இந்து மதம் – கேள்வி பதில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:45 | Best Blogger Tips



ஹிந்துத்துவம் என்பது என்ன?
பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.
ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.
ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?
பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.
சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?
பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.
புராணங்கள் உண்மையா பொய்யா?
பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.
புண்ணியம் – பாவம் என்பது என்ன?
பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.
மகாபாரதம் கூறுகிறது -
श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।
परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥
ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |
ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||
“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”
தர்மம் என்பது எது?
பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.
ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?
பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.
சோதிடம் உண்மையா?
பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.
“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?
பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.
தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?
பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?
ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?
பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

நன்றி  vivekanandadasan.wordpress

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:45 | Best Blogger Tips


             கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
நன்றிhttp://www.tamilhindu.net/ மற்றும் vivekanandadasan.wordpress




வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:44 | Best Blogger Tips


தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க  மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள்.சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக  இசைக்கப்படும்போது, அந்த  கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது  ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.
வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம்என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.
அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள்  நடந்தன.
வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும்  வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும்  இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.
வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்ததுஉபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப்  படிக்கவில்லை.
வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும்  அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.
ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில்  காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக்  கதை  சொல்லியிருந்தால்,   தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?
வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத்  தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு  (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப்  போராட்டத்தைச் சொல்லவில்லை.   திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச்  சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.
வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு. 
அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர்.
அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட  வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட  நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது

நன்றி vivekanandadasan.wordpress

இந்து மதம் கூறும் கருத்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:43 | Best Blogger Tips


இந்து மதத்தின் அடிப்படையான புனித நூல் எது ? அந்நூல் கூறுவதைச் சுருக்கமாகத் தர முடியுமா?
இந்து மதத்திற்கு ஆதாரமான புனித நூல்கள் வேதங்களாகும். வேதம் என்றால்மெய்யறிவு அல்லது ஞானம். ஸ்ருதி (வெளிப்பட்ட ஒன்று), ஆகமம் (மரபு வழியாக வழங்கப்பட்டது), நிகமம்  (வாழ்கையின் முடிவான பிரச்சனைகளுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் தீர்வுகள் தருவது) என்ற மூன்று பெயர்களாலும் வேதம் அழைக்கப்படுகிறது. சாதுக்களும் ரிஷிகளும் இறைவனின் அருளால் தங்கள் அனுபூதியில் உணர்ந்து கொண்டவை வேதங்கள்.
வேதங்கள் நான்கு ரிக் , யசுர் ,சாமம் ,அதர்வணம். இவற்றுள் ரிக் வேதம் தான் மிகவும் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வானியில் விவரங்களை வைத்து குறைந்தது எட்டாயிரம் வருடங்களுக்கு முன் அது எழுதப்பட்டது என்று பாலகங்காதர திலகரும் , பல ஆராய்ச்சியாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
பிரார்த்தனைப் பாடல்களின் தொகுதியே ரிக் வேதம் என்று சொல்லலாம் யாகங்களுக்கான சடங்குகள் மற்றும் வழி முறைகளைப் பற்றியது யசுர் வேதம். ரிக் வேதத்திலிருந்து பல பிரார்த்தனை பாடல்களை பண் அமைத்து இனிமையாக்கித் தருகிறது சாம வேதம். குறிப்பிட்ட சில யாகங்களில் எப்படி எப்படி அவற்றை ஓத வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது . நம் முடைய மரபு வழி இசைக்குப் பிறப்பிடமே சாம வேதம் தான். ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் பெறுவது தொடர்பான அறிவியல் துறையான ஆயுர் வேததத்தையும் , பெரும்பாலும் அற நெறிகளையும் உள்ளடக்கிய தொகுப்புஅதர்வண வேதம்.
ஒவ்வொரு வேதமும் மரபுப்படி நான்கு பிரிவுகள் கொண்டது.
1 . மந்திரம் அல்லது சம்ஹிதை 
2 . ப்ராம்மணம் 
3 . ஆரண்யகம் 
4 . உபநிடதம் .
இந்திரன் , வருணன் , விஷ்ணு போன்ற தெய்வங்களை குறித்து  பிரார்த்தனைகளின் தொகுப்பே சம்ஹிதைகள்.  ப்ராம்மணம் என்பதை பிராமணர் என்ற குலத்தோடு தொடர்பு படுத்தி குழப்பக்கூடாது. யாகங்கள் பற்றிய வழி முறைகளை விளக்குவதே ப்ராம்மணம். ஆரண்யகம் என்பது காட்டில் செய்யப்படும் யாக , யக்னங்களை அடிப்படையாக கொண்ட , தியானத்துடன் கூடிய உபாசனைகளை விளக்குகின்றன. தத்துவங்களை ஆராய்ந்து , விளக்கங்கள் தருபவை உபநிடதங்கள். இந்த பிரபஞ்சம் , அதற்கு ஆதராமான பேருண்மை, மனித இயற்கை, வாழ்கையின் குறிக்கோள், அதை அடைவது எப்படி என்பவையெல்லாம் அவற்றில் அடங்கும்.
நன்றி  vivekanandadasan.wordpress

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:38 | Best Blogger Tips


அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன். அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.
அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.  ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.
அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.
நன்றி vivekanandadasan.wordpress

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் — ஆசை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:37 | Best Blogger Tips


வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?  ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்;ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்து  மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம். ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்? “ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார். “அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” “விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
நன்றி :- கவிஞர் கண்ணதாசன்

இந்து மத சடங்குகள் - ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-???

