றிய ஒரு நல்ல அபிப்ராயத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்துகிறது. முன்பின் தெரியாதவர்களிடம் வளவளவென பேசாமல் சுருக்கமாக தெளிவாக பணிவாக பேசும்போது அவர்களையும் அறியாமல் தொடர்பு வலையை பின்ன ஆரம்பித்துவிடுகிறோம். எடுத்தெறிந்து பேசாமல் யாரை பற்றியும் குறை சொல்லாமல் ஆரம்பிக்கிற அறிமுகம், பரஸ்பர விருப்பத்தை விதையூன்ற செய்கிறது.

சொந்த தகவல் பரிமாற்றத்தை பெறுகிற நிபுணத்துவம் நமக்கு தன்னம்பிக்கையையும் சொற்களை பிரயோகிக்கும் ஆற்றலையும் பெற்று தருகிறது. வளரும் போது அது நமக்கு எந்த சூழலிலும் சமயோஜித புத்தியுடன் பேசும் திறன்களை தருகிறது. ஆரம்ப காலங்களில் அடுத்தவர்களுடன் பேசுவதற்கு முன் நம் மனதிலேயே சின்ன ஒத்திகையை பார்த்துவிட்டு தொடங்கும்போது வார்த்தைகள் பிசிறில்லாமல் வந்துவிழும். குழப்பம் இல்லாத கருத்து பரிமாற்றம் நிகழும். அடுத்தவர்களின் பெயர்களை கேட்கும்போது அலட்சியமாக இருக்க கூடாது.

பெயர்களை நினைவு வைத்து கொள்வதன் மூலம் ஒருவர் இதயத்தில் எளிதில் இடம் பெற்றுவிட முடியும். எனவே பெயர்களை கேட்டவுடன் அவற்றை நாம் ஒருமுறை திரும்ப சொல்லி பார்த்து நீண்டகால நினை வாற்றலுக்குள் அவற்றை பதிய வைத்து கொள்ள வேண்டும். மேலும் பேசும் போது எதிரில் இருப்பவர்கள் மீது எச்சில் தெறிக்காமல் நாசுக்காக பேசுவது நல்ல பண்பு.

இன்னொரு விஷயம், ஒருவருடைய சொந்த விஷயங்களுக்குள் நுழைந்து நாம் கருத்து சொல்வது, அது பற்றி அவர்களிடம் விவாதிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருவரது சொந்த விஷயம் பற்றி பேசினால் அவர்கள் நெளிய ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த பயிற்சிகள் நேர்முகத்தேர்வுகளை எதிர்கொள்ளவும், மேடைகளில் முழங்கவும் விவாத மேடைகளில் பங்கெடுக்கவும் சமரச பேச்சுவார்த்தைகளில் சுமூகத்தை நிலைநாட்டவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

( சுட்டி விகடன் இதழில் வெளியான 'உன்னோடு ஒரு நிமிஷம்!' தொடரில் இருந்து)