பக்கங்கள்

வேதம்


வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் அறிதல் என்று பொருள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:
என்பனவாகும்.
இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசயநகர ஆட்சியில் புக்க அரசர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை:
  1. சம்ஃகிதா - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
  2. பிராமணா எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
  3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
  4. உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.
கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராம்மணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக் குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு. வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.

நன்றி தமிழ்வீக்கிபிடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது.

http://ta.wikipedia.org/s/80l