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:32 | Best Blogger Tips


நம்முடைய  முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..
அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து…
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி..
அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர்.
இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..
அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர்.  மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும்.
 நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..
நன்றி தினதந்தி
மற்றும் vivekanandadasan.wordpress

பதினெட்டு சித்தர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:22 | Best Blogger Tips

சித்தர்கள் என்றல் யார்? என்றும் தமிழ் சித்தர்கள் பதினெட்டு என்றும் கிடைத்த தகவல்களை பார்த்தோம்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த பதினெட்டு சித்தர்கள் திரு உருவங்களும், பெயரும், இன்றும் அவர்கள் அருள் தரும் சன்னதிகளின் விவரம் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம்.

1- திருமூலர் - சிதம்பரம்

2- இராமதேவர் - அழகர்மலை

3- அகஸ்தியர் - திருவனந்தபுரம்

4- கொங்கணர் - திருப்பதி

5- கமலமுனி - திருவாரூர்

6- சட்டமுனி - திருவரங்கம்

7- கரூவூரார் - கரூர்

8- சுந்தரனார் - மதுரை

9- வான்மீகர் - எட்டிக்குடி

10- நந்திதேவர் - காசி

11- பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

12- போகர் - பழனி

13- மச்சமுனி - திருப்பரங்குன்றம்

14- பதஞ்சலி - இராமேஸ்வரம்

15- தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

16- கோரக்கர் - பேரூர்

17- குதம்பை சித்தர் - மாயவரம்

18- இடைக்காடர் - திருவண்ணாமலை

பதினெட்டு சித்தர்கள்களின் திரு உருவங்கள்.



மேல் சொன்ன பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும், நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள பழைய ஓலைச்சுவடியின் சான்று.

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது தவிர, மதுரை அழகர் கோவிலின் முன்பாக பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியாக உள்ள "பதினெட்டு படிகளும்", இந்த பதினெட்டு சித்தர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இங்கு ஆடி பதினெட்டு அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

முதலில் சொன்னது போல், இந்த பதினெண் சித்தர்கள் பெயரிலும் பல கருத்தக்கள் கிடைக்கின்றன, அவற்றில் எனக்கு கிடைத்த சில,

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.

இனி இந்த சித்தர்ககள் வாழ்ந்த மற்றும் வாழும் காலத்தை இங்கு பார்ப்போம்.

எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.


1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.

2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.

3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.

4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.

5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.

6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.

7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).

8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.

9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.

10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.

11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.

13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.

14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.

15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.

16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.

17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.

18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

சித்தர்களின் யோகம் மற்றும் யோக முறைகள்

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.

யோக, சமாதி நிலையை அடைய எட்டு அங்கங்களான

1- இயம,
2- நியம,
3- ஆசன,
4- பிராணாயாம,
5- பிரத்தியாகார,
6- தாரண,
7- தியான,
8- சமாதி.

எனப்படும் எட்டு படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும், யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்' என்பவராம். அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் "மஹரிஷி பதஞ்சலி" என்று சொல்லப்படுகிறது.

அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள், வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்கிறார்கள்.

இவர் தந்தை: அத்திரி முனிவர்.
இவர் தாய்: கோணிகா.

இவரின் வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.

இவர் எழுதிய மூன்று நூல்கள்

1- யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
2- மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
3- ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.

ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.

இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான எட்டு மஹா யோக 'சித்தி'களும் ஏற்படும்

யோக 'சித்தி' என்பது என்ன என்று தேடினால்?

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகள் ஆகும். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.

7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

என்ற பல வியக்க வைக்கும் தகவல்கள் கிடக்கிறது.

ஆகவே, இந்த கலி காலத்தில் இறைவனை அடைய, மேல் சொன்ன சித்தர்களின் வாழ்வை படித்து அவர்கள் வாக்குப்படி நடப்போம்.

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:17 | Best Blogger Tips


பொதுவாக எல்லாதரப்பு பணியாளர்களும் அலுவலக அரசியலை சந்திக்க நேரிடும், காரணம் அது ஒவ்வொருவரின் உத்தியோக வளர்ச்சியோடு கலந்திருக்கிறது.

அலுவலக அரசியலில் இருந்து விலகி ஓடுவது என்பது ஒரு நல்ல விசையமாக இருந்தாலும், அது நம் உத்தியோக வளர்ச்சி பாதையில் இருந்து நம்மை தனித்து நிறுத்தி ஒரு மோசமான முடிவையே கொடுக்கும் என்பதுதான் உண்மை.



எந்த ஒரு விசையத்தையும் ஆக்கத்துக்கும் பயன் படுத்த முடியும், அதே அளவு அழிவுக்கும் பயன் படுத்த முடியும் என்ற தத்துவத்தின் படி, அலுவலக அரசியலை சரியான முறையில் சந்தித்து, முறையாக தீர்வு காண்பதன் மூலம், அதை நம் உத்தியோக வளர்ச்சிப்பாதைக்கு உரமாக பயன்படுத்த முடியும்.

அலுவலக அரசியலை கையாளும் உங்கள் தனி திறமையை மற்றும் முறையை பொறுத்து, அது நடைமுறையில் உங்கள் வேலை முறையை உயர்திக்கொள்ளவோ அல்லது கெடுத்துக்கொள்ளவோ வழிவகுக்கும்.

நடைமுறை அலுவலக வாழ்கையில் மக்கள் வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சகஜமாக சந்தித்து இதை அனுபவ படுக்கிறார்கள்.

இதில் சிலர் அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் உடைந்து விடுகிறார்கள், அது அவர்களை "வேலை இழப்பு" அல்லது "வேலை பதவியில்" வளர்ச்சி இல்லாத முடிவில் போய் முடிந்து விடுகிறது.

மற்ற சிலர் இதில் உண்மையாக பாதிக்காவிட்டாலும், அதன் பாதிப்பு இருப்பது போல் பொய்யாக பெரிது படுத்தி காட்டிக்கொள்வதோடு, அவர்கள் செய்வது மட்டுமே சரி என்பது போல் காட்டிக்கொள்வதன் மூலம் இந்த அரசியலை கையாளுவார்கள்.

இத்தகைய அழுத்தம் ஒரு பக்கம் இருக்க, அலுவலக அரசியல் என்பது நம்மை மறைமுக இம்சைக்கு உட்படும் நிலைக்கு கொண்டு வந்து விடும்.

அதன் விளைவே சென்ற பதிவில் பார்த்த "பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது" போன்றவையாகும்.

இப்படி இந்த அலுவலக அரசியலை கையாள குறிப்பிட்ட வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

கடைசியாக பேசுங்கள்: அலுவலக அரசியல் என்பது பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது மோசமான விளைவுகளை கொடுக்க கூடியாதாக இருக்கும், குறிப்பாக விவாதிக்கும் போது அல்லது சில விவாதங்களின் போது. அதனால் "யாகாவராயினும் நா காக்க" என்பதை எப்போதும் நினைவில் வைத்து வார்த்தைகளை அடக்குங்கள்.

உண்மையில் இந்த இடத்தில் மிக எளிதாக உணர்ச்சிகளை தூண்டி அடிக்கடி கோவப்பட்டு திரும்ப வார்த்தைகளை விட்டு சண்டையிட தோணும், ஆனால் எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் வார்த்தைகளை விடுகிறீர்களோ!, அவ்வளவு வேகமாக நீங்கள் இழப்பது உறுதி.



உங்களுக்கு நீங்கள் செய்வது அல்லது உங்கள் தரப்பில் சொல்வது மிக சரி என்று பட்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும் கூட சரி, கண்டிப்பாக நீங்கள் அனைத்து தரப்பில் அல்லது அனைவர் சொல்லவதையும் கவனமாக கவனிப்பதன் மூலம், நீங்கள் சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை மட்டுமே பயன் படுத்துகிறீகள் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

தேவை இல்லாத வார்த்தை விவாதங்களை தவிர்த்து, அந்த பிரச்சனையை சரியான முறையில் வடிவமைத்து வரிசைபடுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம், நீங்கள் உங்கள் கூடுதல் திறமையை அல்லது வழிகாட்டி தலைமை தாங்கும் தன்மையை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

எப்போதுமே சிந்தித்து திட்டமிட்டு செயல்படுங்கள்: எந்த ஒரு விசையதையும் செயல் படுத்தும் முன், நீங்கள் அதை பற்றி தெளிவாக சிந்தித்து திட்டமிட்டுதான் செயல் படுத்துகிறீர்கள் என்பதை உறுதி படுத்த வேண்டும், இதில் மிக குறிப்பாக கவனிக்க வேண்டியது "எப்போதுமே" என்பது, ஒரு போதும் அல்லது எந்த விசையதையும் சிந்திக்க மற்றும் திட்டமிடாமல் ஒதுக்கி விட கூடாது.


அலுவலக அரசியல் மூலம் வர நேரிடும் இழப்பை உங்களிடம் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு மிக முக்கியம். அரசியல் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்த அத்தனை தற்காப்பு நடவடிக்கைகளின் நிழலிலேயே நடக்கும் பிரச்சனைகளை மற்றும் வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு செல்ல வேண்டும்.

மிக சவாலான விசையமாக இருந்தாலும் நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது, உங்களுடைய எல்லா நடவடிக்கையும் எல்லா நேரங்களிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே.

இது அலுவலக செல்வாக்குடன் அதிகாரத்தில் இருக்கும் அலுவலக அரசியல்வாதிகளை சமாளிக்க மிக சிறந்த ஒரு வழியாகும்.

சாதகமாக நடந்து கொள்ளாதீர்கள்: என்னதான் ஒருவர் அல்லது ஒரு அணி செய்வது சரி என்று உங்களுக்கு பட்டாலும், நீங்கள் அவ்வளவு எளிதாக அதற்கு சாதகமாகி, எதிர் அணி செய்வது தவறென்றோ அல்லது அவர்கள் அதை உணர வேண்டும் என்று முறையிடவோ விவாதிக்கவோ வேண்டாம்.

உங்களை நீங்களே ஒரு நடு நிலமையாக்கி கொள்வது நல்லது, சம்மந்த பட்ட இருவர் அல்லது இரு அணிகள் பேசிக்கொள்ளட்டும் அல்லது விவாதித்து கொள்ளட்டும்.

எப்போதும் அலுவலக அரசியலை நேரடியாக எவ்வித தயக்கமும் இல்லாமல் சந்திக்க பழகுங்கள், மேலும் அதை சரியான முறையில் பயன் படுத்தி உங்கள் வழிநடத்தும் திறமையை காட்டும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ளுங்கள், இது உங்கள் அலுவலக வேலையில் அடுத்த நிலைக்கு செல்ல அல்லது வளர்ச்சிக்கு உதவும்.

மற்றவர் நெருக்கடியை, உணர்ச்சியை புரிந்து கொண்டு தகுந்த சமயத்தில் உதவுபவராக இருங்கள்: அது யாராக அல்லது எந்த துறையை சார்ந்தவராகட்டும், ஒரு வேலையை முடிக்க முடியாமல் அல்லது அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, நீங்களாகவே முன் வந்து உங்களால் முடிந்த வரை உதவுவது என்பது, உங்களுக்கு அல்லது உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாதவராக இருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு இடைவெளியை உடைத்து நெருக்கமாக இது வழிவகுக்கும்.

வேலை இடங்களில் நல்ல ஒரு நட்புறவை வளர்க்க இது மிக சிறந்த ஒரு வழிவகுப்பதோடு, உங்கள் உதவிக்கு நன்றியுடன் இருப்பதோடு, அவர் மனதில் நல்ல ஒரு இடத்தை உங்களுக்காக ஒதுக்கும் படி இது உதவும்.

உதவுவதற்கு எப்போதும் எழுந்து நிற்க நீங்களாகவே தயாராக இருங்கள்: வருட ஊதிய உயர்வு நேரத்தில் ஒருவரை ஒருவர் முன் விட்டு பின் பேசுவது என்பது பொதுவாக நடக்க கூடிய ஒன்று தான் என்றாலும், சில நேரங்களில் உங்கள் உடன் அல்லது கீழ் வேலை பார்பவர்களே உங்களுக்கு எதிராக திசை திரும்பி பல மனிதாபிமானமற்ற வதந்திகளை பரப்பி உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம்.


அத்தகைய நேரங்களில் நீங்கள் உறுதியாக நிற்பதோடு மட்டுமில்லாமல், இத்தகைய கீழ்தரமான செயல்களால் நீங்கள் ஒதுங்கிவிட போவதில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் பொறுமையை இழக்காமல் அந்த பிரச்சனையை அல்லது அவர்களை நேரடியாக சந்தித்து ஒரு கட்டுக்குள் கொண்டு வர பழகுங்கள்.

அவர்கள் உங்களால் இம்சைக்கு உட்படுத்த பட்டு இருக்கும் பட்சத்தில், நிலைமையை விளக்கி சொல்லி இறங்கி வர அதாவது மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். ஆனால் இத்தகைய நேரங்களில் உங்கள் மேல் அதிகாரிகளையும் நீங்கள் இந்த பிரச்சனை வலையத்திற்குள் வைத்திருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே பெருமை படுத்தி கர்வம் கொள்ளாதீர்கள்: ஒரு போதும் வளைந்து கொடுக்காமல் எல்லா சூழ்நிலைகளிலும் மிக துல்லியமாக இருப்பது என்பது, உங்களுக்கு நீங்களே மறைமுக எதிரிகளை வளர்த்து கொள்வதாகும்.

உங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ள தயங்காதீர்கள்.

எல்லா இடங்களிலும் நேரங்களிலும் கனிவாக இருக்க பழகுங்கள், உங்கள் கீழ் வேலை பார்ப்பதால், அவர்களை மட்டமாக பார்க்கவோ மறைமுக இம்சை படுத்தவோ வேண்டாம்.

எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகில், ஒரு நாள் உங்கள் கீழ் வேலை பார்த்தவர் கூட உங்களுக்கு அதிகாரியாக வரக்கூடும் இல்லையா?

அதனால் எப்போதும் மற்றவர்களை சமமாக அல்லது உங்களை விட சிறந்தவராக நினைப்பதே சாலச்சிறந்தது.

நேரத்தை கையாளும் கலையில் சிறப்பாய் செயல்படுங்கள்:எவ்வளவு சரியாக செய்கிறோம் என்பதை விட, அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

இறைவன் நமக்கு இரண்டு காதுகளையும் ஒரே ஒரு வாயையும் கொடுத்துள்ளார், எனவே நாம் அதிகம் கேட்க முடியும், அதே நேரத்தில் குறைவாக பேச வேண்டும். எதையும் கேட்கவோ அல்லது சொல்லவோ மிக பொறுமையாக சரியான நேரத்திற்காக காத்திருங்கள்.

புதிய நல்ல எண்ணங்களோடு சிறந்த யோசனைகளையும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். மேல் சொன்னது போல் வதந்திகளை கையாளும் போது, குறிப்பாக மேல் அதிகாரிகளை பற்றி யாரிடமும் மோசமாக பேசுவதை தவிருங்கள்.

உங்களுக்கான சரியான நேரம் அமையும் போது, துணிவாக மற்றும் தெளிவாக உங்கள் மனதில் உள்ள சிந்தனைகளை நடக்கும் ஆலோசனையுடன் ஒப்பிட்டு, சரியான மற்றும் தேவையான கருத்துக்களை சொல்லுங்கள்.

மனஉறுதியுடன் இருங்கள்: அலுவலக அரசியலுக்கு பதில் கொடுக்க மிக சிறந்த வழி என்பது, உங்களால் எவ்வளவு சிறப்பாக செயல் பட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செயல் படுவது மட்டுமே.

உங்களை நீங்களே நல்ல முறையில் வழிநடத்தி துணிவாகவும், அதே நேரத்தில் உறுதியாகவும் செல்வது என்பது எதிரிகளையும் பொறாமைகளையும் வளர்ப்பதிற்கு பதிலாக எளிதாக மற்றவர்களை கவர்ந்து, உங்கள் வழியை பின் பற்ற வைக்கும்.



அலுவலக அரசியல் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக இருக்கப்போவது என்பது, நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது கீழ்த்தரமாக அதில் கலந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் அமைகிறது.

ஆகவே, எப்போதும் மனதில் வைத்திருங்கள், எது வேண்டுமானாலும் வரலாம் போகலாம், ஆனால் கண்டிப்பாக நாம் என்ன செய்தமோ அது நமக்கே ஒரு நாள் திரும்ப கிடைக்கும்.

"நாம் என்ன ஆயுத்தை எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்பது மற்ற இடங்களுக்கு பொருந்தினாலும், அலுவல அரசியலை பொறுத்த வரை, "நாம் கையாளும் முறையை பொறுத்தே, நம் எதிரிகள் கையாளும் முறையும் அமைகிறது"

எனவே கவலைகளை விட்டு விட்டு, தெளிவாக உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள், உறுதியாக உங்களுக்கு "வானம் வசப்படும்".

நன்றி!.

நேர்முக தேர்வு! (நிச்சியம் படிக்க வேண்டியது!)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:15 | Best Blogger Tips
இன்று பெரும்பாலும் கணினி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் என் நண்பனின் வேலை விண்ணப்பத்தை பார்த்தவுடன் வியக்க கூடும்.

காரணம் "வேலையை மட்டும் விரும்பும்" அவன் (பெயர் இங்கு முக்கியமில்லை என்று நினைக்கிறேன்) குறுகிய காலத்தில் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்வது வழக்கம். 

கடந்த பதினான்கு வருடத்தில் பத்து முறை தானாகவே வேலையை மாற்றிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!.

இன்று வேலை செய்யும் நிறுவனத்தை விசுவாசத்துடன் காதலிப்பவர்களே தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையிலும், முழு நேர வேலையில் இருந்தாலும், வேலை செய்யும் நிறுவனத்தை விரும்பாமல், அவனுகென்று ஒரு தனி வழியில் பதினான்கு வருடத்தில் பத்து நிறுவனங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறான்.

சரி, விசையத்துக்கு வருவோம்.

இப்போது நண்பனை தற்போது இருக்கும் நிறுவனம் பொருளியல் மந்தத்தால் வேலையை விட்டு நீக்கி விட்டது, பதினான்கு, பதினைந்து வருட அனுபமுள்ள மற்ற சிலரைப்போல!.

இனி வழக்கம் போல நண்பனுக்கு நடக்கும் ஒரு நேர்முக தேர்வுதான் இந்த இடுகை.



கேள்வி: ஏன் நீங்கள் கடந்த பதினான்கு வருடத்தில் பத்து வேலையை மாற்றியுள்ளீர்கள்? 

பதில்: ஏன், என்றால் என் கடன்களை தீர்த்து, சேமிப்பை கூட்டி, இரண்டாவது முறை ஒரு நிறுவனம் என்னை பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பும்முன் சொந்த வாழ்கையில் ஒரு நல்ல பொருளியல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக. 

கேள்வி: அப்படி என்றால் உங்களுக்கு முன் கூட்டியே தெரியுமா 2009-ம் ஆண்டில் உங்களை உங்கள் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பபோகிறது என்று? 

பதில்: நான் முதல் முறையாக 2002-ம் ஆண்டில், அதாவது முதல் பொருளியல் மந்தத்தை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கப்பட்டேன்.

திரும்ப எனக்கு ஒரு முழு நேர வேலை கிடைக்கவில்லை, 2003 ஜனவரி மீண்டும் பொருளியல் மந்தம் மேலே வரும் வரை. இதனால் நான் கிட்ட தட்ட ஒரு வருடம் வேலை செய்ய எந்த நிறுவனமும் கிடைக்காமல் தவிக்கும் படியாகிவிட்டது.
 

கேள்வி: அது உங்களுக்கு எத்தனையாவது வேலை என்று குறிப்பிட முடியுமா? 

பதில்: ம்ம்ம்...அது என்னுடைய மூன்றாவது வேலை. 

கேள்வி: அப்படி என்றால் உங்கள் பதினான்கு வருட அனுபவத்தில், ஜனவரி 2003 முதல் ஜனவரி 2009 வரை, இடைப்பட்ட இந்த ஆறு வருட காலத்தில் நீங்களாகவே எட்டு முறை வேலையை மாற்றி உங்கள் வேலை எண்ணிக்கையை பத்தாக உயர்த்தி இருக்கிறீர்கள் இல்லையா? 

பதில்: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை. என்னுடைய "முதல் எட்டு வருட" அனுபவத்தில் நான் இரண்டு நிருவனங்களுக்காக மட்டுமே கடினமாக வேலை செய்தேன்.

காரணம், அப்போது நான் நினைத்தது கடின உழைப்பு மட்டுமே வேலையின் பலனை அடைய சிறந்த வழி, மற்றும் நமக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தை நேசித்து அவர்களுடன் நீண்ட நாள் இருக்கவேண்டும் என்று, ஆனால் அது என் முட்டாள்தனம்.
 

கேள்வி: ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கொஞ்சம் விளக்க முடியுமா? 

பதில்: என்னுடைய ஊதியம் அந்த எட்டு வருடங்களில் மிக அளவாகவே உயர்ந்தது, அதனால் என்னால் எந்த வகையிலும் எதையும் சேமிக்க முடியவில்லை.

நான் நினைத்தது எல்லாம், என் நிறுவனத்திடம் நீண்ட நாள் நல்ல உறவில் உள்ள என்னிடம் ஒரு நிரந்தர வேலை உள்ளது, அதனால் கவலை அடைய தேவை இல்லை என்பது மட்டுமே. ஆனால் என் வேலையை இழந்தால் நான் என்ன செய்ய முடியும்?

என்னால் கற்பனை கூட பண்ணமுடியாத ஒரு விசையம் நான் வேலையை இழந்தது "பொருளியல் மந்தம்" என்ற ஒரே காரணத்தால் மட்டுமே!, எனக்கு வேலைதிறமை இல்லை என்ற காரணத்தால் அல்ல!. இது நடந்தது ஜனவரி 2002-ல்


கேள்வி: ஓ, அப்படியா!, சரி அதன் பின் இந்த இடைப்பட்ட ஜனவரி 2003 முதல் 2009 வரை என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

பதில்: கண்டிப்பாக, இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்பது, ஒரு "நிறுவனத்தில் அல்லது ஒரு வேலையில் திருப்த்தி அடைவது" என்பதும், "பணம் சம்பாதிக்கவோ அல்லது போதுமான சேமிப்பில் திருப்த்தி அடைவது என்பதும்" ஒன்றல்ல என்பதை.

ஆனால், சேமிப்பு என்பது போதுமான வருமானம் இல்லாமல் முடியாதது, ஆகவே நான் என் விருப்பத்தை பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பை நோக்கியும் திருப்பினேன். இதனால் ஆறு வருடத்தில் எட்டு நிறுவங்களை மாற்றினேன் "ஒவ்வொன்றும் உறுதியாக என் பொருளியலை நிலையை உயர்த்தும்" பட்சத்தில்.


கேள்வி: அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் நேர்முக தேர்வு எடுத்தவர்களிடமும் நீங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள், அதாவது நீங்கள் முன் கூட்டியே குறிப்பிட்ட இடைவெளியில் திட்டமிட்டு உங்கள் வேலையை மாற்றுவதை மறைத்து விட்டீர்கள் அப்படிதானே?

பதில்: ஆமாம், பொருளியல் சந்தை எப்போது நன்றாக இருக்கிறதோ, எப்போது நிறுவங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறதோ, அப்போது தானே வேலையை மாற்ற முடியும் அல்லது வேலையில் சேர முடியும்!.

இவ்வளவு ஏன்! நீங்களே சொல்லுங்கள் பொருளியல் மந்தமாக இருக்கும் இந்த நேரத்தில் எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காது இல்லையா!.

ஆகவே, எப்போது சந்தை நன்றாக இருக்கிறதோ அப்போது தான் ஒருவர் தன் வேலையை அதிக ஊதியத்துடன் மாற்றிக்கொள்ள முடியும், காரணம் அப்போதுதான் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் மற்றும் போதுமான ஊதியத்தை தர சம்மதிக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.
 

கேள்வி: சரி, இப்படி செய்ததன் மூலம் இன்று என்ன சாதித்து விட்டீர்கள் என்பது இங்கு உங்கள் கருத்து? 

பதில்: மிக அருமையான ஒரு கேள்வி, இதைத்தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். ஜனவரி 2003-ல் எனக்கு ஒரு நிலையான ஊதியம் (எந்த மாறுதலும் இல்லாமல்).

ஒரு பேச்சுக்காக என் ஊதியம் 2003-ம் வருடம் "X" என்று வைத்தால் 2009-ல் என் ஊதியம் "8*X" ஆகிவிட்டது.

உதாரணமாக, 2003-ம் வருடம் மூன்று லட்சமாக இருந்த என் ஊதியம் 2009-ல் இருபத்திநான்கு லட்சமாகி விட்டது (எந்த மாறுதலும் இல்லாமல்).

மேலும், நான் ஒரு போதும் பதவி மாறுதலை பற்றி கவலை பட்டது இல்லை. காரணம், ஒரு வருடம் முழுவதும் வேலை பார்த்து முடிந்து, பின் நிறுவனம் தன் ஊதிய உயர்வு முறையை நடைப்படுத்தி அதன் பின் அவர்கள் தரும் ஊதிய உயர்வு வரும் வரை காத்திருக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.
 

கேள்வி: அப்படி என்றால், நீங்களாகவே உங்கள் ஊதிய உயர்வை தீர்மானித்து கொண்டீர்களா?

பதில்: ஆமாம், 2001-2002-வில் வந்ததை போல இனி ஒரு பொருளியல் மந்தம் 2003-ல் இப்போதைக்கு இன்னொரு முறை வருமா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. அதனால் அடுத்த பொருளியல் மந்தம் எப்போது வரும் என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால், நான் ஒரு விசையத்தில் மிக உறுதியாக இருந்தேன். இன்னொரு முறை பொருளியல் மந்தம் காரணமாக நான் வேலையை இழக்கும் முன் நான் எந்த கடனும் இல்லாமல் ஒரு நிலையான சேமிப்போடு இருக்க வேண்டும் என்பதில். ஆகவே நான் வருட முடிவுக்காக காத்திருக்காமல், என் ஊதிய உயர்வை நானே ஏற்படுத்திக் கொண்டேன்.


கேள்வி: அப்படி என்றால், இப்போது உங்களுக்கு எந்த கடனும் நிலுவையில் இல்லையா?

பதில்: ஆமாம், வேலை மாற்ற முறையில் நான் நிறையவே சம்பாதித்து விட்டேன். அதில் என் இன்றைய நிலைக்காக கொஞ்சம் செலவழித்தும் இருக்கிறேன்.

என்னிடம் சொந்தமாக எந்த கடனும் இல்லாத ஒரு மூன்று படுக்கை அறை வீடு (2400 சதுர அடியில்) உள்ளது, மேலும் மாத தவனை பாக்கி எதுவும் இல்லாத ஒரு சொகுசு கார் இருக்கிறது, மீத கையிருப்பு தொகைக்காக வங்கிகள் மாத வட்டி தருகின்றன, அது இப்போது என் இதர தேவைகளை பூர்த்தி செய்கிறது.

நிதி நெருக்கடிகாக ஒரு நிறுவனம் என்னை வேலை விட்டு தூக்கினால், தூக்கட்டும்! இப்போது நிதி நெருக்கடி என்பது எனக்கல்ல, நிதி நெருக்கடி அந்த நிறுவனத்துக்கு மட்டுமே.

இதோ, இன்று மீண்டும் பொருளியல் மந்தம் காரணம் காட்டி நான் வேலையை விட்டு நீக்கபட்டு விட்டேன், இதை நான் மறுக்கவில்லை, அதே நேரத்தில் யாரையும் குறையும் சொல்லவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
 

கேள்வி: யார் குறை சொல்வது? யாரை குறை சொல்கிறார்கள்? 

பதில்: கிட்டதட்ட வேலை இழந்து பொருளியல் மந்தத்தால் திரும்ப வேலை கிடைக்காமல் தங்கள் வீடு, கார் போன்றவற்றின் மாததவணைகளை கட்ட முடியாத அனைவருமே குறை சொல்லுகிறார்கள்!


சொன்னால் வேடிக்கையாக இருக்கும், இவர்களில் பலர் என்னை முன்பு "நான் வெறும் வேலையை விரும்புபவன் எனக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் எந்த விசுவாசமும் கிடையாது" என்று சொல்லி கேலி செய்தார்கள்.

இன்று, நான் அவர்களை பார்த்து கேட்கிறேன், அவர்களின் நிறுவன விசுவாசத்தால் அவர்கள் சம்பாதித்தது அல்லது சாதித்தது என்ன? காரணம், இப்போது அவர்களும் என்னைப் போலவே வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் நேசித்த அதே நிறுவனத்தால்.

இப்போது அவர்கள் என்னை என்ன சொல்கிறார்கள் தெரியுமா!, நீ ஏன் சொல்ல மாட்டாய் மேலும் கவலை பட போகிறாய்!. உனக்குத்தான் எந்த கடனும் நிலுவையில் இல்லையே என்று!.

காரணம், அவர்கள் அனைவருக்கும் பனிரெண்டு முதல் பதினான்கு லட்சம் கடன் தொகை நிலுவையில் இருந்தது, அவர்கள் நேசித்த நிறுவனமே அவர்களை வேலையை விட்டு நீக்கும் போது.
 

கேள்வி: சரி, வேலை செய்யும் திறமையான பணியாளர்களுக்கு உங்கள் அனுபவ அறிவுரை என்ன? 

பதில்: திரு.நாராயண மூர்த்தியை போல, உங்கள் வேலையை மட்டும் நேசியுங்கள், ஆனால் உங்கள் நிறுவனத்தை அல்ல!.

ஏன் என்றால்? உங்களுக்கு தெரியாது, எப்போது உங்கள் நிறுவனம் உங்களை நேசிப்பதை நிறுத்திவிடும்! என்று அவர் சொன்னார்.

இந்த வரிகளை தொடர்ந்து நான் சொல்வது.

உங்களை நேசியுங்கள், உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அதிகம் தேவை, உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் தேவைபடும் அளவை விட!.

நிறுவனங்கள் உங்கள் வாழ்கையில் மாறலாம், வரலாம் போகலாம். ஆனால், உங்கள் குடும்பம் அப்படியே மாறாமல் வாழ்நாள் முழுவதும் உங்களுடனேயே இருக்கும்.

முதலில் உங்களுக்கு போதுமான பணத்தை சம்பாதியுங்கள், அதே நேரத்தில் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிக்க உழையுங்கள்.

அப்படி இல்லாமல், இதன் அடுத்த வழியான நிறுவனம் மட்டும் சம்பாதிக்கும் வழியில் வெறும் நிறுவன விசுவாசத்தோடு மட்டும் இருப்பதில் கடைசியில் பாதிக்கப் பட போவது நீங்கள் மட்டுமே, கட்டாயம் நிறுவனம் அல்ல.
 

கேள்வி: உங்கள் அனுபவத்தில் நீங்கள் நிருவனங்களின் செய்கையில் பெரிதும் வருத்தப்படும் விசையம் என்ன? 

பதில்: எப்போதெல்லாம் ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் படுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தின் "சி.இ.ஓ (CEO)" பேசுவார்.

அருமையான வேலை மற்றும் கூட்டு முயற்சி நண்பர்களே, வாழ்த்துக்கள்!. இது உங்கள் நிறுவனம், எனவே உங்கள் கடின உழைப்பை இதே போல் தொடருங்கள், உங்களோடு நானும் எப்போதும் இருக்கிறேன் என்று.

ஆனால், எப்போது பொருளியல் மந்தமாகி அந்த நிறுவன லாபம் சரிவை நோக்கி செல்கிறதோ, அப்போது அதே "சி.இ.ஓ (CEO)" சொல்லுவார்.

இது என் நிறுவனம், என் நிறுவனத்தை காப்பாற்ற நான் பொருளியல் மந்த கால நடவடிக்கைகளை எடுத்து என் நிறுவன செலவுகளை குறைக்கும் திட்டத்தில் (Cost Cutting), உங்களில் சிலரை வேலையை விட்டு அனுப்புவதும் உட்படுகிறது என்று.

இது என்னை "தொழிலுக்கு இதயம் கிடையாது (Business never have Heart)" என்று நினைத்து வருத்தப்பட வைக்கும் ஒரு விசையம் ஆகும்.

ஆகையால், திறமையான பணியாளர்களுக்கு நான் இங்கு சொல்வது, உங்கள் தனிப்பட்ட பொருளியல் நிலையை பற்றி மட்டும் முதலில் சிந்தியுங்கள், காரணம் பெருளியல் மந்தத்தில் நீங்கள் வேலையை இழக்கும் போது,

"தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாத குறைகளோடு உங்கள் முன் நிற்பது உங்கள் குழந்தைகளே தவிர, நிச்சியமாக, உங்கள் நிறுவனமோ அல்லது "சி.இ.ஓ (CEO)" அல்ல."

நன்றி!.
 
singakkutti.blogspot

பி.கு:- இந்த அனுபவ அறிவை எனக்குள் புகுத்தி, என் அறிவு கண்ணை திறந்த "காமாச்சிக்கு".

"நீ நட்பின் வடிவமாய் அல்ல, அந்த "காஞ்சி-காமாச்சி"யாகவே என் கண்களுக்கு தெரிகிறாய்", உனக்கும் நம் நட்புக்கும் நன்றி!.